திருமறைத்தீபம் 2020 -ம் ஆண்டு முதல் இதழ்
1. வாசகர்களே!
2. வாஷிங்டனுக்குப் போகலாம் வாங்க!
3. ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து
4. குருடன் குருடனுக்கு வழிகாட்டுவதுபோல்
5. சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே! – A.W. பின்க்
2020 இதழ் 1
வணக்கம் வாசகர்களே! இந்த இதழ் நாம் வெளியிட்டிருக்கும் நூறாவது இதழ்! இதில் வந்திருக்கும் ஆக்கங்கள் உங்களுக்குப் பயனுள்ளவையாக இருக்கும் என்று நம்புகிறேன். முதலாவது ஆக்கம் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனைப்பற்றியது. வாஷிங்டன் மிகச் சிறப்புவாய்ந்த வரலாற்றைத் தன்னில் கொண்டிருக்கும் நகரம். அங்கு போகும் அமெரிக்கர்கள் அதன் வரலாற்றுச் சிறப்பை நினைவுகூரவே அங்கு போவார்கள். ஒரு புனித இடத்தில் கால் பதித்தது போன்ற ஓர் உணர்வை வாஷிங்டன் ஏற்படுத்தும். அந்தளவுக்கு அரும்பெரும் வரலாற்றுப் பெருமைகளை நமக்கு அது நினைவுறுத்துவதாக இருக்கிறது. இரண்டு நாட்கள் அந்த நகரில் தங்கி அதன் வரலாற்று சிறப்புமிகுந்த பகுதிகளை நான் போய்ப்பார்த்தேன். அதன் வரலாற்றுப் பெருமையில் திளைத்து வியந்து நின்றேன். இன்னுமொரு முக்கிய விஷயம் அந்த வரலாற்றில் அமெரிக்காவின் கிறிஸ்தவ வரலாறும் இணைபிரியாமல் பதிந்து காணப்படுகிறது. கிறிஸ்தவர்களைத் தலைவர்களாகக் கொண்டு பிறந்தது தானே அமெரிக்கா. ஆக்கத்தை வாசித்து அந்நகரின் சிறப்பை உணர்ந்து நம்மாண்டவரைத் துதியுங்கள்.
இது தவிர வேறு இரண்டு ஆக்கங்களையும் எழுதியிருக்கிறேன். ‘வழி தவறிப்போன ஆடுகள்’ வேதம் நமக்கு உதாரணமாகப் பயன்படுத்தும் ஆட்டின் இயற்கைத் தன்மையை விளக்குகிறது. சும்மாவா ஆண்டவர் நம்மை ஆட்டுக்கு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இதுவரை ஆட்டைப்பற்றி இந்தளவுக்கு எண்ணிப் பார்த்திராதவர்களுக்கு இது நிச்சயம் உதவி செய்யும். இங்கே செம்மறி ஆட்டைப்பற்றித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்பதை மறவாதீர்கள். ஆடுகளை மேய்க்க நியமிக்கப்பட்டிருக்கும் மேய்ப்பர்கள் இனித் தங்கள் பணியில் கவனத்தோடு நடந்துகொள்ள இது பயன்பட்டால் அது சந்தோஷந்தான். ‘குருடனுக்கு குருடன் வழிகாட்டுவதுபோல்’ ஆக்கம் பரிதாபத்துக்குரிய நம்மினத்து கிறிஸ்தவத்தை மறுபடியும் அலசுகிறது; அங்கலாய்க்கிறது; ஆதங்கப்படுகிறது; ஆலோசனையும் தருகிறது. புதிய வருடத்தில் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் ஒரு மாற்றமேற்படுமானால் கர்த்தருக்கு நன்றி! பெரியவர் பிங்கின் மொழியாக்கம் செய்யப்பட்ட தொடராக்கமும் இதில் வந்திருக்கிறது. ஒவ்வொரு பிரசங்கியும் அடுத்த பிரசங்கத்தைத் தயாரிக்குமுன் வாரத்தின் திங்கள் தோறும் வாசிக்க வேண்டிய அருமையான ஆக்கம். புதிய வருடம் உங்களுக்கு ஆசீர்வாதமான வருடமாக அமைய கர்த்தர் கிருபை பாராட்டட்டும். – ஆர்
வாஷிங்டனுக்குப் போகலாம் வாங்க!
சிறுவனாக இருந்தபோது எனக்கு வாசிப்புப் பழக்கம் அதிகம். சாவி என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட சா. விசுவநாதன் அந்தக் காலத்தில் அருமையான ஒரு புனைநாவல் எழுதியிருந்தார். வாஷிங்டனில் திருமணம் என்பது அதன் தலைப்பு. ஆனந்தவிகடனில் அது தொடராக வந்து, பின்பு நூல் வடிவில் நாவலாக வெளிவந்தது. தமிழகத்தில் இருந்த ஒரு பிராமணக் குடும்பத்தார் வாஷிங்டனில் வசித்த பணம்படைத்த ராக்கபெலர் அம்மையாரின் விருப்பத்தினால் ஒரு தமிழ் திருமணத்தை வாஷிங்டன் நகரில் நடத்தினார்கள். அந்தத் திருமணத்திற்குத் தமிழகத்து வாடை முழுமையாக இருக்கவேண்டும் என்பதால் நரிக்குறவர்களும் தமிழகத்தில் இருந்து பிரைவெட் விமானம் மூலம் வாஷிங்டன் கொண்டுபோகப்பட்டிருந்தார்கள். அதுவும்போதாதென்று அமெரிக்க நாய்களுக்குத் தமிழகத்து நாய்கள்போல் குறைக்க முடியவில்லை என்பதால் நாய்கள்கூட தமிழகத்தில் இருந்து வாஷிங்டன் கொண்டுபோகப்பட்டிருந்தன. பிராமணத் தமிழில் சாவி வெலுத்துக்கட்டியிருந்த ஓர் அருமையான நகைச்சுவை புனைநாவல் அது. நான் ரசித்து வாசித்திருந்த ஒரு நூல்.
வாஷிங்டனில் திருமணம் நூல்பற்றி நான் எழுதுவதற்குக் காரணமென்ன? அநேக தடவைகள் நான் அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருந்தபோதும், வாஷிங்டன் நகரின் விமான நிலையத்தில் இறங்கியிருந்தபோதும் அந்த நகரத்தில் கால்வைத்து சுற்றிப்பார்த்ததில்லை. அப்படிப் பார்ப்பது ஒன்றும் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. வாஷிங்டன் அமெரிக்காவின் தலைநகரம். பொதுவாக அமெரிக்காவை நினைத்துப் பார்க்கும்போது எல்லோரும் நியூயோர்க் நகரத்தையே நினைத்துக்கொள்ளுவார்கள். அமெரிக்காவில் ‘பிக் ஆப்பிள்’ (Big Apple) என்று அழைக்கப்படும் பெரும் நகரம் அது. இருந்தபோதும் தலைநகரம் வாஷிங்டனே. இந்த வருடம் திடீரென்று வாஷிங்டன் நகரத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் சமீபத்திய அமெரிக்க பயணத்தின்போது வாஷிங்டன் நகரில் இருநாட்கள் இருக்கும்படியாக என்னுடைய பயணத்திட்டத்தை வகுத்துக்கொண்டேன். அமெரிக்காவுக்குப் பல தடவைகள் போய் பரிச்சயம் இருந்ததால் வாஷிங்டனைச் சுற்றிப்பார்க்க எனக்கு எவர் உதவியும் தேவை இருக்கவில்லை. இரண்டு நாட்களில் முக்கிய பகுதிகளையெல்லாம் சுற்றிப்பார்ப்பது என்று முடிவெடுத்து நானே எனக்குக் கைடாக இரண்டு நாட்களுக்கு கால் நடையாக முக்கிய பகுதிகள் அனைத்தையும் சுற்றிப்பார்த்தேன். அதில் ஒரு வசதியிருந்தது. வாஷிங்டனில் பார்க்க வேண்டிய வரலாற்றுச் சிறப்புள்ள அத்தனையும் ஒரே பகுதியில் அமைந்திருக்கின்றன. வெள்ளை மாளிகை, கெப்பிட்டல் ஹில், வாஷிங்டன் நினைவுச் சின்னம், ஆபிரகாம் லிங்கன் நினைவுச் சின்னம், உலகப் போர் மற்றும் கொரியன் யுத்த நினைவுச் சின்னங்கள், ஜெபர்சன் நினைவுச் சின்னம், சுப்ரீம் கோர்ட், நூல்நிலையங்கள், பிரதான கட்டடங்கள் எல்லாம் குறைந்தது பத்துக் கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் தலைசுற்றும்படியாக இல்லாமல் இலகுவாகப் போய்ப்பார்க்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தன. என்ன! எல்லாவற்றையும் பார்ப்பதற்கு நேரமும், நடையும் அவசியம். பொறுமையாக நடந்து சுற்றிப்பார்க்கும்போது நமக்குப் பிடித்தவிதத்தில் பிடித்த கோணத்தில் எதையும் படமெடுத்துவிடலாம்; அவசரப்படத் தேவையில்லை. முதல் நாள் பத்து கிலோமீட்டர்கள் நடை. அத்தனை கீலோமீட்டர்கள் இதற்கு முன் நான் நடந்ததில்லை; ஓடியிருக்கிறேன். இரண்டாம் நாள் சுற்றிப்பார்ப்பதோடு உடல்பயிற்சியையும் சேர்த்து செய்துவிடலாமென்று என் ஜிம் உடைகளை அணிந்துகொண்டு சுற்றிப்பார்க்கக் கிளம்பினேன். ஓட்டமும் நடையுமாக இரண்டாம் நாளும் பத்து கிலோமீட்டர்கள். கர்த்தரின் கிருபையால் உடல் வாதைகள் ஒன்றும் இருக்கவில்லை.
வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை
முதல் நாள் நேரடியாக அமெரிக்கத் தலைவரின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகைக்குப் போனேன். அதைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு. புதிதாக, முன்பிருந்ததைவிட உயரமான இரும்பாலான ஒரு வேலியை இப்போது அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் நின்று மட்டுமே வெள்ளை மாளிகையைப் பார்க்கமுடியும். வெள்ளை மாளிகைக்குள் போய்ச் சுற்றிப்பார்ப்பது என்றால் முன்கூட்டியே பாஸ் எடுத்திருக்கவேண்டும். அதற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரொருவரின் சிபாரிசு தேவை. இருந்தபோதும், பென்சில்வேனியா அவென்யு, கொன்ஸ்டன்டைன் தெரு இரண்டிலும் நடந்து வெள்ளை மாளிகை முழுவதையும் வெளியில் இருந்து சுற்றிப் பார்த்துவிட்டேன். பென்சில்வேனியா அவனியுவில் இருந்து வெள்ளை மாளிகையின் வடப் பசுந்தரையைக் காணமுடியும். லபேயிட் சதுரத்தோட்டத்தைக் கடந்து (Lafayette Square garden) இதை அடைய முடியும். இந்தக் கார்டனில் அமெரிக்கப் புரட்சி யுத்தத்தின் முக்கிய ஜெனரலாக இருந்த லபேயிட்டினுடையதும், அமெரிக்க ஜெனரலாகவும் பின் அமெரிக்கப் பிரெசிடன்ட்களில் ஒருவராகவும் இருந்த அன்ட்ரூ ஜெக்சனுடையதும் சிலைகள் அழகாக நின்றுகொண்டிருக்கின்றன. வாஷிங்டனைச் சுற்றிப் பார்க்கின்றபோது அமெரிக்காவின் அருமையான வரலாற்றை நினைவுபடுத்தும் சிலைகள், கட்டடங்களைக் காணாமல் இருக்கமுடியாது.
லபேயிட் சதுரத்தோட்டத்திலுள்ள அன்ட்ரூ ஜெக்சனின் சிலை
வெள்ளை மாளிகை ஒன்றும் லண்டனில் மகாராணி வசிக்கும் பக்கிங்கம் பெலஸ் போன்று மிகப்பெரிய கோட்டை போன்ற மாளிகை அல்ல. (அமெரிக்கர்களிடம் இதைச் சொல்லிவிடாதீர்கள்!). இருந்தாலும் வெள்ளை மாளிகை மிகவும் சிறப்பானது. ஏன் தெரியுமா? அமெரிக்கத் தலைவர்கள் அதை வாசஸ்தலமாகப் பயன்படுத்திவருவதால்தான். உலக நாடுகளிலெல்லாம் சிறப்பான, செல்வமிக்க, பெரும் பலம் வாய்ந்த நாடாக அமெரிக்கா இருந்துவருகிறது. அதன் தலைவர் உலகத் தலைவர்களில் பலம்மிக்க, செல்வாக்குள்ள தலைவராக மதிக்கப்பட்டு வருகிறார். அவர் வசிக்கும் இடம் என்றால் அதற்குப் பெரும் மதிப்பிருக்காதா, என்ன?
நான் வெள்ளை மாளிகையைப் பார்க்கப்போன நாளில் அநேக நாடுகளில் இருந்து உல்லாசப்பிரயாணிகள் வந்திருந்தார்கள். வெள்ளை மாளிகையின் வட பகுதி கேட்டின் முன்னால் அரசின் போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒருசிலர் அட்டைகளைக் கையில் தாங்கி நின்று தங்களுடைய அதிருப்தியைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். உலகின் முன்னணி ஜனநாயக நாடாக அமெரிக்கா இருப்பதால் இத்தகைய அதிருப்தியை அமைதியாக அரசுக்குத் தெரிவிக்க முடியும். இதுவரை வெள்ளை மாளிகையை, அதை எதிரிகள் தாக்குவதுபோல் எடுக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களில்தான் பார்த்திருக்கிறேன். இப்போது நேரடியாகக் கண்களால் அதைப் பார்க்கும்போது அதைப்பற்றிய வரலாற்று உண்மைகள் என் மனக்கண்களில் வட்டமிட ஆரம்பித்தன. ஜோர்ஜ் வாஷிங்டன் முதல் பிரசித்திபெற்ற ரொனல்ட் ரீகன்வரை எத்தனைப் பெரும் தலைவர்கள் இதில் வாசம் செய்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் வெறும் தலைவர்களா என்ன? உலக சமாதானத்துக்காக எத்தனையெத்தனை நெருக்கடிகளைத் தங்கள் காலத்தில் சந்தித்து, தீவிரமான முடிவுகளைத் தகுந்த காலத்தில் எடுத்து நாட்டையும் உலகத்தையும் பேராபத்துக்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறார்கள். அமெரிக்கத் தலைவர்கள் தனிமனிதர்களாக இருந்திருந்தபோதும், வெள்ளை மாளிகையில் வசிக்கும் தகுதி அவர்களை அதற்கெல்லாம் மேலுயர்த்தி பொதுச்சொத்தாக, உலகத் தலைவர்களாக்கியிருக்கிறது.
அமெரிக்காவின் முதல் பிரெசிடன்டாக இருந்த ஜோர்ஜ் வாஷிங்டன் பிரபலமானவர். அவர் பெயரில் இன்று நினைவுச் சின்னங்களும், கட்டடங்களும், பெரும் பாலங்களும், நூல்நிலையமும் அமெரிக்காவில் இருந்து வருகின்றன. அவரைப்பற்றி பின்பு விபரமாகப் பார்ப்போம். அவருக்குப் பின் தொமஸ் ஜெபர்சன், அன்ட்ரூ ஜெக்சன், ஆபிரகாம் லிங்கன், பிரெங்க்ளின் டி ரூசவெல்ட், ஹெரி ட்ரூமன், ஐஸ்ஷனோவர், ஜோன் கென்னடி, நிக்சன், ரொனல்ட் ரீகன் என்று எத்தனையெத்தனைப் பெருந்தலைவர்களை உலகம் சந்தித்திருக்கிறது, இவர்களையெல்லாம் சுற்றித்தான் எத்தனைப் பெரும் வரலாற்றுச் சரிதங்கள்! அமெரிக்கா அவர்களுடைய தலைவர்களை மதிக்கும் ஒரு நாடு. அந்தத் தலைவர்களை தனிமனிதர்களாக மட்டும் அந்த நாடு பார்ப்பதில்லை. நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சின்னமாக அவர்களை அது கணிக்கிறது. அதனால்தான் அமெரிக்க பிரெசிடன்டாக அந்நாட்டில் ஒருவர் வருவதென்பது சுலபமான காரியமல்ல. எந்தளவுக்கு அவர்கள் விடும் தவறுகளை அது சுட்டிக்காட்டாமல் இருப்பதில்லையோ அந்தளவுக்கு அவர்களுடைய ஆட்சிச் சிறப்பையும் அது மதித்துப் பாராட்டாமலிருப்பதில்லை. உலகத்தில் மிகப்பலம் வாய்ந்த பதவியாக இருக்கிறது அமெரிக்காவின் தலைவர் பதவி. வெள்ளை மாளிகைக்கு முன் நின்றுகொண்டிருந்தபோது என் நினைவுகள் சிறகடித்துப் பறந்து அதன் பெருந்தலைவர்கள் ஒவ்வொருவரையும் மனதில் அசைபோட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் நாட்டுக்காகச் செய்திருக்கும் தியாகங்கள்தான் எத்தனை! வரலாறு எத்தனை அருமையான பாடம் தெரியுமா? வரலாற்றையும், வாழ்க்கைச் சரிதங்களையும் வாசிக்கக் கற்றுக்கொண்டவர்கள் ஒருபோதும் வீண்போவதில்லை.
வாஷிங்டன் நினைவுச் சின்னம்
வாஷிங்டன் நினைவுச் சின்னம்
வெள்ளை மாளிகையைப் பார்த்த அனுபவத்தை மனதில் அசைபோட்டுக்கொண்டே அதற்கு அடுத்தபடியாக வாஷிங்டன் நினைவுச் சின்னத்தைப் பார்க்க நடைபோட்டேன். அன்று நல்ல வெய்யில். 24 செல்சியஸ் இருந்திருக்கும். நடப்பதற்கும் சுகமாக இருந்தது. வெள்ளை மாளிகையை அடுத்து ஒரு அருமையான கட்டடத்தைக் கண்டேன். மிகப் பெரிய கட்டடம், ஆனால் பழமையை நினைவுபடுத்தும் கட்டடக்கலை. இன்று அமெரிக்க அரச நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அது இருந்து வருகிறது. அதற்கு ஐஸ்ஷனோவர் (பிரெசிடன்ட்களில் ஒருவர்) நிர்வாகக் கட்டடம் என்று பெயர். இது வெள்ளை மாளிகையின் வெஸ்ட் விங்கில் இருக்கிறது. கிழக்குப் பகுதியில் இன்னுமொரு அருமையான நிதிஅமைச்சகத்தைச் சார்ந்த கட்டடம் இருக்கிறது. இக்கட்டடங்களைப் பார்த்து வியந்துகொண்டே தொடர்ந்து நடந்தேன்.
ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவகம் மிக உயரமான விண்ணை எட்டும் வகையில் நிற்கும் கல்தூண். வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் பிரெசிடன்ட் (1789-1797) மட்டுமல்ல அவரே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் தன் படைகளோடு பிரான்சுப் படைகளை இணைத்துப் படை நடத்தி வெற்றி பெற்று அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர். அவரே அமெரிக்க கொன்ஸ்டிடியூஷனை வரைந்த குழுவுக்குத் தலைமை தாங்கி நாட்டுக் கொன்ஸ்டிடியூஷனை அமைத்தவர். அவரே நாடாளும் அரசமைப்பையும் உருவாக்கினார். அமெரிக்காவுக்கு அவரளித்த அநேக பங்களிப்புகளுக்காக அவரை அந்நாடு ‘தேசபிதா’ என்றழைக்கிறது. நாட்டின் டொலர் நோட்டுட்பட அவருடைய அடையாளச் சின்னமில்லாத ஒன்றையும் அமெரிக்காவில் பார்க்க முடியாது. அமெரிக்கப் பிரெசிடன்ட்டுகளில் தலைசிறந்தவர் என்று வாஷிங்டன் அழைக்கப்படுகிறார். தலைநகரில் வானுயரந்து நிற்கும் அவருடைய நினைவுச் சின்னம் அதற்குச் சாட்சி பகர்ந்து வருகிறது. அங்கு நின்று அந்த நினைவகத்தை அன்னாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த எண்ணங்கள் எல்லாம் என் மனஅலையில் நீச்சலிட்டன.
அமெரிக்கர்கள் அதிகம் நாட்டுப்பற்று உள்ளவர்கள். எங்கு பார்த்தாலும் அந்நாட்டில் அமெரிக்க கொடியைக் காணலாம். மக்கள் தங்கள் வீடுகளிலும் வீட்டுக்கு வெளியிலும் அந்தக் கொடியைப் பறக்கவிடுவார்கள். அந்தக் கொடிக்கு அந்நாடு வேறெங்கும் இல்லாதவகையில் மதிப்பளிக்கின்றது. இந்தளவுக்கு அங்கு பேட்ரியோட்டிஷம் தலைதூக்கி நிற்கின்றது. அதனால்தான் அமெரிக்கர்கள் தங்களுடைய பழந்தலைவர்களுக்கும், வரலாற்றுக்கும் அதிக மதிப்பளிக்கிறார்கள். நினைவு தினங்களை வைத்திருக்கிறார்கள். நாடு சுதந்திரம் அடைந்ததை நினைவுகூரும் நாள் மட்டுமல்லாமல், நன்றிபகரும் நாள் என்று ஒரு நாளையும் வைத்திருக்கிறார்கள். ஆனால், உலகத்தைச் சார்ந்த லிபரல் கோட்பாடுகளும், இனத்தை முதன்மைப்படுத்துகின்ற போக்கும், உலகலாவிய பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றுப் போக்கு (Social Engineering) போன்றவை அந்தப் பேட்ரியோட்டிஷத்துக்கு ஆபத்தாக முளைவிட்டிருக்கின்றன. முன்னாள் தலைவர்களான கிளின்டன், ஒபாமா காலங்களில் அவர்கள் இத்தகைய பேட்ரியோட்டிஷத்தின் அடையாளங்களாக இருந்ததில்லை. சமீப காலங்களில் அமெரிக்கக் கொடியைச் சில இடங்களில் எரித்ததும், சில விளையாட்டு வீரர்கள் அமெரிக்காவின் கொடிக்கு நின்று மதிப்பளிக்காமல் முழங்காலை மடித்து அமர்ந்ததும், சார்ளட்வில் போன்ற இடங்களில் இருந்து ஜெனரல் லீ, ஜெக்சன் போன்றோரின் நினைவுச்சின்னங்களை அகற்ற முயன்றதும் இந்தப் பேட்ரியோட்டிஷப் போக்குக்கு எதிரான அடையாளங்களாக இருக்கின்றன. அமெரிக்காவில் பிரிட்டனைப் போலவே பழங்காலத்தில் அடிமைகளை வைத்திருக்கும் முறை இருந்தது. அது பின்னால் இல்லாமலாக்கப்பட்டது. இருந்தபோதும் ஜோர்ஜ் வாஷிங்டன் போன்றோர் அடிமைகளை வைத்திருந்தனர் என்பதற்காக அவரைச் சிலர் நிந்திக்க ஆரம்பித்தார்கள்; நினைவுச் சின்னங்களை அசிங்கப்படுத்தவும் முயன்றனர். ஜோர்ஜ் வாஷிங்டன் பின்னால் அடிமை வர்த்தகத்தை வெறுத்து தன்னுடைய அடிமைகளை விடுதலை செய்து அவர்களுக்கு வசதிகள் செய்து வைத்ததற்கு வரலாறு சான்று பகருகின்றது. பழங்காலத்தில் நிகழ்ந்த ஒன்றிற்காக அந்தக் காலத்து மனிதர்களையும், அவர்களின் பெருஞ்செயல்களையும், வரலாற்றையும் இந்தக் காலத்து கண்நோக்கோடு பார்த்து எள்ளிநகையாடுவதும் எதிர்ப்பதும் சிலரின் குறுகிய மனப்பான்மையைத்தான் காட்டுகின்றது. இத்தகைய போக்குக்கு எதிரான அமெரிக்கப் பெரும்பான்மையினரின் பேட்ரியோட்டிஷமே இன்று டொனல்ட் டிரம்ப்பை பிரெசிடன்ட் ஆக்கியிருக்கிறது. அமெரிக்கர்களுக்கு அவர்களுடைய தலைவர்கள் மீதும், வரலாற்றின் மீதும் தனிப்பற்றிருக்கிறது.
கெப்பிட்டல் ஹில்
கெப்பிட்டல் ஹில்
அதற்குப் பிறகு அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த கெப்பிட்டல் ஹில் அல்லது கெப்பிட்டல் கட்டடம் என்று அழைக்கப்படுக்கின்ற கட்டடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வாஷிங்டன் நினைவகத்தில் இருந்து நேராகப் பார்க்கக்கூடிய விதத்தில் அது அமைந்திருந்தது. இடையில் ஒரு நீண்ட பசுந்தரைத் தோட்டமிருந்தது. அதன் இருபுறமும் மக்கள் நடந்துபோகக்கூடியதாக பாதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதி பார்த்து ரசிக்கக்கூடிய ரம்மியமான தோற்றத்தைக் கொண்டிருந்தது. அநேக உல்லாசப் பிரயாணிகளும், அமெரிக்கர்களும் அங்கே பரவலாகக் காணப்பட்டனர். இந்த நீண்ட பரப்பு இன்டிபென்டன்ஸ் அவென்யுவுக்கும், கொன்ஸ்டிடியூஷன் அவென்யுவுக்கும் இடைப்பட்ட பகுதியை நிரப்பியிருந்தது. மக்கள் நடந்து போவதற்கு ஒருபுறம் மெடிசன் டிரைவும் மறுபுறம் ஜெபர்சன் டிரைவும் வசதியாக அமைந்திருந்தன. இதில் நடக்கிறவர்களையும், ஓடுகிறவர்களையும், சைக்கிளில் போகிறவர்களையும் பார்த்துக்கொண்டே அமெரிக்காவின் காங்கிரஸ் மற்றும் செனட் கூடுகின்ற கெப்பிட்டல் ஹில்லை நோக்கி நடந்தேன்.
கெப்பிட்டல் ஹில்லுக்கு எதிரேயுள்ள சிலைகள்
அமெரிக்கா உலக ஜனநாயக நாடுகளில் சிறப்பானது. முக்கியமாக அது ஜனநாயகத்தை வலியுறுத்தி அதை நிலைநிறுத்தப் பாடுபட்டு வருகிறது. அமெரிக்க கொன்ஸ்ட்டிடியூஷனில் அதைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். தனிமனிதப் பேச்சுரிமை அதில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. வேறெந்த நாடுகளிலும் இல்லாதளவுக்கு அதை அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. அதைத் தவறாக சுயநலத்திற்காகப் பயன்படுத்திகொள்ளுகின்ற மீடியாக்களும், தனிநபர்களும், அரசியல்வாதிகளும் அங்கிருந்தபோதும் அமெரிக்கா பேச்சுரிமைக்குப் பெரிதும் பாதுகாப்பளிக்கின்றது. அமெரிக்க அரசியல் அமைப்பில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று ஒன்றின் மீது செல்வாக்கு செலுத்த இயலாதபடி நாட்டுக் கொன்ஸ்ட்டிடியூஷன் எழுதப்பட்டிருக்கிறது. நாட்டுக் கொன்ஸ்ட்டிடியூஷன் முதன்மையானது. அதன்படியே நாடு ஆளப்பட வேண்டும். அமெரிக்க அரசியல் அமைப்பில் மூன்று பிரிவுகளில் ஒன்று, நாட்டுச் சட்டங்களை உண்டாக்கும் Legislative branch. இதிலேயே அமெரிக்க காங்கிரஸ் காணப்படுகிறது. அதில் அமெரிக்க செனட்டும் (100 உறுப்பினர்), அமெரிக்க காங்கிரஸ் (435) உறுப்பினர்களும் அடங்குகிறார்கள். இதுவே நாட்டின் சட்டங்களை உருவாக்கும் பிரிவாக இருக்கின்றது. இன்னொரு பிரிவு ஆளும் அதிகாரம், Executive branch. இதில் அமெரிக்க பிரெசிடன்ட், உப பிரெசிடன்ட் மற்றும் மந்திரிசபை ஆகியோர் அடங்குவர். அடுத்த பிரிவு நீதிப் பிரிவு (Judicial branch). இந்தப் பிரிவே அமெரிக்க கொன்ஸ்ட்டிடியூஷன் மற்றும் சட்டங்கள் சம்பந்தமான விளக்கங்களைத் தரும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டும் (9 நீதிபதிகள்), ஏனைய நீதிமன்றங்களும் அடங்கும். அமெரிக்க பிரெசிடன்டே இந்தப் பிரிவுகளில் மேலான அதிகாரத்தைக் கொண்டிருந்தபோதும் அவர் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முடியாதபடி ஏனைய இரண்டு அதிகாரப்பிரிவுகளும் உயர் அதிகாரத்துக்குப் பாதுகாப்பாக இருந்து வருகின்றன. இதனை விளக்கும் வரைபடத்தைக் கவனியுங்கள்.
கெப்பிட்டல் கட்டடம் (தலைநகரக் கட்டடம்) மிக அழகானது. நான் அதை வெளியில் இருந்து மட்டுமே சுற்றிப்பார்த்தேன். நிறைய படிகள் ஏறி அதன் பிரதான இடத்தை அடைய வேண்டும். அதிலேயே காங்கிரஸ் உறுப்பினர்களும், செனட்டும் கூடி வருகின்றன. இந்தக் கட்டடத்திற்கும் பின்புறமாக இடது பக்கத்தில் சுப்பிரீம் கோர்ட் கட்டடத்தைக் காணலாம். அதற்கு வலது பக்கத்தில் காங்கிரஸ் நூலகக் கட்டடம் அமைந்திருக்கின்றது. கெப்பிட்டல் கட்டடத்தில் இருந்து தூரத்தில் வாஷிங்டன் நினைவுச் சின்னத்தைப் பார்க்கலாம். கட்டடத்தின் முன்னால் யூலிசஸ் கிரான்ட் எனும் முன்னாள் பிரெசிடன்ட்டின் நினைவுச் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இவர் யூனியன் படையை அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது தலைமை தாங்கி வழிநடத்தியதோடு இருமுறை பிரெசிடன்ட்டாகவும் (1869-1877) இருந்திருக்கிறார். கிரான்டின் சிலை 2 மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபத்தை நோக்கிப் பார்த்தபடி நிற்கிறது. லிங்கனும், கிரான்டும் யூனியன் படைகளை வழிநடத்தியவர்கள். இருவருமே அமெரிக்க பிரெசிடன்டுகளாக இருந்திருக்கிறார்கள். இருவரும் அமெரிக்கா ஒரு யூனியனாக இருக்கப் பெரும் பணியாற்றியவர்கள். கிரான்டின் சிலைக்கு ஒரு புறம் அவருடைய போர்வீரர்களின் சிலையும் இன்னொரு புறம் அவருடைய பீரங்கிப்படையின் சிலையும் அமைந்திருக்கின்றது. இந்தச் சிலைகள் அமெரிக்க உள்நாட்டுப் போரில் யூனியன் படையினரின் பங்கைப் பெருமையோடு நினைவூட்டுவதாக நின்றுகொண்டிருக்கின்றன. இவையனைத்தும் வெண்கலத்தினால் செய்யப்பட்டவை.
என்னுடைய முதல் நாள் சுற்றுப் பயணம் இதோடு முடிந்தது. நேரம் நடுப்பகலையும் தாண்டியிருந்ததாலும், என்னுடைய இருப்பிடத்தை அடையுமுன் மாலை வரப்போவதாலும் சுற்றுப்பயணத்தில் பார்க்க வேண்டிய ஏனைய முக்கிய இடங்களை அடுத்த நாளுக்கு தள்ளிவைக்கத் தீர்மானித்தேன். கெப்பிட்டல் கட்டடத்தில் இருந்து திரும்பி நடந்தபோது மெடிசன் டிரைவின் வழியாக நடக்க ஆரம்பித்தேன். அவ்வழியாகப் போகும்போது தேசிய கலை நூலகம் மற்றும் சிமித்தோனியன் தேசிய மியூசியக் கட்டடங்களைக் காணமுடிந்தது. இவையெல்லாம் பிரமாண்டமான கட்டடங்கள் மட்டுமல்ல பழமை புதுமை இரண்டையும் பிரதிபலிப்பவையாகவும் இருந்தன. வாஷிங்டனில் மியூசியங்களுக்கும், ஆர்ட் கெலரிகளுக்கும் குறைவில்லை. மெடிசன் டிரைவில் இருந்து 14ம் தெருவில் வலப்புறமாகத் திரும்பி கொன்ஸ்டிடியூஷன் அவென்யுவைத் தாண்டி நடக்க ஆரம்பித்தேன். அங்கே அமெரிக்க வர்த்தக நிறுவனக் கட்டடத்தை வலப்புறம் கண்டேன். வீதியின் இருபுறமும் விக்டோரியன் காலத்தை நினைவுறுத்தும் உறுதியான பிரம்மாண்டமான கட்டடங்கள் கண்களைத் திரும்பித் திரும்பிப் பார்க்க வைத்தன. முன்னாள் பிரெசிடன்ட் ரொனல் ரீகனுடைய கட்டடமும் அந்தப் பகுதியிலேயே இருந்தது. வழியிலேயே மத்தியான உணவை முடித்துவிட்டு போகும் வழியில் பிரெங்ளின் கார்டினையும் பார்த்துவிட்டு என்னுடைய இருப்பிடத்தை மாலை எட்டுவதற்குள் அடைந்துவிட்டேன்.
வாஷிங்டனில் முதல் நாள் சுற்றுப்பயணம் நிச்சயம் என்னை மலைக்க வைத்திருந்தது என்பதைச் சொல்லாமலிருக்க முடியாது. பெரும் பெரும் அரச நிர்வாகக் கட்டடங்கள், வெள்ளை மாளிகை, கெப்பிட்டல் ஹில், மியூசியங்கள், நூல் நிலையங்கள் அனைத்தும் அமெரிக்காவின் அரசியல், பொருளாதார, சமூக வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டுபவையாக இருந்தன. எத்தனை செல்வமிக்க வரலாற்றை அமெரிக்கா தன்னில் சுமந்து தலைநிமிர்ந்து நிற்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அத்தனைக் கஷ்டமாக இருக்கவில்லை. ஒருபுறம் சிறப்புமிக்க ஆழமும் அழுத்தமும்கொண்ட நீண்ட வரலாற்றுப் பின்புலம், மறுபுறம் பொருளாதார எழுச்சியையும் செல்வத்தையும் பிரதிபலிக்கும் வர்த்தகத்தையும் நவீன சமுதாயத்தையும் ஒரு சேர வாஷிங்டனில் காணமுடிந்தது. இவற்றிற்கு மத்தியில் லிபரல் கோட்பாடுகளின் விளைவால் வீடற்று வீதியில் வாழும் சில மனிதர்களையும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களையும் ஆங்காங்கே வீதிகளில் பார்க்கமுடிந்தது. இந்த ஆக்கம் இன்னும் முடிவுக்கு வந்திராவிட்டாலும் ஒரு நிமிடம் நின்று அமெரிக்கா இத்தனைப் பலமிக்க நாடாக வந்திருப்பதற்கு எது காரணம் என்பதை சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. அமெரிக்காவுக்கு வெளியில் இருப்பவர்கள் லிபரல் கோட்பாடுகளின் தாக்கத்தினால் எப்போதும் அமெரிக்காவைத் திட்டிக்கொண்டிருப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பிபிசி, அல்ஜிசீராவில் இருந்து அத்தனை லிபரல் மீடியாக்களும் அதைத்தான் இன்று நேற்றில்லாமல் செய்துவருகின்றன. அதையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எது காரணம் என்பதை சிந்திப்போம்.
அமெரிக்கா இங்கிலாந்தில் இருந்து வெளியேறி நியூ இங்கிலாந்து என்று அழைக்கப்படும் பகுதியில் 1620களில் குடியேறிய பியூரிட்டன் குடும்பங்களினால் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தில் தாங்கள் அனுபவித்த கிறிஸ்தவத்திற்கு எதிரான துன்புறுத்தல்களினால் நாடு கடத்தப்பட்டு மே பிளவர் என்ற கப்பலில் அந்தப் பகுதியில் வந்திறங்கியவர்களே ஆரம்பகாலப் பியூரிட்டன்கள். அவர்களே தாங்கள் வந்திறங்கிய பகுதிகளில் காலனிகளை உண்டாக்கி இன்றிருக்கும் அமெரிக்காவை உருவாக்கியவர்கள். ஆரம்பகாலத்தில் இருந்தே அமெரிக்கா மதசுதந்திரத்தைப் பெரிதும் வலியுறுத்தி வந்திருக்கின்றது. கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்தவர்கள் உருவாக்கிய தேசம் அமெரிக்கா. ஆதியில் வேதத்தை விசுவாசித்து வாசித்து, வார்த்தையின் அடிப்படையிலான ஆராதனையில் ஈடுபட்டு, ஓய்வுநாளைத் தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தவர்களே அந்நாடு உருவாகவும், வளரவும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இவ்வாறாக உருவான 13 காலனிகள் பின்னால் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக பிரிட்டிஷ் படைகளோடு போராடி (1775-1783) வெற்றிகண்டு நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தனர். 1776ல் அவர்கள் தங்களை சுதந்திர தேசமாகப் பிரகடனம் செய்தார்கள். இவர்கள் தங்களைப் ‘பேட்ரியேட்ஸ்’ என்று அழைத்துக்கொண்டனர். இந்தப் பதின்மூன்று காலனிகளின் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் தேசபிதாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களில் வியாபாரிகள், சட்டநிபுணர்கள், தத்துவவாதிகள், அரசியல்வாதிகள், தோட்டச் சொந்தக்காரர்கள் என்று பல்வேறு துறைகளில் திறன் பெற்றவர்கள் அடங்கியிருந்தனர். ஜோன் அடம்ஸ், பென்ஜமின் பிராங்க்ளின், அலெக்சாண்டர் ஹெமில்டன், ஜோன் ஜே, தொமஸ் ஜெபர்சன், ஜேம்ஸ் மெடிசன், ஜோர்ஜ் வாஷிங்டன் ஆகியோரே அந்த ஏழு பேரும். இவர்களே அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதி அறிவிக்கவும், அமெரிக்க கொன்ஸ்டிடியூஷன் எழுதப்படவும் காரணமாக இருந்தனர். இவர்களில் ஜோர்ஜ் வாஷிங்டன் வகித்திருந்த பங்குபற்றி ஏற்கனவே விளக்கியிருந்தேன். அமெரிக்காவின் ஆரம்பத்தலைவர்கள் உழைப்புக்கு அதிகம் மதிப்புக்கொடுத்தார்கள். உழைத்து சம்பாதிப்பதற்கும் வளர்ச்சியடைவதற்கும் அவர்கள் எந்தத் தடையுமிடவில்லை. அந்தவிதத்தில் வளர்ந்திருப்பதே இன்றைய அமெரிக்கா. அதனால்தான் அமெரிக்கா தொடர்ந்தும் தனிநபர் உழைப்புக்கும், வளர்ச்சிக்கும், சொத்துடமையாளர்களாக இருப்பதற்கும் பேராதரவு அளித்து வருகிறது. அது ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகள் கொண்டிருக்கும் சோஷியலிசப்போக்கை கடுமையாக எதிர்க்கிறது. தனிநபர் உழைப்பும், சொத்துச் சேகரிப்பும், வியாபார வளர்ச்சியுமே அமெரிக்கா செல்வமுள்ள நாடாக இருப்பதற்குக் காரணம். கைநீட்டி எவரிடமும் தங்கியிராமல் உழைப்பதை அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள். தனிமனிதன் அப்படி உழைப்பதற்கும் வளர்வதற்கும் ஆனவற்றை செய்துகொடுக்க அரசு முயல்கிறது. அரசு எல்லாவற்றையும் செய்து வருவதைவிட நாட்டு மக்கள் உழைத்துத் தங்கள் உடமைகளை வளர்த்துக்கொள்வதை அமெரிக்கா என்றும் கொள்கையாக வைத்திருந்தது; முக்கியமாக குடியரசுக்கட்சி அதையே ஊக்குவிக்கிறது. அமெரிக்க தேசபிதாக்கள் குடியரசுவாதிகளாகவே இருந்திருக்கின்றனர்.
இன்று தீவிர லிபரல் போக்குக்கொண்ட அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் கோட்பாடுகளால் இளந்தலைமுறை தங்கள் நாட்டின் அருமை பெருமை அறியாமல் தேசபிதாக்களைக்கூட சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். கர்த்தருடைய கரமில்லாமல் அமெரிக்கா இன்றிருக்கும் உயர்நிலையை அடைந்திருக்க முடியாது. இன்றுகூட அவர்களுடைய டாலர் நோட்டில் ‘கடவுளையே நாம் நம்பியிருக்கிறோம்’ என்று அச்சிடப்பட்டிருக்கிறது.
இரண்டாம் நாள்
முதல் நாள் சுற்றுப்பயணத்தை முடித்தபின், உணவருந்திவிட்டு இரவு நன்றாக உறங்க முடிந்தது. பத்து கிலோ மீட்டர் நடந்திருக்கிறேன் இல்லையா! இருந்தும் அதிகாலையே எழுந்துவிட்டேன். இன்று பார்க்க வேண்டிய முக்கிய இடங்களிருப்பதால் அது தந்த உற்சாகமே நேரத்தோடு விழித்துக்கொண்டதற்குக் காரணம். காலை உணவருந்திவிட்டு கையில் வைத்திருக்கும் வாஷிங்டன் வரைபடத்தை மறுபடியும் பார்த்து போக வேண்டிய இடங்களை மனதில் குறித்துக்கொண்டேன். இன்று ஒரு மாற்றம். சுற்றுப்பயணத்தோடு உடல்பயிற்சியையும் முடித்துக்கொள்ளத் தீர்மானித்து ஜிம் உடைகளையும் ஓடுவதற்கு வசதியான காலணிகளையும் அணிந்துகொண்டேன். வசதியாக இன்றும் நல்ல வெயில் என்று கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் காட்டியது. ஒன்பது மணிக்கு முன்பே இருப்பிடத்தை விட்டு 15ம் தெருவில் மறுபடியும் நேராக வெள்ளை மாளிகைக்குப் போகும் வழியில் சென்றேன். நான் புறப்பட்ட இடத்தில் இருந்து அது ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. ஆகவே மெல்லிய ஓட்டத்தோடு சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தேன். வெகு விரைவிலேயே வெள்ளை மாளிகைக்கு முன்பிருந்த லபாயீட் தோட்டத்தைக் கடந்து மறுபடியும் பென்சில்வேனியா தெருவில் இருந்த வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று எடுக்க வேண்டிய படங்களை வெவ்வேறு கோணத்தில் எடுத்துக்கொண்டேன். அதற்குப் பிறகு ஐஸ்ஷனோவர் கட்டடத்தை ஒட்டியிருக்கும் 17ம் தெருவில் நடந்து வாஷிங்டன் நினைவுச் சின்னத்தை நோக்கிப் போனேன். போகும் வழியில் சுவர்நியர் விற்கும் சில கடைகள் நடைபாதையில் இருந்தன. எந்தக் கடையில் பார்த்தாலும் டொனல்ட் டிரம்பின் டீசேர்ட்டுகளும், மெகா ஹெட்டுகளும் விற்பனைக்கு இருந்தன. அந்தத் தெருவிலேயே வின்டர் கட்டடம் (Winder Building) ஐஸ்ஷனோவர் கட்டடத்திற்கு எதிர்ப்புறமாக இருந்தது. இது அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி பணிபுரியும் அலுவலகமாக இருந்து வருகிறது. அந்தக் கட்டடத்திற்கு முன்னால் நிறைய டிவி மீடியாக்கள் விடியோ கேமராக்களோடு நின்றுகொண்டிருந்தனர். போலீஸும் நின்றுகொண்டிருந்தது. ஏறக்குறைய நாற்பது பேர் வரையில் நின்றிருந்தார்கள். யாராவது முக்கிய பிரமுகர் கட்டடத்திற்குள்ளிருந்து வரப்போகிறாரோ என்று சில நிமிடங்கள் நின்று பார்த்தேன். எனக்குத் தெரிந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் மறுபடியும் ஆரம்பித்திருந்தன. அது சம்பந்தமானவர்களிடம் பேசுவதற்காகத்தான் மீடியாக்கள் நின்றுகொண்டிருந்தனவோ தெரியவில்லை. ஒன்றும் விசேஷமாக நடக்காததால் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து நடக்க ஆரம்பித்தேன். நேராக வாஷிங்டன் நினைவுச் சின்னம் இருந்த இடத்தை அடைந்து மேலும் தேவையான படங்களை எடுத்துக்கொண்டேன்.
நேரம் அப்போது காலை பத்து மணியை சமீபித்திருந்தது. நல்ல வெயில். அமெரிக்காவில் Fall என்று அழைக்கப்படும் இளங்குளிர் காலம் ஆரம்பித்திருந்தபோதும் அங்கு இந்த வருடம் வெய்யில் காலம் செப்டெம்பர் வரை நீண்டிருந்ததால் பனிக்காலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அது எனக்கு சுற்றுப் பயணத்திற்கு வசதியாக இருந்தது. வாஷிங்டன் நினைவுச் சதுக்கத்தைத் தாண்டி வரும்போது வீதியின் இருபுறமும் அரச நிர்வாகக் கட்டடங்களும், ரெட் குரொஸின் தலைமையகக் கட்டடமும் இருந்தன. பின்பு கொன்ஸ்டிடியூஷன் வீதி, கொன்ஸ்டிடியூஷன் தோட்டத்தைக் கடந்து வலது புறம் இருந்த இரண்டாம் உலகப் போர் நினைவுச் சின்னப்பகுதியை அடைந்தேன். அது நேராக ஆபிரகாம் லிங்கனின் நினைவு மண்டபத்தை நோக்கி அமைந்திருந்தது. முதலில் இரண்டாம் உலகப்போர் நினைவுச்சின்னப்பகுதியைப் பார்த்துவிடுவோம் என்று அதற்குள் நுழைந்தேன். அது வாஷிங்டன் நினைவுச் சதுக்கத்துக்கு நேர் எதிர்ப்புறம் 17ம் S.W வீதியில் இருந்தது.
இரண்டாம் உலக யுத்த நினைவுச் சின்னம்
இரண்டாம் உலக யுத்த நினைவுச் சின்னம்
இரண்டாம் உலகப்போர் நினைவுச்சின்னம் மிக அழகாகக் கட்டப்பட்டிருந்தது. நுழைவாயிலில் இரண்டு பக்கமும் அமெரிக்கக் கொடிகள் தலைநிமிர்ந்து பறந்துகொண்டிருந்தன. இங்கே 17 அடி உயரமுள்ள 56 கிரெனைட் கல்தூண்கள் நின்றுகொண்டிருந்தன. இரண்டு பக்கமும் ஒன்றையொன்று நோக்கி நிற்கும்வகையில் 43 அடி உயர வெற்றித் தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை பசுபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் யுத்தங்களை நினைவுறுத்தும் தூண்கள். நடுவில் வானவில் தண்ணீரூற்று அமைந்திருந்தது. நாட்டையும் உலகத்தையும் காப்பதற்குப் பல்லாயிரக்கணக்கானோர் போராடிப் பெற்ற வெற்றியை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே இத்தகைய நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்தோடு நாட்டுக்காக உயிரிழந்தவர்களை மதிக்கும் அடையாளமாகவும் இவை இருந்தன. இந்த நினைவுச் சின்னம் இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 16 மில்லியன் போர்வீரர்களை நினைவுகூர அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் ஹவாயின் பேர்ல் ஹார்பர் தாக்குதலில் போராடி உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டிருந்தார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் 405,399 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தோ அல்லது காணாமலோ போயிருந்தனர். அங்கிருந்த சுதந்திர மதிலில் 4048 நட்சத்திரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவை ஒவ்வொன்றும் உயிரிழந்த அல்லது காணாமல்போன 100 போர்வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதை அமைப்பதற்கு கிளின்டன் ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டு ஏப்ரல் 2004ல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபம்
ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபம்
அடுத்ததாக ஆபிரகாம் லிங்கன் நினைவு மண்டபத்தை நோக்கி நடைபோட்டேன். இது இரண்டாம் உலகப்போர் நினைவுச் சின்னத்தில் இருந்து 622 மீட்டர்கள் (0.62 கி.மீ.) தூரத்தில் இருந்தது. நடப்பதற்கு நல்ல வசதியான பாதைகள் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்தன. நடுவில் முகந்தெரியும் குளம் 620 மீட்டர் நீளமும் 54 மீட்டர் அகலமும் கொண்டதாக பிரமாண்டமான விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதில் யாரும் குளிக்கவோ, இறங்கவோ, நீச்சலடிக்கவோ முடியாது! இவை மிகுந்த மரியாதையோடு நடந்துகொள்ள வேண்டிய பகுதிகள். உல்லாசப் பிரயாணிகளும், அமெரிக்கர்களும், பாடசாலை மாணவர்களும் நடந்து லிங்கன் நினைவு மண்டபத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். அவர்களில் ஓடி உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களும் இருந்தார்கள். அதனால் நானும் ஓட ஆரம்பித்தேன். நல்ல வெயில் இருந்தபோதும் இளங்காற்று வீசிக்கொண்டிருந்தது. லிங்கன் நினைவு மண்டபத்திற்குப் பின்னால் பரந்து விரிந்த போட்டோமெக் ஆறு இருந்ததால் காற்று அங்கிருந்து வந்துகொண்டிருந்தது என்று நினைக்கிறேன். இந்த முகந்தெரியும் பெருங்குளத்தின் இரண்டு பகுதிகளிலும் மேலும் சில நினைவுச் சின்னங்களும், ஒரு புறத்தில் கொன்ஸ்டிடியூஷன் தோட்டமும் இருந்தன. அத்தோடு எனக்கு இடது புறத்தில் இன்டிபென்டன்ஸ் அவென்யுவும், வலதுபுறத்தில் கொன்ஸ்டிடியூஷன் அவென்யுவும் இருந்தன.
லிங்கனின் சிலை
ஆபிரகாம் லிங்கனைப் பற்றிய எண்ணங்கள் மனதில் ஊசலாட அவரின் நினைவு மண்டபத்தை அடைந்தேன். கண் முன்னால் உயரமான இடத்தில் பெருமையோடு காட்சியளித்தது அந்த நினைவு மண்டபம். ஏறிப்போக நிறைய படிகள் இருந்தன. அந்த மண்டபம் பளிங்குக் கற்களால் கட்டப்பட்டிருந்தது. ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது பிரெசிடன்ட் (1861-1865). அத்தோடு பிரெசிடன்ட்கள் எல்லோரிலும் சில சிறப்புகளையும் கொண்டவர். அமெரிக்க வரலாறு அவருக்கொரு சிறப்பிடத்தை வழங்குகிறது. அதை லிங்கன் நினைவு மண்டபம் நிச்சயம் விளக்குவதாக இருக்கிறது. லிங்கன் ஒரு வழக்கறிஞர்; குடியரசுக் கட்சித் தலைவர். அமெரிக்க குடியரசு யூனியனில் இருந்து சுதந்திரம் பெற தெற்கில் இருந்த ஆறு மாநிலங்களும் ஒருங்கிணைந்து கொன்பெடெரெட்சாகப் போர்தொடுத்தபோது லிங்கன் அமெரிக்க யூனியனைப் பாதுகாக்க அவர்களோடு போரிட்டார். அந்தப் போரில் அவர் வெற்றியும் அடைந்தார். அடிமை வியாபாரத்தையும், அடிமைகள் வைத்திருப்பதையும் ஒழிப்பதற்கு அவர் பெருமுயற்சியெடுத்து அதில் வெற்றியும் கண்டார். நவம்பர் 19, 1863ல் அவர் கெட்டிஸ்பேர்க் என்ற இடத்தில் கொடுத்த சிறப்புரை அமெரிக்க வரலாற்றில் கொடுக்கப்பட்ட மிகச் சிறப்பான உரை என்று மதிக்கப்படுகிறது. கெட்டிஸ்பேர்கிலேயே லிங்கனின் படைகள் கொன்பெடெரெட்சோடு நடந்த இறுதிப்போரில் வெற்றி பெற்றன. ஏப்ரல் 14, 1865ல் ஜோன் வில்க்ஸ் பூத் என்ற கொன்பெடெரேட்ஸை ஆதரித்த ஒரு நாடக நடிகன், ஆபிரகாம் லிங்கன் ஒரு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது தலையில் துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொலை செய்தான். மறுநாள் அவர் மரணமடைந்தார். அமெரிக்க பிரெசிடன்டுகளில் விசேஷமானவர்களில் ஒருவராக லிங்கன் மதிக்கப்பட்டு வருகிறார்.

லிங்கன் ஆராதித்து வந்த திருச்சபை
99 அடிகள் உயரமுள்ள லிங்கன் நினைவு மண்டம், 189.7 அடிகள் நீளமும், 118.5 அடிகள் அகலமும் கொண்டது. அதில் 36 தூண்கள் லிங்கன் காலத்தில் அமெரிக்காவில் இருந்த 36 மாநிலங்களையும் அடையாளப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. பிரதான மண்டபத்தை அடைய முகந்தெரியும் பரந்த குளத்தில் இருந்து 87 படிக்கட்டுக்கள் உள்ளன. லிங்கனின் கெட்டிஸ்பேர்க் உரையின் ஆரம்ப வசனத்தில் குறிப்பிட்டிருந்த எண்களை நினைவுறுத்தும்படியாக இந்தப் படிக்கட்டுகளின் எண்ணிக்கை அமைந்திருந்தன. உயரத்தில் அமைந்திருந்த அந்த மண்டபத்தைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறிப்போய் மத்திய மண்டபத்தை அடைந்தால் அங்கே நாம் படங்களில் பார்த்திருக்கும் ஆபிரகாம் லிங்கனின் பிரமாண்டமான உருவச்சிலை மண்டபத்தின் பின்புறச் சுவரைத் தொடும்படியாக அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். மண்டபத்தின் உள்ளேயும் சிலையைச் சுற்றிவர தூண்கள் அமைந்திருந்தன. சுவரில் லிங்கனைப் பற்றிய வரலாற்றுப் புகழ்பெற்ற வார்த்தைகள் பதியப்பட்டிருந்தன. அங்கே லிங்கனின் சிலை 19 அடி உயரத்தில் 21 மார்பல் கற்களில் உருவாக்கப்பட்டு அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆபிரகாம் லிங்கனே நேரில் நிற்பதுபோல் மிகத் தத்ரூபமாக, கூர்ந்த பார்வையோடு அவர் தன் முக உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்விதத்தில் சிலை இருந்தது. லிங்கன் நினைவு மண்டபத்தில் காணப்பட்ட ஒவ்வொன்றும் அவருடையதும், அமெரிக்க தேசத்தினதும் வரலாற்றை நினைவுபடுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அமெரிக்கா எந்தளவுக்கு தன் வரலாற்றிற்கும், தேசத்தலைவர்களுக்கும் மதிப்பளிக்கின்றது என்பதை ஆச்சரியத்தோடு கவனித்து அதிக நேரம் அந்த மண்டபத்தை சுற்றிப் பார்த்துவிட்டு படிக்கட்டுகளில் கீழிறங்கினேன். அங்கிருந்து பார்க்கும்போது முன்னால் முகந்தெரியும் நீளமான குளமும், குளத்தில் எதிர்ப்புற முடிவில் இரண்டாம் உலகப்போர் நினைவிடமும், மிகத்தூரத்தில் வாஷிங்டனின் நினைவுத் தூணும் அதற்குப் பின்னால் கெப்பிட்டல் ஹில்லும் கண்களால் காணக்கூடிய தூரத்தில் அமைந்திருந்தன. அந்தக் காட்சியே பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. எத்தனை ஆண்டுகால வரலாறும், எத்தனையெத்தனை பேரின் நாட்டுப்பற்றும், சுதந்திரத்திற்காக அவர்கள் செய்திருக்கும் தியாகமும் கண்கள் முன்னால் தத்ரூபமாகக் காட்சியளித்து மனதை உலுக்கும்விதத்தில் இருந்தன. முடிந்தளவுக்கு எடுக்கவேண்டிய படங்களை வெவ்வேறு கோணத்தில் எடுத்துக்கொண்டேன்.
கொரியப் போர் நினைவுச் சின்னம்
கொரியப் போர் நினைவுச் சின்னம்
அப்போது நேரம் மத்தியானத்தைத் தொட்டுக்கொண்டிருந்தது. அடுத்ததாக எங்கு போகலாம் என்று கையில் இருந்த வரைபடத்தைப் பார்த்தேன். கொரியன் போர் நினைவிடம் வலது பக்கத்தில் இருந்ததால் அதைப் பார்க்கலாம் என்று லிங்கன் மண்டபப்படிக்கட்டுகளில் இருந்து இறங்கி அதை நோக்கி நடந்தேன். நூற்றுக்கணக்கில் என்னைப் போன்ற உல்லாசப்பிரயாணிகள் லிங்கன் மண்டபத்தைச் சூழ்ந்திருந்தனர். அன்று வானம் ஒரு துளி மேகமும் இல்லாமல் பரந்து விரிந்து நீள வர்ணத் திரைபோலக் காட்சியளித்தது. போட்டோ எடுப்பவர்களுக்கென்று வசதியாக இருந்த நல்ல வெயில் நாளது. வேகமில்லாமலும், அதேநேரத்தில் வெய்யிலின் தாக்கத்தைத் தணியச் செய்யும் வகையில் இளங்காற்று மேனியைத் தடவி ஆறுதல் அளிக்கும்விதத்தில் வீசிக்கொண்டிருந்தது. படிகளில் இருந்து இறங்கி கொரியப்போர் நினைவிடத்தை அடைந்து உள்ளே போனேன். அது பச்சை நிறப்புதர்கள் அழகாக வளர்க்கப்பட்டு சுற்றிவர கொரியன் போரை நினைவுபடுத்தும் விதத்தில் நீரூற்றையும் மற்றும் சுவர்களைக்கொண்டும் அமைக்கப்பட்டிருந்தது. முன்னால் இருந்த பச்சைப் புதர்களுக்கு மத்தியில் உண்மையிலேயே அமெரிக்கப் போர்வீரர்கள் போருடை அணிந்து துப்பாக்கிகளைத் தாங்கி நடந்துபோவதுபோல் தத்ரூபமாக இருபதுக்கு மேற்பட்ட சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. 1948ல் கொரியா இரண்டாகப் பிரிந்து வடகொரியா கம்யூனிஸ்ட் கொரியாவாகவும், தென்கொரியா முதலாளித்துவ கொரியாவாகவும் செயல்பட்டன. 1950ல் வடகொரியப் படைகள் தென்கொரியாவுக்குள் நுழைந்தன. உடனே இருநாடுகளுக்குமிடையில் பெரும்போர் தொடங்கியது. இந்தப் போரில் 1950-1953 வரை தென்கொரியாவுக்குத் துணையாக அமெரிக்கா யுத்தத்தில் ஈடுபட்டிருந்தது. வடகொரியாவுக்குத் துணையாக சீனாவும், ரஷ்யாவும் போரில் ஈடுபட்டிருந்தன. இந்தப் போரில் இரண்டாம் உலகப் போரிலும், வியட்நாம் போரிலும் இறந்தவர்களைவிட அதிகமானோர் பலியானதோடு 3 மில்லியன் பேருக்கு மேல் போரினால் பாதிக்கப்பட்டனர். இப்போரில் வடகொரியா வரலாற்றில் என்றுமில்லாதவகையில் அமெரிக்காவின் குண்டுத்தாக்குதலுக்குள்ளானது. 1953ல் இரண்டு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இரண்டு நாடுகளும் சமாதான ஒப்பந்தத்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. இன்றும் அமெரிக்க படைகள் தென்கொரியாவில் அதற்குப் பாதுகாப்பாக இருக்கின்றன. அத்தோடு அட்லாண்டிக் கடலில் அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பல்களும் நின்றுகொண்டிருக்கின்றன.
மேலும் சில நினைவுச் சின்னங்கள்

மார்டின் லூதர் கிங் ஜூனியரின் நினைவுச் சின்னம்
கொரியப் போர் நினைவுச் சின்னத்தைப் பார்த்தபிறகு அதற்கு அப்பால் இன்டிபென்டென்ஸ் அவென்யுவைத் தாண்டி மேற்கு பேசின் தெருவுக்கு வலதுபுறம் மேற்கு போர்டோமெக் பார்க்கில் அமைந்திருந்த மார்டின் லூதர் கிங் ஜூனியரின் நினைவுச் சின்னத்தைப் பார்க்கச் சென்றேன். அதற்குப் பின்னால் போர்டோமெக் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. நாலு ஏக்கர் நிலப்பகுதியில் ‘நம்பிக்கைக் கல்’ என்ற பெயர்கொண்ட லூதர் கிங்கின் அழகான சிலை இருந்தது. இது கிரெனைட்டில் உருவாக்கப்பட்டிருந்த வெள்ளைச் சிலை. லூதர் கிங் குடியுரிமை இயக்கத்தின் தலைவராக இருந்தவர். அதற்கு அப்பால் அமெரிக்க பிரெசிடன்டுகளில் ஒருவராக இருந்த பிராங்க்ளின் ரூசவெல்ட்டின் நினைவுச் சின்னமும், ஜப்பானிய நினைவுத் தோட்டமும் இருந்தன. தூரத்தில் போர்டோமெக் ஆற்றுக்கு அப்பால் ஜெபர்சன் நினைவு மண்டபம் இருந்தது. பிராங்ளின் ரூசவெல்ட் 12 வருடங்கள் அமெரிக்க பிரெசிடன்டாக இருந்தவர். இரண்டாம் உலகப்போர்க்கால பிரெசிடன்ட் அவர். பிரிட்டனின் வின்ஸ்டன் சர்ச்சிள் மற்றும் சோவியத் ரஷ்யாவின் ஸ்டாலின் ஆகியோரின் சமகாலப் பிரெசிடன்ட் அவர். அவர் காலத்திலேயே ஹவாயில் பேர்ல் ஹார்பர் ஜப்பானியரால் தாக்கப்பட்டு அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தில் நுழைய நேர்ந்தது. அவ்வாறு அமெரிக்கா உலக யுத்தத்தில் நுழைந்ததனாலேயே ஹிட்லரின் அராஜகம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, ஜப்பானியரும் போரில் தோல்வியடைந்தனர். முதல் முறையாக அமெரிக்கா அந்த யுத்தத்திலேயே ஜப்பானியருக்குப் பாடம் கற்பிக்கும் முறையிலும், போரை நிறுத்தவும் ஹிரோசீமா, நாகசாகி ஆகிய ஜப்பானிய நகரங்களில் அட்டோமிக் குண்டுகளை வீசியது. அதுவே ஜப்பான் சரணடையவும் போர் நிறுத்தம் ஏற்படவும் காரணமாக இருந்தது.
இத்தனைக் கால வரலாற்று நினைவுகள் மனதில் படம் போல் விரிந்து அமெரிக்கா உலகுக்கு செய்திருக்கும் நன்மைகளையும், அதன் தலைவர்களின் தியாகச் செயல்களையும் எண்ணி எண்ணி வியந்தபடி அன்றைய சுற்றுப்பயணத்தை முடிக்கலாமென்று நினைத்தேன். மறுபடியும் வந்தவழியிலேயே என்னுடைய இருப்பிடத்தை நோக்கிக் கால்கள் நகர்ந்தன. அதற்கு ஆறு கிலோ மீட்டர் நடக்கவேண்டும். மறுபடியும் வாஷிங்டன் நினைவுச் சதுக்கம், வெள்ளை மாளிகை, முக்கிய அரச நிர்வாகக் கட்டடங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்தபடி மாலை நேரம் பதியுமுன் என்னிருப்பிடத்தை அடைந்தேன்.
இரண்டு நாட்கள் வாஷிங்டனைப் சுற்றிப் பார்த்திருந்த விஷயங்கள் என் மனதில் தொடர்ந்தும் ஓடிக்கொண்டிருந்தன. எத்தனை அருமையான வரலாற்றைத் தன்னில் சுமந்து தலை நிமிர்ந்து நிற்கிறது அந்நாடு என்று என்னால் வியப்போடு சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. இத்தனைக்கும் கிறிஸ்தவ நம்பிக்கைகளும், கிறிஸ்தவர்களும் அந்நாடு உருவாவதற்குச் செய்திருக்கும் தியாகங்களையும் அரும்பெரும் செயல்களையும் என்னால் எண்ணாமல் இருக்கமுடியவில்லை. ‘நீதி ஒரு நாட்டை உயர்த்துகிறது’ என்ற சங்கீதக்காரனின் வார்த்தைகளை இவ்வேளையில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. அதேவேளை இன்றைய அமெரிக்காவில் வளர்ந்திருக்கும் உலகத்தைச் சார்ந்த லிபரல் போக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வரும் தாக்கங்களையும் நினைத்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை. உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும், பிரிட்டனும் இன்றிருக்கும் நிலை கவலைகொள்ள வைக்கிறது. இரண்டு நாடுகளிலும் கிறிஸ்தவம் மிக உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. பிரிட்டன் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தத்தினாலும், பியூரிட்டன் காலத்தாலும், ஜோன் சார்ள்ஸ் வெஸ்லி மற்றும் ஜோர்ஜ் விட்பீல்ட், ஹவல் ஹெரிஸ், டேனியல் ரோலன்ட்ஸ் போன்றோரின் 18ம் நூற்றாண்டு எழுப்புதல்களினாலும் பெரும் ஆசீர்வாதத்தை அடைந்த நாடாக இருந்தது. இன்று அவை எல்லாவற்றையும் அடியோடு தூக்கியெறிந்திருக்கும் லிபரல் நாடாகவும், திருச்சபை மிகத் தாழ்ந்த நிலையிலிருக்கும் நாடாகவும் மாறியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ அரசியலும் இன்று சிரிப்புக்கிடமான இடத்தில், கர்த்தரின் தண்டனையை நினைவுறுத்துவதுபோல் அந்நாட்டில் குழப்பமான நிலையை அடைந்திருக்கிறது. அந்தளவுக்கு அமெரிக்கா போய்விடாவிட்டாலும் லிபரலிசம் அதன் உயர்வுக்கு ஆபத்தானதாக வந்திருக்கிறது. இந்த இரண்டு நாடுகளைப்போல ஆசீர்வாதத்தை அடைந்திருக்கும் வேறு நாடுகள் உலகத்தில் வேறு இல்லை. கர்த்தர் மட்டுமே எந்த நாட்டையும் உயரவைக்க முடியும். கர்த்தருக்கு மதிப்புக்கொடுக்காத நாடுகள் பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலைப்போல அவருடைய வெறுப்பையும் தண்டனையையும் மட்டுமே எதிர்கொள்ள நேரும். இந்தச் சிந்தனைகளெல்லாம் இதயத்தில் கனமாகப் பதிந்திருக்க வாஷிங்டனில் கடைசி நாளை நிறைவு செய்ய படுக்கைக்குப் போனேன். நாளைய நாளைப் பார்க்கப்போகிறோம் என்ற நம்பிக்கையோடும், கர்த்தரின் கிருபையால் நாளை நலமாக அமையும் என்ற நம்பிக்கையோடும் அன்றிரவு கண்ணுறங்கினேன்.
ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து
கடந்த சில வருடங்களாக 1 பேதுரு நூலை சபையில் பிரசங்கித்து வருகிறேன். அருமையான நூல். முக்கியமாக முதல் நூற்றாண்டில் நீதியாக வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவர்கள் அதற்காக துன்பங்களை அனுபவித்தபோது அவர்களுக்கு ஆறுதலளித்து, தொடர்ந்தும் அவர்கள் தங்களுடைய கடமைகளைத் தவறாது செய்துவர ஊக்கமளித்து பேதுரு இந்நூலை எழுதியிருக்கிறார். இதற்கு மத்தியில் கடைசி அதிகாரமான 5ம் அதிகாரத்தில் மூப்பர்களின் கடமைகளைப் பற்றி விளக்கத் தவறவில்லை பேதுரு. சாதாரணமான சூழ்நிலையில் ஆத்துமாக்களை சபை மூப்பர்கள் கவனத்தோடு வழிநடத்தவேண்டியது அவர்களுடைய கடமை. அதுவும் பெருந்துன்ப காலங்களில் இன்னும் அதிகமாக உழைத்து அவர்களைக் கண்காணித்து வழிநடத்தவேண்டியது மூப்பர்களின் பெருங்கடமை.
மூப்பர்களைப் பற்றியும் அவர்களுடைய பணியைப்பற்றியும் ஆங்கிலத்தில் அருமையான நூல்கள் பெருமளவுக்கு இருக்கின்றன. தமிழில் அந்தளவுக்கு ஒன்றும் இல்லை. மூப்பர்களின் பணிபற்றி திருமறைத்தீபத்தில் அதிகம் எழுதியிருக்கிறேன். இருந்தபோதும் ஆடுகளைப் பற்றியும், மந்தைகளைப்பற்றியும் அதிக நூல்களைக் காணமுடியாது. அதாவது ஆவிக்குரிய ஆடுகளான, கிறிஸ்தவ விசுவாசிகளைப்பற்றியே சொல்லுகிறேன். டக்ளஸ் மெக்மில்லன் ஸ்கொட்லாந்து நாட்டில் வாழ்ந்த சீர்திருத்தப் போதகரும், பிரசங்கியுமாவார். இப்போது கர்த்தரின் பாதத்தை அடைந்துவிட்டார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக அவர் எங்கள் நாட்டில் நாங்கள் நிகழ்த்திய கிறிஸ்தவ கூட்டங்களில் பிரசங்கமளித்திருக்கிறார். மெக்மில்லன் போதகப்பணிக்கு வருமுன் ஸ்கொட்லாந்தில் நிலச் சொந்தக்காரராக இருந்து செம்மறி ஆடுகளை வளர்த்திருக்கிறார். அவருக்கு மேய்க்கும் பணியில் நல்ல பரிச்சயம் இருந்தது. அவர் ஆங்கிலத்தில் எழுதிய நூலொன்றின் பெயர் ‘ஆண்டவரே என் மேய்ப்பன்’ என்பது. சங்கீதம் 23ல் அவர் கொடுத்த பிரசங்கங்கள் நூல்வடிவில் வெளிவந்தன. அந்நூலில் மெக்மில்லன் தன் ஆட்டு மேய்ப்புப் பணியின் அனுபவங்களை விளக்கியிருக்கிறார்.
பேதுரு மெய்க்கிறிஸ்தவர்களை இந்த அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில் ‘தேவனுடைய மந்தைகள்’ என்று வர்ணித்திருக்கிறார். மூப்பர்களை மேய்ப்பர்களாக வர்ணித்திருக்கிறார். இப்படியாக தீர்க்கதரிசிகளும், இஸ்ரவேலின் ஆத்மீகத் தலைவர்களும் மேய்ப்பர்களாக வர்ணிக்கப்பட்டிருப்பதைப் பழைய ஏற்பாட்டு நூல்கள் பலவற்றில் காணலாம். கர்த்தரே தன்னை மேய்ப்பராகவும், இஸ்ரவேலின் போதகர்களை மேய்ப்பர்களாகவும் வர்ணித்து எசேக்கியேல் 34ல் விளக்கியிருக்கிறார். சங்கீதம் 23ல் தாவீது ஆண்டவரை மேய்ப்பராகவும், தன்னை ஆடாகவும் வர்ணித்துப் பாடியிருப்பதைக் காண்கிறோம். இயேசு தன்னை நல்ல மேய்ப்பனாக யோவான் 10ல் குறிப்பிட்டிருக்கிறார். ஆத்துமாக்களை அவர் தன் மந்தைகளாகவும் ஆடுகளாகவும் அவ்வதிகாரத்தில் வர்ணித்து விளக்கியிருக்கிறார்.
பேதுரு 5ம் அதிகாரத்தில் மூப்பர்களுடைய கடமைகளைப் பற்றி விளக்கியிருக்கும் சத்தியங்களில் பொதிந்திருக்கும் ஆழமான ஆவிக்குரிய உள்ளர்த்தங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் ஆடுகளைப்பற்றியும், மேய்ப்பனைப்பற்றியும் நமக்கு நல்லறிவிருக்க வேண்டும். அதாவது, நான் மிருகங்களான ஆடுகளையும், அவைகளை மேய்க்கும் மேய்ப்பனைப்பற்றியுமே சொல்லுகிறேன். ஆடுகளின் தன்மைகளைப்பற்றியும், மேய்ப்பனின் பணியைப்பற்றியும் தெரிந்துவைத்திருக்காமல் ஆவிக்குரிய மந்தை மேய்ப்பில் ஒருவரும் கர்த்தரின் வார்த்தையின்படி ஈடுபட முடியாது. அத்தோடு ஒவ்வொரு போதகனும் (மூப்பரும்) சாதாரண ஆடு மேய்க்கிறவனின் பணிபற்றித் தீர ஆராய்ந்து அறிந்துவைத்திருப்பது அவசியம்.
ஆடுகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
இங்கே பேதுரு ஆவிக்குரியவர்களை ஆடுகளாக வர்ணிக்கின்றபோது செம்மறி ஆட்டையே மனதிலிருத்தி விளக்குகிறார். பரிசுத்த ஆவியானவர் செம்மறி ஆட்டை உதாரணமாக, ஆவிக்குரியவர்களுக்கு அடையாளமாக விளக்கியிருப்பது தற்செயலான ஒன்றல்ல; காரணத்தோடேயே அதைச் செய்திருக்கிறார். நான் வாழும் நியூசிலாந்து நாடு செம்மறி ஆடுகளுக்கு பெயர்போனது. உலகத்தில் சீனாவில்தான் அதிக தொகை ஆடுகள் இருந்தபோதும் நியூசிலாந்தே நாட்டு நிலப்பரப்பைப் பொறுத்தவரையில் உலகில் அதிக தொகை ஆடுகளைக் கொண்டிருக்கும் நாடாக இருக்கிறது. 1982ல் நியூசிலாந்தில் 70 மில்லியன் ஆடுகள் இருந்தன. இன்று அதன் தொகை குறைந்திருக்கிறது. 2007ல் 39 மில்லியனாக இருந்த ஆடுகளின் தொகை 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 27.3 மில்லியனாகக் குறைந்திருக்கிறது. நியூசிலாந்தின் மக்கள் தொகை இன்னும் 5 மில்லியனை எட்டவில்லை. நியூசிலாந்து செம்மறி ஆடுகளைப் பல தேசங்களுக்கு ஏற்றுமதி செய்வதோடு அவற்றை இறைச்சிக்காகவும், அவற்றின் தோலை விலைமதிப்புள்ள ஆடைத் தயாரிப்பு மற்றும் வேறு காரியங்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளுகிறது. ஆட்டின் ஒவ்வொரு பாகமும் மனிதன் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
காணாமல் போகக்கூடியது
எல்லா மிருகங்கங்களிலும் செம்மறி ஆடு மட்டுமே தன் சொந்த இடத்தைவிட்டு சில கிலோ மீட்டர்கள் போய்விட்டால் காணாமல் போகக் கூடியது; அதனால் தானே தன் இருப்பிடத்திற்குத் திரும்பிச்செல்ல முடியாது. வேறு எல்லா மிருகங்களுக்குமே தன் இருப்பிடத்திற்குத் திரும்பிப் போய்விடக்கூடிய ஒரு நுண்ணுணர்வைப் படைத்தவர் தந்திருக்கிறார். அது எல்லா மிருகங்களுக்கும் இயற்கையானது; செம்மறி ஆட்டிற்கு மட்டும் இது பொருந்தாது. தன் இருப்பிடத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும்போது செம்மறி ஆடு தான் செய்துகொள்ளக்கூடிய சில ஆற்றல்களைக் கொண்டிருக்கிறது. வழமையாகத் தான் மேயக்கூடிய இடம் அதற்கு நன்றாகத் தெரியும். தன் பிறந்த இடமும், தாயிடம் பாலருந்திய இடமும் அதற்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு நாளும் தான் ஓய்வெடுக்கும் இடத்திற்கே அது ஓய்வெடுக்கச் செல்லும். உறங்கும் இடமும் அதற்கு நல்ல பரிச்சயம். ஏனைய மிருகங்களைவிட, அது தான் வழமையாக மேயும் இடத்திற்கே தொடர்ந்து செல்வதோடு, அந்தத் தூரத்திற்கு மேல் அது ஒருநாளும் போகாது.
ஆனால், அதற்குப் பரிச்சயமில்லாத ஓரிடத்திற்கு அதைக் கொண்டுபோய்விட்டால் அது துப்புரவாக தொலைந்துபோய்விடும். அதால் எங்குபோவதென்று அறிந்துகொள்ள முடியாது. தான் எங்கு இருக்கிறோம், எங்கு போகவேண்டும் என்ற அறிவெல்லாம் அதற்கு முழுமையாக இருக்காது. மீண்டும் தன் இருப்பிடத்திற்கு அதால் திரும்பிப்போக முடியாது. அவ்வாறு காணாமல் போன ஆடு தான் நிற்கும் இடத்தையே தொடர்ந்து சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருக்கும்; அது குழப்பத்தோடும், அமைதி இழந்தும், தடுமாற்றமும், திகைப்பும் நிறைந்ததாக சுற்றிக்கொண்டிருக்கும். கூட்டமாக நின்றுகொண்டிருக்கும் ஏனைய எல்லா ஆடுகளையும் விட்டுவிட்டு நம்மாண்டவர் ‘காணாமல் போன ஆட்டைத்’ தேடிக் கண்டுபிடிக்கப்போவதைப்பற்றி சுவிசேஷ நூல்களில் சொல்லியிருப்பதை வாசித்திருக்கிறீர்கள் அல்லவா? ஏன் தெரியுமா? தொலைந்து போயிக்கும் அந்த ஆட்டிற்குச் சுயமாகத் தன்னிடத்தைத் தேடி வரும் வல்லமை இல்லாததால்தான்.
செம்மறி ஆடு அழகானது; அமைதியானது; தாழ்மைகொண்டது. எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கும் வகையில் அது முழு முட்டாள்தனமுள்ளது அல்ல; அதற்குப் புத்தியிருக்கிறது. ஆனால், வழிதவறிப் போய்விட்டால் மட்டும் அது முற்றிலும் தொலைந்துபோய் என்ன செய்வதென்று அறியாமல் நின்றுகொண்டிருக்கும்; அதால் உணவையும், தண்ணீரையும் தேடிப்போய்த் தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாது. உலகத்தில் பில்லியன் அளவுக்கு செம்மறி ஆடுகள் இருக்கின்றன. அவைகளுக்கு பாதுகாப்பளிக்கும் ஆயிரக்கணக்கான மேய்ப்பர்கள் மட்டும் இல்லாவிட்டால் அத்தனையும் தண்ணீரும் உணவுமில்லாமல் வெகு சீக்கிரமே மடிந்துபோய்விடும். நம்மாண்டவரைப்போல அந்த மேய்ப்பர்கள் காணாமல் போன ஆடுகளைத் தேடிக்கண்டுபிடித்து வீட்டுக்குக் கொண்டுபோகிறார்கள்; ஏனென்றால் அவற்றால் சுயமாகத் திரும்பி வரமுடியாதென்று அவர்களுக்குத் தெரியும். ஏனைய எல்லா மிருகங்களுமே தான் வந்த இடமறிந்து வீடு திரும்பும் உணர்வுள்ளவை; செம்மறி ஆட்டால் அதைச் செய்ய முடியாது. இப்போது தெரிகிறதா, கர்த்தர் ஏன் நம்மைத் தொலைந்துபோன ஆட்டிற்கு ஒப்பிட்டு வேதத்தில் எழுதியிருக்கிறார் என்று?
செய்வதென்னவென்று தெரியாமல், குழம்பிப்போய், பசியோடும், தாகத்தோடும் ஆண்டவரை அறியாமல் ஆத்மீக வழி தெரியாமல் இருந்த மக்கள் கூட்டத்தைக் கண்ட ஆண்டவர் அவர்களைப் பார்த்து மேய்ப்பனில்லாத மந்தைகள் என்று சொன்னார்.
மத்தேயு 9:36
அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
அவர்களுக்குத் தங்களுடைய நிலை புரியாமலிருந்தது. தங்களுக்காக அவர்களால் உணவு தேடிக்கொள்ள முடியவில்லை. தாகத்தோடு அவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு வழிதெரியவில்லை; வழிகாட்டுவதற்கும் அங்கு எவரும் இருக்கவில்லை. தண்ணீரும், உணவும் கொடுக்கவும் மேய்ப்பனில்லாமல் நின்றார்கள். இந்த நிலையைத் தான் ஏசாயா தீர்க்கதரிசி,
“நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்” (ஏசாயா 53:6)
என்று விளக்கியிருக்கிறார். நாமெல்லோரும் ஆண்டவரைவிட்டுப் பிரிந்து அவரிடம் போவதற்கு வழிதெரியாமல், அவருடைய மந்தைகளோடு இணையும் பாதை அறியாமல் செம்மறியாடுகளைப்போல குழம்பிப்போய் நின்றுகொண்டிருக்கிறோம்.
யாராவது செம்மறியாடுகளுக்கு தவறான வழிகாட்டி அழைத்துச் செல்லும்போது அவை உண்மை தெரியாமல் அந்த வழியில் போகக்கூடியவை. அந்த வகையில் தவறான பாதையில் விழுந்துவிடக்கூடியவை செம்மறியாடுகள். எங்கள் நாட்டில் வருடாந்தரம் கோடிக்கணக்கான செம்மறியாடுகள் இறைச்சிக்காக கொல்லப்படுகின்றன. ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? அப்படிக் கொல்லுவதற்காக ஆடுகள் கொண்டுபோகப்படும்போது அந்த ஆடுகளை வழிநடத்திச் செல்ல அதற்காகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஆண் ஆடு பயன்படுத்தப்படும். இந்த ஆட்டிற்குப் பெயர் யூதாசு ஆடு. ஆம்! ஆண்டவரைக்காட்டிக் கொடுத்த யூதாசின் பெயரே இதற்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஆடுகளை நம்பவைத்து தன்னைப் பின்பற்றி அழிவை நாடிப்போகவைப்பது இந்த ஆட்டின் பணி. ஆடுகள் அனைத்தும் இதற்குப் பின்னால் போய் லாரியில் ஏறி ஆடுகள் கொல்லப்படும் இடத்தை நோக்கிப் போகும். அந்த இடத்தை அடைந்த பின் ஆடுகள் இறங்கி கொல்லப்படும் கட்டடத்துக்குள் இந்த ஆட்டைப் பின்பற்றிப் போகும்போது அவற்றிற்குக் கீழிருக்கும் ஒரு கதவு திறக்கும். அது திறக்கும்போது ஆடுகள் உள்ளே விழுந்துவிடும். அங்கே ஆடுகள் கொல்லப்படும். இப்படியாக ஆட்டுக்கூட்டம் யூதாசு ஆட்டைப்பின்பற்றி மரணத்தை நாடிச் செல்லும். செம்மறி ஆடுகள் இலகுவாக ஏமாந்து அழிவை நாடிப் போய்விடக்கூடியவை. அவை காணாமல் போகின்றபோது அவற்றால் திரும்பி வரமுடியாது.
செம்மறி ஆடுகளைக் காணாமல் போகின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றுவது மிக அவசியம். அதனால்தான் மேய்ப்பனில்லாவிட்டால் அவைகளுக்கு பேராபத்து. இன்னொரு விஷயத்துக்காகவும் அவற்றிற்கு மேய்ப்பன் தேவை. அதாவது அவை பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றிற்கு வழிகாட்டுதல் அவசியமாகிறது. அவைகளுக்கு தண்ணீரும் உணவுமளித்து பாதுக்காப்பது இன்றியமையாதது. அவைகள் மேயும் இடத்துக்குபோய் உணவருந்தவும், தண்ணீருள்ள இடத்துக்குப் போய் தண்ணீரருந்தவும், மீண்டும் இருப்பிடத்துக்கு மாலையில் திரும்பிவரவும், வழியில் போகுமிடம் தெரியாமல் காணாமல் போய்விடாமல் இருக்கவும் மேய்ப்பன் இருப்பது மிகவும் அவசியம். அதுவும் ஒரு ஆட்டிற்குக் காயம் ஏற்பட்டால் மேய்ப்பன் அந்த ஆட்டைத் தோளில் தூக்கி வீட்டிற்குக் கொண்டுபோக வேண்டும். செம்மறியாடுகள் தங்களுடைய வாழ்நாள் பூராவும் புல்லைச் சாப்பிடுவதிலும், தண்ணீரருந்துவதிலுமே காலத்தைச் செலுத்துகின்றன. அவை அடிக்கடி தாகமெடுத்து தண்ணீரை நாடிப் போகும் குணங்கொண்டவை. ஆகையால் மேய்ப்பனொருவன் இல்லாமல் இருக்கும் ஆட்டுக்கூட்டம் மிகவும் பலவீனமான நிலையைச் சந்திக்கும்.
செம்மறியாட்டிற்குக் குடிப்பதற்கு நல்ல தண்ணீர் தேவை. தண்ணீர் எந்தவிதமான விஷத்தன்மையில்லாமலும், குழம்பிய குட்டையாக இல்லாமலும், தேங்கி நிற்பதாக இல்லாமலும் இருக்கவேண்டும். அதுவும் தண்ணீர் வேகமாக ஓடுகின்ற அருவியாக இல்லாமல் அமைதியாக ஓடுகின்ற நீராக இருக்கவேண்டும். அதனால்தான் தாவீது 23ம் சங்கீதத்தில் ‘அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்’ கர்த்தர் தன்னை அழைத்துப் போவார் என்று சொல்லுகிறான். தாவீது ஆடுமேய்க்கும் அனுபவமுள்ளவனாக இருந்தான். அவனுக்கு எத்தகைய தண்ணீர் செம்மறியாட்டிற்குத் தேவை என்பது தெரிந்திருந்தது. அதுவும் தண்ணீர் மிகுந்த வெப்பமில்லாமலும், அதிக குளிரில்லாமலும் இருக்கவேண்டும். அத்தகைய தண்ணீரே செம்மறியாட்டிற்குத் தேவை. அத்தோடு செம்மறியாடு போய் வசதியாக கண்டுபிடித்துக் குடிக்கும்படியாக தண்ணீர் வெகு அருகில் இருக்கவேண்டும்.
அநேக மிருகங்கள் தண்ணீர் எங்கிருக்கிறது என்று மோப்பம் பார்த்துப் போய்க் குடிக்கும் ஆற்றல் கொண்டவை. அவற்றால் காற்றை மனந்து பார்த்து அதன் தண்ணீர்ப்பதத்தைக்கொண்டு தண்ணீர் எங்கிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியும். ஆனால், செம்மறியாட்டால் அது முடியாது. செம்மறியாடுகள் தாங்கள் மேயும் வழமையான புல்வெளியைவிட்டு வெகுதூரம் போய்விட்டால் அவற்றால் தண்ணீர் பக்கத்தில் இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. அவை திரும்பவும் தங்களுடைய இருப்பிடத்தைத் தேடிப்போக முடியாமலும், தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியாமலும் தாகத்தால் மடிந்துபோகும்.
ஒரே இடத்தில் உணவருந்தும்
ஓரிடத்தில் புல் மேய்ந்துகொண்டிருக்கும் செம்மறியாடு அந்த இடத்தில் உள்ள புல்லை எல்லாம் உணவுக்குப் பயன்படுத்திய பிறகு தொடர்ந்து அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும். அங்கிருக்கும் வைக்கோலையும் புல்லையும் மேய்ந்து முடித்த பிறகு எஞ்சியிருக்கும் குப்பைகளையும் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும். யாராவது புதிய இடத்திற்கு அதை அழைத்துப்போனால் தவிர அதற்குச் சுயமாக இன்னொரு இடத்தைத் தேடிப் புல்மேயப் போகத்தெரியாது. அத்தோடு செம்மறியாட்டுக்கு எதையும் பிரித்துப் பார்த்து நல்லதை மட்டும் உணவாகக்கொள்ளத் தெரியாது. ஏனைய மிருகங்களால் அதைச் செய்ய முடியும். செம்மறியாட்டுக்கு எவை சாப்பிடக்கூடாத நச்சுத் தன்மையுள்ள செடிகள், களைகள், எவை நல்லவை என்பதெல்லாம் தெரியாது. இதிலிருந்து செம்மறியாடுகளுக்கு எந்தளவுக்கு அவைகளைப் பாதுகாத்து, உணவளித்து, தண்ணீர் கொடுத்து கவனமாகக் கண்காணித்து வளர்த்து வரக்கூடிய மேய்ப்பன் தேவை என்பது தெரிகிறதா? கவனிக்காமல் விடப்படும் செம்மறியாடு மடிந்துவிடும்; அதன் வாழ்க்கைக்கு அச்சாணி மேய்ப்பனே.
எண்ணெய்த் தோல் கொண்ட மிருகம்
பொதுவாக செம்மறியாடுகள் வெள்ளைத் தோலுள்ள அழகான மிருகங்கள் என்று நினைப்போம். குட்டியாக இருக்கும் செம்மறியாடு பார்ப்பதற்கும் தொடுவதற்கும், தூக்கி வைத்திருப்பதற்கும் அழகாகத்தான் இருக்கும். ஆனால், அந்தக் குட்டியாடு சீக்கிரமே வளர்ந்துவிடும். வளர்ந்த பிறகு அது அந்தளவுக்கு வெள்ளையாக அழகாக இருக்காது. அதன் தோல் சுத்தமாகவும் இருக்காது. அது பிசுபிசுக்கும் தோலாக அழுக்குகள் நிறைந்து காணப்படும். அதற்குக் காரணம் செம்மறியாட்டின் தோல் அதிகம் எண்ணெய் சுரக்கின்ற தோலாக இருப்பதுதான். அந்த எண்ணெய் ஆட்டின் தோல் முழுதும் பரவிக்காணப்படும். அந்தளவுக்கு எண்ணெய் சுரக்கின்ற வேறு மிருகம் இல்லை. அதன் தோலுக்குள் கையை நுழைத்துத் தடவினீர்களானால் கைபூராவும் எண்ணெய்ப்பசை இருக்கும். இதனால் ஆட்டைச் சுற்றிக்காணப்படும் அத்தனைக் குப்பைக்கூளங்களும் அதன் தோலில் ஒட்டிக்கொள்ளும். காற்றில் பரந்து வரும் குப்பையும், அது புரளும்போது நிலத்தில் காணப்படும் மண்ணும், குப்பையும் அதன் தோளில் ஒட்டிக்கொள்ளும். செம்மறியாடு சுத்தமாகவே இருக்காது. அதால் தன்னைச் சுயமாக சுத்தப்படுத்திக்கொள்ளத் தெரியாது; முடியாது. தன் தோலெல்லாம் அசுத்தமாக பிசுபிசுத்துக் காணப்படுகிறதே என்ற உணர்வெல்லாம் செம்மறியாட்டுக்குக் கிடையாது. மேய்ப்பன் அதைச் சுத்தப்படுத்தும்வரை அசுத்தத்தோடேயே நிற்கும்.
தண்ணீர்ப்பதமுள்ள நிலம் ஒத்துவராது
புல்லுள்ள நல்ல நிலம் செம்மறியாடுகளுக்குத் தேவைப்படுவது மட்டுமன்றி, நீர் தேங்கி நிற்கும் நிலம் அதன் நலத்துக்கு நல்லதல்ல. நிலத்தில் நீர் தேங்கி நின்றால் அதன் பாதங்கள் சிதைந்துவிடும். அதனால் அது வளரும் நிலம் நல்ல புல்லுள்ள நிலமாகவும் அதேவேளை தண்ணீர்ப்பதமற்ற நிலமாகவும் இருக்கவேண்டும். தண்ணீர்ப்பதமுள்ள நிலத்தில் அது மேயுமானால் அதற்குக் கடுமையான வயிற்றோட்டம் ஏற்படும். அதில் நிற்கவும், புரளவும் செய்யும் செம்மறியாட்டின் எண்ணெய்த் தோல் மேலும் அசுத்தமாகி இறுதியில் நோயால் அது மடிந்துபோகும்.
அதற்கு ஈக்கள் ஆபத்து விளைவிக்கும்
ஈக்கள் செம்மறியாட்டின் தோலில் முட்டையிடும்போது அந்த முட்டைகள் தகுந்த காலத்தில் ஈக்களாவதற்கு முன் புழுக்களை உண்டாக்கும்போது அது செம்மறியாட்டிற்குப் பேராபத்து விளைவிக்கின்றன. செம்மறியாட்டால் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் வல்லமை இல்லாததால் அது உணர்வின்றிக் காணப்படும். இப்படியாக ஆட்டுத்தோலில் வளரும் ஈக்கள் ஆட்டின் உயிரைக்குடித்துவிடும். அதனால்தான் ஆட்டு மேய்ப்பன் அடிக்கடி ஒவ்வொரு ஆட்டின் தோலிலும் கைநுழைத்துப் பார்த்து அங்கே ஏதாவது ஆட்டுக்கு ஆபத்தானவை இருக்கின்றனவா என்று ஆராய்வான். அப்படி ஈக்கள் முட்டைபோட்டிருக்கும் அடையாளம் காணப்பட்டால் அந்தப்பகுதித் தோலை மேய்ப்பன் அறுத்து எடுத்துவிடுவான். பின்பு தோல் நன்றாக வளர்ந்து தோலுரிக்கும் காலத்தில் சுத்தமாக இருக்கும். அத்தோடு ஆட்டின் உயிரும் காப்பாற்றப்படும். செம்மறியாட்டால் தன்னைச் சுத்தப்படுத்திக்கொள்ள முடியாதது மட்டுமல்ல அதால் இன்னொரு ஆட்டிற்கும் எந்த உதவியும் செய்ய முடியாது.
தன்னைக் காத்துக்கொள்ளத் தெரியாது
உலகத்தில் காணப்படும் அத்தனை மிருகங்களிலும் செம்மறி ஆடு மட்டுமே ஆபத்துக்களிலுமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளக்கூடிய எந்தவிதமான பாதுகாப்பு வல்லமையும் இல்லாத மிருகம். அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்ட ஆட்டுக்குட்டியாக இயேசுவை ஏசாயா 53ல் தீர்க்கதரிசி வர்ணித்திருப்பதற்குக் காரணம் இதுதான். செம்மறியாட்டால் உதைக்க முடியாது, கடிக்க முடியாது; உயரப் பாயமுடியாது; ஓடவும் முடியாது. அது நின்ற இடத்திலேயே நின்று மடிந்துவிடும். எந்த மிருகமாவது அதைத் தாக்கினால் உடனே எங்கேயாவது ஓடித் தப்பிக்கொள்ளுவதை விட்டுவிட்டு மற்ற ஆடுகளோடு போய் சேர்ந்து நிற்கும். அது தாக்க வருகின்ற மிருகத்திற்கு நல்ல வாய்ப்பாக அமையும். மேய்ப்பனில்லாவிட்டால் அதால் எந்த ஆபத்திலிருந்தும் தப்ப முடியாது.
வேறு எந்த மிருகத்தையும்விட செம்மறியாட்டிற்கு ஆபத்து அதிகம். ஏனெனில், அது மிகவும் தாழ்மையானது. எந்த ஆபத்திற்கும் பேச்சு மூச்சில்லாமல் அது தன்னை ஒப்புக்கொடுத்துவிடும். அதற்கு எதிர்த்துப் போராடும் குணம் கிடையாது. மேய்ப்பன் அதன் மயிரைக் கத்தரிப்பதற்காக அதன் கால்களை இறுக்கிப் பிடித்து அதன் சரீரத்தில் கத்தரியைப் பயன்படுத்துகிறபோது எந்தவித முறுமுறுப்பும் காட்டாமல் எந்த சத்தமுமிடாமல் ஆடு அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிடும். அப்படி மயிர் கத்தரிக்கும்போது மேய்ப்பன் பயன்படுத்தும் கத்தி எங்காவது உடலில் பதிந்து சின்னக் காயத்தை உண்டாக்கினாலும் ஆடு அமைதியாக இருந்துவிடும். செம்மறியாட்டை நீங்கள் தாக்கினால் அதன் இருதயம் எளிதில் உடைந்துபோய்விடும். தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் எந்தவித உணர்வுமில்லாமல் பட்டிருக்கும் காயங்களினால் இருதயமும் சரீரமும் வாடிப்போய் பலவீனப்பட்டுவிடும். அதனால் எதையும் எதிர்த்து நிற்க முடியாது; வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளைப் போராடி வெல்லும் குணம் அதற்கில்லை. ஆபத்துக்கு தன்னை ஒப்புக்கொடுத்து மடிய மட்டுமே அதால் முடியும்.
நன்றாக தோல் வளர்ந்து காணப்படும் செம்மறியாடு முதுகு புரள விழுந்துவிடுமானால் அதால் உடனடியாக எழுந்து நிற்க முடியாது. எழுந்து நிற்பதற்கு எந்த முயற்சியிலும் ஈடுபடாமல் அப்படியே இறந்து மடிய மட்டுமே அதற்குத் தெரியும். மேய்ப்பன் உடனடியாக அதன் நிலைமையைக் கவனித்து அதைத் திருப்பி எழுப்பி நிற்க வைக்காவிட்டால் அது மடிந்துவிடும். அது புரண்டு நீண்டநேரம் முதுகுப்புறம் விழுந்துகிடக்குமானால், அதைக் கவனித்து மேய்ப்பன் ஆட்டை எழும்பி நிற்கவைத்தால் அதால் உடனடியாக நிற்கமுடியாது. இரத்த ஓட்டம் நின்று போய் அது தள்ளாட ஆரம்பிக்கும். அதனால் மேய்ப்பன் அதைக்கவனமாகத் தூக்கித் தோளில் போட்டு இருப்பிடத்துக்குக் கொண்டுபோவான். மறுபடியும் அதன் இரத்த ஓட்டம் சீராக ஒரு மணி நேரமாவது ஆகும்.
அதற்கு அக்கறையோடுகூடிய கவனிப்புத் தேவை
செம்மறியாட்டுக்கு தொடர்ச்சியான அக்கறையோடுகூடிய கவனிப்பு தேவை. தன்னால் சுயமாக செய்யக்கூடியது எதுவுமில்லாமல் எல்லாவற்றிற்கும் அது மேய்ப்பனிலேயே தங்கியிருக்கிறது. அது மிகவும் பலவீனமான மிருகம். மேய்ப்பனில்லாவிட்டால் அதற்கு ஜீவனிருக்காது. மேய்ப்பனில்லாத ஆடுகள் என்று வேதத்தில் இஸ்ரவேலர் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லவா? வேறு எந்த மிருகமும் இந்தளவுக்கு இன்னொருவரில் தங்கியிருக்கும்படி படைக்கப்படவில்லை. எங்களூரில் இருக்கும் மந்தை மேய்க்கும் மேய்ப்பர்கள் மிகுந்த அக்கறையோடு ஆடுகளைக் கவனித்துக்கொள்ளுவார்கள். நள்ளிரவில்கூட ஆட்டின் மீது அவர்களுக்குக் கவனம் இருக்கும். முக்கியமாக ஆடுகள் குட்டிபோடும் பருவத்தில் மேய்ப்பன் நள்ளிரவிலும் மலையில் ஏறி ஆடுகள் இருக்கும் இடத்தைத் தேடிப்போய் பிறந்திருக்கும் ஆட்டுக்குட்டிகளை வீட்டிற்குக் கொண்டுசேர்த்து பாதுகாப்பளிப்பான். மேய்ப்பன் தனக்குச் சொந்தமான நிலத்தில் நல்ல வேலியமைத்து வெளியில் இருந்து ஆட்டுக்குத் தொல்லை தரும் எதுவும் உள்ளே வந்துவிடாதபடி பாதுகாப்பளிப்பான். வானத்தில் பறக்கும் பருந்துகூட சின்ன ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிச் சென்றுவிடலாம் என்பது தெரிந்து அதிலும் ஒரு கண்வைத்திருப்பான். ஏன் தெரியுமா? அந்தளவுக்கு பலவீனமான செம்மறி ஆடுகளுக்கு மேய்ப்பனின் கருத்தோடுகூடிய கண்காணிப்பு தேவை.
ஏனைய மிருகங்கள் அனைத்தைவிடவும் பலவீனமானதாக செம்மறியாடு இருந்தாலும் மற்ற மிருகங்களைவிட மிகவும் பயனுள்ளதாக அது இருக்கிறது. செம்மறியாட்டின் சரீரத்தின் அத்தனைப் பாகங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேதமும் செம்மறியாடும்
செம்மறியாட்டைப்பற்றிய அநேக விஷயங்களை நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். இந்த மிருகத்தைத்தான் வேதம் ஆண்டவருக்கும், அவருடைய மந்தையான ஆத்துமாக்களுக்கும் உதாரணமாக பயன்படுத்துகிறது. யாருக்கும் எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் வாய்மூடி அடிக்கப்படுவதற்காக இயேசு கொண்டுபோகப்பட்டதாக ஏசாயா (53:7) குறிப்பிடுகிறார்.
அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.
மேலே நாம் பார்த்திருக்கும் வசனம் மறுபடியும் மறுபடியுமாக பல தடவைகள் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனம்.
யோவான் ஸ்நானன் இயேசு தன்னிடம் வருவதைக் கண்டு, ‘இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என்று சொல்லியிருப்பதை யோவான் 1:29ல் காண்கிறோம். பிதா தன்னிடம் கொடுத்திருக்கும் மீட்பின் பணியைப் பூரணமாக நிறைவேற்ற எந்தளவுக்கு பிதாவின் கட்டளைகளுக்கு அமைதியாகத் தன்னை இயேசு ஒப்புக்கொடுத்திருக்கிறார் என்பதை ஆட்டுக்கு ஒப்பிட்டு அவரைப்பற்றி வேதம் தரும் விளக்கங்கள் காட்டுகின்றன.
இயேசுவுக்கு மட்டுமல்லாமல் வேதம் அடிக்கடி ஆத்துமாக்களை செம்மறியாட்டிற்கு ஒப்பிட்டு விளக்குகிறது. நாம் பாவத்தின் காரணமாக வழிதவறி ஆண்டவரை அறியாமல் குருடர்களைப்போல பாவத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை ஏசாயா 53:6 பின்வருமாறு விளக்குகிறது,
நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்;
பேதுரு நம்மைப்பற்றி விளக்கும்போது பின்வருமாறு கூறுகிறார்,
சிதறுண்ட ஆடுகளைப் போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள். (1 பேதுரு 2:25)
எபிரெயருக்கு எழுதியவர் செல்லுகிறார்,
நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபிரெயர் 13:20-21)
இயேசு தான் நல்ல மேய்ப்பன் என்றும், இஸ்ரவேலில் மேய்ப்பர்கள்போல் வெளிப்பார்வைக்கு தங்களை இனங்காட்டி இருந்து வந்த ஓநாய்களில் இருந்து தன்னை விலக்கிக்காட்டி எப்படியெல்லாம் தன் மந்தைகளைத் தான் கவனித்துக்கொள்வேன் என்றும் யோவான் 10ல் அருமையாக விளக்கியிருக்கிறார். இங்கே மந்தைகளாகக் காட்டப்பட்டிருப்பது அவருடைய மக்களே.
- மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2. வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3. வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டு போகிறான். 4. அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5. அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.
மேலும், தான் எப்படியெல்லாம் ஆடுகளை நல்ல மேய்ப்பனாயிருந்து பாதுகாக்கிறேன் என்று இயேசு பின்வரும் வசனங்களில் விளக்குகிறார்.
- ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 8. எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை. 9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10. திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 11. நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 12. மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். 13. கூலியாள் கூலிக்காக வேலை செய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். 14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், 15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். 16. இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.
தன்னுடைய ஆடுகளுக்கும் தனக்கும் இருக்கும் பிரிக்கமுடியாத உறவை இயேசு இதே அதிகாரத்தில் பின்வருமாறு விளக்குகிறார்.
- ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். 27. என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 28. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. 29. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
தன் ஆடுகளின் மேல் அத்தனை அன்பு வைத்திருந்தபடியால்தான் மேய்ப்பரான இயேசு தான் மரிப்பதற்கு முன் பேதுருவைப் பார்த்து மூன்று தடவைகள் தன் ஆடுகளைத் தான் மேய்ப்பதுபோல மேய்க்கும்படிச் சொல்லியிருக்கிறார். அதை யோவான் 21:15-17 வரையுள்ள வசனங்களில் காண்கிறோம்.
- அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16. இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17. மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
பரிசுத்த ஆவியானவரே கர்த்தரின் வெளிப்படுத்தலாகிய வேதத்தை எழுத்தில் தந்திருக்கிறார். அவர் பயன்படுத்துகிற உதாரணங்கள் பூரணமானவை. அவரைவிட மேலான எழுத்தாளர்களை உலகத்தில் சந்திக்க முடியாது. வேதத்தில் அவர் பயன்படுத்தியிருக்கும் மேய்ப்பன்-ஆடு உதாரணம் மிகவும் அருமையானது. இந்த உதாரணங்களின் மெய்த்தன்மையைப் புரிந்துகொள்ளாமல் நம் மேய்ப்பனாகிய ஆண்டவரையும், நம்மைப்பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடியாது. அதனால்தான் பேதுரு தன்னுடைய முதலாம் நிருபம் 5ம் அதிகாரத்தில் திருச்சபைப் போதகர்களை (மூப்பர்கள்) மேய்ப்பனுக்கும், நம்மை மந்தைகளுக்கும் ஒப்பிட்டுப் பேசுகிறபோது பேதுருவின் வார்த்தைகளின் முழுத்தார்ப்பரியத்தையும் புரிந்துகொள்ளுவதற்கு நாம் மேய்ப்பனைப்பற்றியும், ஆடுகளின் தன்மையைப்பற்றியும் அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது. வேதம் போதிக்கும் ஆத்மீக சத்தியங்களின் ஆழமான மெய்த்தன்மையை இந்த உதாரணங்கள் நாம் துல்லியமாக அறிந்துணர உதவுகின்றன.
உங்களுக்குத் தெரியுமா? ஆடுகள் இல்லாமல் மேய்ப்பன் இருக்கமுடியாது; மேய்ப்பனில்லாமல் ஆடுகள் இருக்கமுடியாது. அப்படி இருந்தால் இந்த வார்த்தைகள் பொருளிழந்து போய்விடும். ஆடுகளுக்கும் மேய்ப்பனுக்கும் இருக்கும் உறவு அப்படிப்பட்டது; ஒருவரில்லாமல் இன்னொருவர் இருக்க முடியாது. நம்மினத்தில்தான் சபைகள் இல்லாத மேய்ப்பர்களையும், மேய்ப்பர்கள் இல்லாத மந்தைகளையும் பார்க்க முடியும். அந்தளவுக்கு வேதத்தை மீறிய வாழ்க்கையை அநேகர் கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் மேய்ப்பர்கள் என்ற பெயரில் ஓநாய்கள் ஆடுகளை சீரழித்து வருகின்ற அசிங்கங்களும் நம்மினத்தில் அதிகம். நல்ல மேய்ப்பன் தன்னை இழந்து ஆடுகளைப் பாதுகாப்பான். நம்மினத்து மேய்ப்பர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள ஆடுகளைப் பலிகொடுக்கிறார்கள். சமுதாயத்தில் ஒரு வேலையைத் தேடி நியாயமாக உழைத்து தன்னையும் குடும்பத்தையும் காத்துக்கொள்ள வக்கில்லாமல் வெறும் சம்பளப்பணத்துக்காக ஊழியத்தை நடத்தி ஆத்துமாக்களிடம் பணம் வசூலித்து வரும் ஆயிரக்கணக்கான ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் நம்மினத்தில் ஏராளம். நம் நல்ல மேய்ப்பர் இவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பு நாளை வைத்திருப்பதை இவர்கள் உணராமல் இருந்து வருகிறார்கள். தங்கள் கடமையைப் பொறுப்போடு செய்துவராத ஒவ்வொரு திருச்சபை மேய்ப்பனும் ஒருநாள் வரப்போகும் நியாயத்தீர்ப்பில் இருந்து தப்ப முடியாது.
குருடன் குருடனுக்கு வழிகாட்டுவதுபோல்
குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியுமா? மிகவும் கஷ்டம். இரண்டு பேருக்குமே கண் தெரியாததால் இரண்டு பேருக்கும் அதனால் ஆபத்து ஏற்படும். அதுமட்டுமல்லாமல் பாதை தெரியாத ஒருவன் இன்னொருவனுக்கு பாதை காட்ட முடியாது. இரண்டு பேருமே தட்டுத்தடுமாறி வீடுபோய்ச் சேரமுடியாமல் எங்கோ நின்று தடுமாறிக்கொண்டிருப்பார்கள். இதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் இதே நிலைமைதான் இன்று நம்மினத்து ஊழியங்கள் மற்றும் சபைகளைப் பாதித்துக்கொண்டிருக்கின்றன. வெறும் சுயநல உணர்ச்சியோடு தங்களுடைய தேவைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக ஆத்மீக ஆசை இருப்பதுபோல் பாவனை செய்து கூட்டங்களுக்குப் போய்க்கொண்டிருக்கும் கூட்டம் ஒருபுறமிருந்தபோதும், இன்னொருபுறம் உண்மையாகவே சத்திய வாஞ்சைகொண்டு சத்தியத்தைத் தேடிக்கொண்டிருக்கின்ற ஒரு சிறிய கூட்டமும் எங்கும் இருந்து வருகிறது. அத்தகைய சத்திய வாஞ்சையை எந்த இருதயத்திலும் விதைக்கிறவர் பரிசுத்த ஆவியானவர்தான். வேதம் அதிகம் தெரியாமலிருந்தாலும் உண்மையான, உறுதியான விசுவாசத்தைக் கொண்டிருந்து சத்தியத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றது இந்தக் கூட்டம். இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களை நான் பல நாடுகளில் என்னுடைய பிரயாணங்களின்போது சந்தித்திருக்கிறேன். அவர்களோடு உறவாடி, சத்தியத்தைப் பகிர்ந்துகொண்டு அவர்களுடைய சந்தோஷத்தில் பங்கேற்றிருக்கிறேன். அப்படியான ஒரு சந்தர்ப்பம் இந்த டிசம்பர் மாதமும் கிடைத்தது.
இத்தகையோரை நான் நம்மினத்தில் இந்திய தேசத்தில் பார்த்திருக்கிறேன், ஸ்ரீ லங்காவிலும், மலேசியாவிலும் சந்தித்திருக்கிறேன். இவர்களெல்லோரும் பழைய இஸ்ரவேல் ஜனத்தின் மத்தியில் இருந்த மீதமானவர்களைப்போல இன்று இருந்துவருகிறார்கள். இவர்களால் நம்மினத்தில் காணப்படும் ஆத்மீகக் குழப்பத்தையும், ஆத்மீகப் பஞ்சத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது. சத்திய வேதத்தில் நல்லறிவு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களுடைய வாஞ்சையாக இருக்கிறது. மோகன் சி லாஸரஸ், பால் தினகரன் போன்றோர் வலையில் சிக்கி அழிந்துபோவதை இவர்களால் தவிர்த்துக்கொள்ள முடிகிறது. அத்தகையோரை நாடி ஓடிக்கொண்டிருக்கும் சுயநலம் பிடித்த போலிக்கூட்டத்தோடு இவர்களால் சேரமுடியவில்லை. இருந்தபோதும் சத்தியத்தை மட்டும் பிரசங்கித்துப் போதித்து வருகின்ற சபைகளில்லாமல் இவர்கள் தவிப்போடு இருந்துவருகிறார்கள். இவர்களுக்காகவே 25 வருடங்களுக்கு முன்பு நான் திருமறைத்தீபம் இதழை ஆரம்பித்ததோடு, வேறு நூல்களையும் எழுதியும், மொழிபெயர்த்தும் வெளியிட ஆரம்பித்தேன். ஆத்தும தாகம்கொண்ட இந்த ஜனங்கள் காலத்தைப் போக்குவதற்காக எங்காவது இருந்து வாழ்க்கையைக் கடத்திவிடுவோம் என்ற எண்ணமில்லாமல் இருந்து வருகிறார்கள். இவர்களால் பொய்யைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறைந்த வேத அறிவிருந்தபோதும் அசத்தியத்தை அடையாளங் கண்டுகொள்ள முடிகிறது. இவர்களுடைய ஆத்தும தாகம் இவர்களைச் சுற்றியிருக்கும் போலிக் கிறிஸ்தவக் கூட்டத்திற்கு எரிச்சலை உண்டாக்குகிறது. எங்களோடு சேர்ந்து எப்படியாவது காலத்தை ஓட்டிவிடுவதை விட்டுவிட்டு சத்தியம், சத்தியம் என்று அலைகிறாயே என்று இவர்களை எள்ளிநகையாட அவர்கள் தவறுவதில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே சிலரை என் மனம் நினைத்துப் பார்க்கிறது. குக்கிராமம் ஒன்றில் இருந்து சத்திய வாஞ்சையோடு தனிமனிதராக நியாயத்திற்காக பேசிக்கொண்டிருக்கிற ஒருவரை எனக்குத் தெரியும். தன் கிராமத்தில் ஒரு நல்ல சபையில்லையே என்பதுதான் அவருடைய தவிப்பு. இருக்கும் சபைப் போதகன் வயிற்றுக்கும் வசதிக்குமாக அலைந்துகொண்டிருப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருவது இவருக்குத் தெரியும். நல்ல நூல்களை அந்த மனிதர் வாசிக்கும்படி இவர் கொடுக்கின்றபோது அதுகூட அத்தகைய ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்ப் போதகனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
சத்தியத்தைக் கற்றுத்தேற வேண்டும் என்று இறையியல் கல்லூரியை நம்பிப் போய் சத்தியத்தை அங்கே அரவே காணமுடியாமல் அரைவாசியில் படிப்பை முடித்துவிட்டு சத்தியத்தை எங்கு பெற்றுக்கொள்ளலாம் என்று நாடி வந்திருக்கிறவர்களை எனக்குத் தெரியும். சத்தியம் தொடர்ந்து அநேகருக்கு கண்ணைத் திறந்துவிட்டுக்கொண்டிருக்கிறது என்பதில் மட்டும் சந்தேகமில்லை. இருந்தபோதும் இத்தகையோருக்கெல்லாம் வாராவாரம் சத்தியப் போதனையளித்து சத்திய ஆராதனை நடத்திவரும் நல்ல சபைகளும் நற்போதகர்களும் அதிகளவில் இல்லாமலிருப்பதுதான் கண்ணீரை வரவைக்கும் வருத்தமாக இருக்கிறது. நல்ல போதகர்களுக்கு எங்கு போவது? ஒருவர் என்னைக் கேட்ட கேள்வி இது. நல்ல போதகர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதில் கேள்வி கேட்டவர் தெளிவாகத்தான் இருந்தார். ஆனால், அத்தகையோரை எங்கு தேடிக்கண்டு பிடிப்பது? எப்போதுமே எனக்குத் தெரிந்திருக்கும் சிலரை அவர்களுக்கு நான் அறிமுகம் செய்து வைக்காமலில்லை. விரல் விட்டு எண்ணிவிடும் சிறுதொகையாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள். இதெல்லாம் எதை உணர்த்துகிறது? நல்ல போதகர்களின் இன்றியமையாத அவசியத்தைத்தான். அத்தகையோரை உருவாக்காமல் அவர்கள் தானாக முளைத்துவிடப்போவதில்லை. அத்தகையவர்களைக் கர்த்தரே சபைக்குத் தந்தபோதும் (எபேசியர் 4), அவர்களை அடையாளங்கண்டு வளர்த்து விடாமல் அவர்கள் சுயமாக உருவாவதில்லை. அவர்கள் பின்பற்ற அவசியமான உதாரண புருஷர்கள் தேவை; வேதத்தைப் பின்பற்றும் நல்ல சபை தேவை; அவர்களுக்குப் பயிற்சியும் வழிகாட்டுதலும் அவசியம். அந்தவிதத்தில் அவர்களை இனங்கண்டு பயிற்சியளித்து வளர்த்துவிடுமளவுக்கு நம்மினத்தில் பக்திவிருத்தியும், வேதத்தில் துல்லிய ஞானமும், சத்தியத்திற்காக மட்டும் நிற்கக்கூடிய நெஞ்சுரம் கொண்டவர்களையுந்தான் காணமுடியாமல் இருக்கிறது. சீர்திருத்தவாதிகளைப் போல இனங்காட்டிக்கொள்ளும் சில பச்சோந்திகள் தங்கள் சுயநலத்திற்காக அநேக வாலிபர்களைப் பலிகொடுக்கின்ற செயலைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் மனதை உருக்கும் கதைகள். ‘என் சபையை நான் கட்டுவேன்’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளின் அர்த்தமே தெரியாது பலர் சபை நடத்துகிறோம் என்று தங்களுடைய பெட்டிக்கடைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆராதனை கெரிஸ்மெட்டிக் ஆராதனையை நினைவுபடுத்தும்படி கைத்தட்டலும், பெருஞ்சத்தமும் உள்ளதாக இருக்கும். அவர்கள் ஆண்டவரே அறியாத, துதி என்ற பெயரில் எல்லோரும் இணைந்து கூக்குரலிட்டு ஆராதனை செய்வது பாபேல் கோபுரத்தை மக்கள் கட்டியபோது ஆண்டவர் மொழியைப் புரிந்துகொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியதால் நிகழ்ந்த கோமாளித்தனத்தை நினைவுறுத்துவதாக இருக்கிறது. இத்தகையோர் மத்தியில் வேத வசனங்களை ஆராய்ந்து இலக்கண, வரலாற்றடிப்படையில் தரப்படும் நடைமுறைக்குகந்த பிரசங்கங்களை எதிர்பார்க்க முடியாது; அவை வெறும் வார்த்தை ஜம்பமாக உளறல்களாகவே இருக்கும்.
வாலிப வயதில் இருந்து பிரசங்கிக்கவும், போதிக்கவும் ஆவலுள்ள சிலர் என் ஆலோசனையைக் கேட்டிருக்கிறார்கள்; கேட்டு வருகிறார்கள். அவர்களுடைய வாஞ்சை எனக்குப் பிடித்திருந்தபோதும் ஆர்வக்கோளாறு எனக்கு பயத்தை உண்டாக்குகிறது. அவர்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ எனக்குத் தெரிந்த ஆலோசனையை நான் முன்வைத்திருக்கிறேன். வாலிப வயது அருமையான வயது; இருந்தாலும் அதற்குக் கடிவாளம் தேவைப்படுகிறது. துள்ளிக்குதித்தோடும் தண்ணீர் போன்ற அதன் வாஞ்சையை நாம் ஓர் அணையைக் கட்டி நிறுத்திவிடாமல், ஒரு கால்வாயைக் கட்டிப் பொறுமையோடு ஓடும்படிச் செய்யவேண்டும். நம்மினத்து வாலிபர்களுக்கு வாசிப்பில் ஆர்வத்தை உண்டாக்க வேண்டும். வாசிக்காத ஒருவனும் பிரசங்கியாக, போதகனாக வருவது ஆத்துமாக்களுக்கு பேராபத்து. தன்னில் நல்லறிவைக் கொண்டிராத ஒருவன் மற்றவர்களுக்கு அறிவாகிய பஞ்சாமிர்தத்தை ஊட்டி அவர்களுடைய அறிவுப் பசியைத் தீர்க்க முடியாது. வாசிக்காத, ஆராய்ந்து சிந்திக்காத பிரசங்கியாலும் போதகனாலும், தனக்கோ மற்றவர்களுக்கோ எந்தப் பிரயோஜனமுமில்லை. வாசிக்காமலும், சிந்திக்க முடியாமலும் முட்டாள்களைப்போல மேடையில் வாராவாரம் உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறவர்களையும் நான் அறிவேன். அத்தகையோரின் பேச்சைக்கேட்டு வாழவேண்டியிருப்பவர்களை நினைத்தால் நிச்சயம் நெஞ்சு கொதிக்கத்தான் செய்யும்.
வாசிக்க வேண்டியதன் அவசியத்தைப்பற்றி நான் எழுதுவது இது முதல் தடவையல்ல. வாஞ்சையிருக்கும் நம் வாலிபர்களால் ஏன் வாசிக்க முடியாமலிருக்கிறது என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். புத்தகங்கள் அதிக விலையில் விற்கப்படுகின்றன என்று நிச்சயம் சொல்ல முடியாது. அப்படியானால் அவர்கள் ஏன் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை? நிச்சயமாக அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் கல்வி முறை ஒரு காரணம் என்பதை நான் பலமுறை விளக்கியிருக்கிறேன். அதை மறுபடியும் விசிட் பண்ண வேண்டிய அவசியமில்லை. வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்க என்ன செய்ய வேண்டும் என்றுதான் சிந்திக்க வேண்டும்; சில செயல்முறைகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்த வேண்டும்.
வாரத்துக்கு ஒரு முறை நல்ல போதகர்கள் வாலிபர்களோடு கூடி, தான் வாசித்துப் பயன்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதோடு அவர்களையும் சம்பாஷனையில் ஈடுபட வைப்பது அவசியம். அடுத்தடுத்து வரும் கூட்டங்களில் சில நூல்களை அறிமுகப்படுத்தி அவர்களை வாசிக்க வைக்க வேண்டும். வாசித்தவற்றை கூட்டத்தில் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் பக்குவத்தை அவர்கள் மத்தியில் வளர்க்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில வருடங்கள் செய்துவந்தால் அந்த வாலிபர்களும் அதைச் செய்யும் போதகனும் வளர்ச்சியடைய முடியும். போதகர்கள் முதலில் வாலிபர்களைத் தள்ளிவைத்துப் பழகுவதை நிறுத்தவேண்டும். அவர்களுக்கு ஊக்கமளித்து வளர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். அநேக போதகர்கள் அவர்களைத் தங்களுடைய சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளுவதில் மட்டுமே கருத்தாக இருந்துவிடுகிறார்கள்; அவர்களுடைய வாழ்க்கையிலும், எதிர்காலத்திலும் அக்கறைகாட்டுவதில்லை. எத்தனைப் போதகர்கள் வாலிபர்களோடு இணைந்து ஜெபத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்? தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை அவர்கள் பார்த்து வளரும்படியான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்களா?
இத்தகைய வாசிப்புப் பழக்கம் வாலிபர்களில் வளருமானால், அவர்கள் தாம் வாசித்தவற்றை அறிவுபூர்வமாக மற்றவர்களோடு கலந்துகொள்வதில் திறமை பெற்றார்களெனில் அவர்களுக்கு வேத இறையியலில் இருக்கும் நாட்டத்தையும், வளர்ச்சியையும் நாம் அறிந்துகொள்ள முடியும். இத்தகைய வாசிப்பு வழக்கத்தைப் பயன்படுத்தி ஒரு போதகன் அந்த வாலிபர்களுக்கு நல்ல நூல்களை அறிமுகப்படுத்தி வாசிக்க வைப்பதன் மூலம் இறையியல் அறிவைப் பெருகச் செய்யமுடியும். நம்மினத்தில் இதற்கெல்லாம் முக்கிய தடையாக இருப்பது சோம்பேறித்தனம். டன் கணக்கில் நமக்கு தேவையில்லாதவைகளையெல்லாம் செய்வதற்கு நேரமிருக்கும், ஆனால் நல்ல நூலொன்றை வாசிப்பதற்கு அநேக சாக்குப்போக்குகளைச் சொல்லுவோம். இத்தகைய வழக்கம் ஆத்மீக வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. சோம்பேறித்தனத்திற்கு முதலில் குட்பை சொல்லவேண்டும். அது இருக்கும்வரை ஒருவரும் உருப்படாமலேயே போய்விடுவோம். என்வீட்டில் என் மனைவி பிள்ளைகளுக்கு அது ஒருபோதும் இருந்ததில்லை. அதுபற்றியே எங்களுக்குத் தெரியாது என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்போதும் எதையாவது செய்வதிலேயே என் குடும்பம் கருத்தாக இருந்து வந்திருக்கிறது. நம் கர்த்தர் உழைக்கும் கர்த்தர் அல்லவா? அவரிடம் இருந்துதான் இதைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
ஆத்மீக வளர்ச்சிக்கும், வாசிப்புக்கும் தடையாக இருக்கும் இன்னொன்று, ஒரு காரியத்தை செய்ய வேண்டிய நேரத்தில் செய்து முடிக்காமல் தள்ளிவைக்கும் பழக்கம். இதை ஆங்கிலத்தில் procrestination என்று அழைப்பார்கள். இது நம்மினத்தில் கலாச்சாரமாக இருந்துவருகிறது. இதை அடியோடு ஒழிக்கப் பழக வேண்டும். வாழ்க்கையில் எந்த முக்கிய காரியமும் தள்ளிவைக்கப்படக்கூடாது. ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு நேரத்தோடு முடிப்பதில் ஆர்வம் காட்டிச் செய்யவேண்டும். இதையும் கர்த்தரிடம் இருந்துதான் பழகுகிறோம். நேரத்தோடும், காலத்தோடும் நாம் செய்து முடிக்கும் பணிகள் நம்மை மேலும் மேலும் உழைப்பதில் ஊக்குவித்து வாழ்க்கையில் முன்னேற வைக்கும். வாலிபர்களுக்கு பாலூட்டுவதுபோல் இதை நாம் புரிய வைக்கவேண்டும். அவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பணிகளை நேரத்தோடும் கருத்தோடும் செய்துமுடிக்க ஊக்குவிக்கவேண்டும். அப்படிச் செய்வதனால் வரும் ஆசீர்வாதங்களை அவர்கள் உணரும்படிச் செய்யவேண்டும்.
வாசிக்கும் பயிற்சியில்லாமலிருப்பதற்கு இன்னுமொரு காரணம், அறிவைப் பெருக்கிக்கொள்ளும் ஆர்வம் இல்லாமல் இருப்பது. கல்லூரியில் கற்பதோடு அறிவுப்பெருக்கம் நின்று விடுவதில்லை. நம்மினம் பெரும்பாலும் எந்த அறிவும் தொழிலிலும் பணத்திலும் போய் முடியவேண்டும் என்று எண்ணுகிறது. பணமீட்டும் தொழில்களை அடையவே அறிவைப் பயன்படுத்தி வருகிறது நம்சமூகம். அறிவுப்பெருக்கத்திற்கும் தொழிலுக்கும், பணத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பேரறிவாளிகளாக உலகத்தில் இருந்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்களாக ஒருபோதும் இருந்திருக்கவில்லை. முக்கியமாக வேத அறிவுப்பெருக்கத்திற்கான வழியையே நாம் இங்கு ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். வேத அறிவுப்பெருக்கம் கர்த்தரை அறிகின்ற அறிவுக்கும், அவரில் வளருவதற்கும் இன்றியமையாதது. அதைப் பணம் சம்பாதிக்கப் பயன்படுத்தக்கூடாது. வாசிக்கும் வழக்கம்கொண்டிராத எவரைக் கேட்டாலும் நேரம் இல்லை என்று சொல்லுவதோடு, வேலை அதிகம் என்றும் சொல்லுவார்கள். அவர்கள் வேத அறிவுவளர்ச்சிபற்றிய உணர்வே இல்லாமல் இருந்துவருகிறார்கள். வாசிப்பில்லாமல் வேத அறிவு வளராது என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்த்திருக்கவில்லை. வேத அறிவுப் பெருக்கத்திற்கும், வாசிப்பிற்கும் இடையில் இருக்கும் உறவை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. சமீபத்தில் ஒருவர், நல்ல தொழிலில் இருக்கிறவர், வேத அறிவு வேண்டும் என்ற வாஞ்சையுள்ளவர், என்னால் வாசிக்க முடியவில்லை என்று சொன்னார். அதாவது, அவரால் நேரமெடுத்து மனதை ஒருநிலைப்படுத்தி ஒரு நூலை வாசிக்க முடியவில்லையாம். நான் அவரிடம், உங்கள் தொழிலே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது, அதை வாசிக்காமல் எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டேன். சரியான பதில் கிடைக்கவில்லை.
சீர்திருத்தக் கிறிஸ்தவம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது; அதை முதன்மைப்படுத்துவது. வேத அறிவில்லாமல், வேதத்தை அடித்தளமாகப் பயன்படுத்தாமல் கர்த்தரை நாம் ஆராதிக்கவோ, அவரில் வளரவோ, அவருக்குப் பணி செய்யவோ முடியாது என்று நம்புகிறது சீர்திருத்தக் கிறிஸ்தவம். வேத அறிவை அவரோடு இருக்கும் உறவுக்கு அடித்தளமாகப் பார்க்கிறது சீர்திருத்தக் கிறிஸ்தவம். கர்த்தரை சகல விஷயங்களிலும் வாழ்க்கையில் மகிமைப்படுத்த வேதமும், அதில் நமக்கிருக்கும் நடைமுறை ஞானமும் இன்றியமையாதது என்பது சீர்திருத்தக் கிறிஸ்தவத்தின் ஆணித்தரமான நம்பிக்கை. சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் வாசிக்காமல், சிந்திக்காமல், ஆராயாமல் இருப்பது என்பது முரண்பாடான தன்மை. சீர்திருத்தக் கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக்கொள்ளுகிற எவரும் வாசித்து சிந்திக்காமல் இருந்தால் அவர்கள் சீர்திருத்தக் கிறிஸ்தவம் என்ற போர்வையை சுயநல நோக்கத்திற்காகவே தங்கள் மேல் போர்த்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரை நான் அறிவேன். எந்த சத்தியத்தையும், வார்த்தைப் பிரயோகத்தையும் சுயநல நோக்கத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளுவது தானே நம்மினத்தின் வழக்கம்.
ஜொயல் ஆஸ்டீன், ஜொய்ஸ் மாயர், நம்மினத்து மோகன் சி லாஸரஸ் போன்றோரின் கிறிஸ்தவ விளக்கங்களுக்கும், நடைமுறைச் செயல்களுக்கும் நல்ல நூல் வாசிப்பு அவசியமில்லைதான். வெறும் உணர்ச்சிவசப்படுதலையும், முழு நாள் ஜெபத்தையும், சுகமளிப்புக் கூட்டங்களையும், வேதத்திருகுதாளம் செய்து அதில் இல்லாததைப் போதிப்பதையுமே இவர்கள் தங்கள் வாழ்க்கை இலட்சியமாகக்கொண்டு ஆத்துமாக்களைத் திசை திருப்பிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மெய்யான வேத அறிவில் நாட்டமில்லை. ஆத்துமாக்களுக்கு சத்துள்ள ஆவிக்குரிய உணவை ஊட்டுவதில் அக்கறையில்லை. தங்களுடைய சுயநல நோக்கங்களுக்காக ஆத்துமாக்களையும் அவர்களுடைய பணத்தையும் பயன்படுத்தி தங்களைச் சமுதாயத்தில் முக்கிய இடத்தில் நிலைநிறுத்திக்கொள்ளுவதிலேயே இவர்கள் கருத்தாக இருக்கிறார்கள். இவர்களைப் பின்பற்றி ஊழியமென்ற பெயரில் எதையெதையோ செய்து வருகிறவர்கள் ஒருபோதும் சத்தியத்தில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்; சத்திய அறிவில் வளர்வதில் சொட்டும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். அவர்களுடைய இருதயம் சுய ஆதாயத்தைப் பூர்த்தி செய்வதையே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருக்கிறது. இத்தகைய கூட்டத்தைப் பின்பற்றிப்போகும் நம்மினத்து ஆட்டுமந்தைகளோடு பேசிப்பாருங்கள். அவர்களுக்குச் சத்தியத்தில் நாட்டம் இருக்காது. சரீர சுகத்திலும், வாழ்க்கை வசதி பெருகுவதிலும் மட்டுமே அவர்கள் அக்கறை காட்டுவார்கள்; அதற்குதவும் கிறிஸ்தவமே அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் அவர்கள் வாக்குத்தத்த வசனங்களுக்காக மட்டும் அலைகிறார்கள். அத்தகைய போலிக் கிறிஸ்தவமே நம்மினத்தில் விஷத்தைப்போலப் பரவிக்காணப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் வாசிப்பைப் பற்றி எப்படிப் பேச முடியும். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
சீர்திருத்தக் கிறிஸ்தவம் நாம் மேலே பார்த்திருப்பதுபோன்ற போலிக் கிறிஸ்தவமல்ல. அது உணர்ச்சிகளுக்கு மட்டும் தீனி போடும் கிறிஸ்தவமல்ல. வெறும் வாக்குத்தத்தங்களைக் கொடுத்து ஆத்துமாக்களில் போலி நம்பிக்கையை வளர்க்காது அது. முழு நாளையும் ஜெபத்தில் செலவிடும்படி அது ஆத்துமாக்களுக்கு பொய்யான ஆத்மீக வைராக்கியமூட்டாது. ஜனங்கள் ஒவ்வொரு நாளும் எட்டு மணிநேரம் நியாயமாக உழைக்கும்படிக் கர்த்தர் பணித்திருப்பது அதற்குத் தெரியும். சுயநலநோக்கோடு மட்டும் வாழ்ந்து கர்த்தரிடம் சரீரசுகத்தை நாடி அது ஓடிக்கொண்டிருக்காது; எவரையும் ஓடவும் வைக்காது. கர்த்தரின் கட்டளைகளைத் தன் வாழ்க்கையிலும் சமுதாயத்திலும் அன்றாடம் நிறைவேற்றி வாழ்வதன் மூலமே கிறிஸ்தவன் கர்த்தரை மகிமைப்படுத்த முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறது சீர்திருத்தக் கிறிஸ்தவம். ஆவிக்குரிய மறுபிறப்படையாத எவராலும் அதைச் செய்யவும் முடியாது என்கிறது சீர்திருத்தக் கிறிஸ்தவம். இந்த வேத உண்மைகளைச் சரியாகத் தெரிந்து வைத்திருந்து வாழ்க்கை நடத்த சீர்திருத்தக் கிறிஸ்தவர்கள் தங்களில் வேத அறிவைப் பெருக்கிக் கொள்ளுகிறார்கள். விமானி தன் விமானப் பயணத்தை ஆரம்பிக்கும் ஒவ்வொரு நாளும் விமானத்தின் மெனுவலை, கையேட்டைப் பின்பற்றி சகலத்தையும் சரிபார்த்தபின்பே அதை விண்ணில் உயர்த்தும் வேலையைச் செய்வான். அப்படிச் செய்யாமல் அவனால் விமானத்தைப் பாதுகாப்போடு ஓட்டமுடியாது. சீர்திருத்தக் கிறிஸ்தவனின் கையேடு பரிசுத்தவேதம். அதில் நல்லறிவில்லாமல் இதுவரை சொன்னவற்றையெல்லாம் அவன் செய்து கர்த்தரை மகிமைப்படுத்துவதெப்படி? இப்போது தெரிகிறதா, ஏன் வாசிப்புப் பழக்கமும், வேத வாசிப்பும், வேத அறிவும் கிறிஸ்தவனுக்கு அவசியம் என்று?
நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இன்று மறுபிறப்பாகிய வேதசத்தியமே அறியாத ஆயிரக்கணக்கான பிரசங்கிகள் இருக்கிறார்கள். அந்த வார்த்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது; அதன் இறையியல் அவர்களுக்குத் தெரியவில்லை. சர்வ வல்லவரான கர்த்தர் மட்டுமே பாவிகளுக்கு இரட்சிப்பை அளிக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இருந்தபோதும் மனிதன் தன் இரட்சிப்புக்கு ஒரு துளிபங்கு கூட செலுத்த முடியாது என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டிருக்கிறபோது இயேசுவுக்காக உன் கையைத் தூக்கு என்றும், மனந்திரும்பிவிட்டதற்கு அடையாளமாக அட்டையில் கையெழுத்துப் போடு என்றும், ஒரு நொடிப் பாவிகளின் ஜெபத்தைப் பண்ணு என்றும் பில்லி கிரேகமில் இருந்து ஜொயல் ஆஸ்டின்வரை வளர்த்துவிட்டிருக்கும் போலிச் சுவிசேஷத்தையே அவர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். இதனால்தான் பணத்தைச் செலவழித்து கூட்டத்தை எப்படியாவது கூட வைத்து அதில் மனித உணர்ச்சிகள் எல்லை கடந்து போவதற்கான கோமாளித்தனங்களைச் செய்து கைதூக்குகிறவர்களையெல்லாம் மனந்திரும்பிய கிறிஸ்தவர்கள் என்று அறிவித்து வருகிறார்கள்.
நம்மினத்து வாலிபர்களில் அநேகருக்கு சுவிசேஷம் சொல்லத் தெரியாதிருக்கிறது. அவர்களுக்கு அது கஷ்டமானதாகக் தெரிகிறது. ஏன் தெரியுமா? அதில் பிரசங்கியின் பங்கு என்ன என்றும் கர்த்தரின் பங்கு என்ன என்றும் தெரியாமல் அவர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள். கர்த்தர் சர்வவல்லவராக இருக்கிறார், அவர் மட்டுமே இரட்சிப்பை அளிக்க முடியும் என்பதும், சுவிசேஷத்தைச் சொல்லுவது மட்டுமே நம் கடமை என்பதும்பற்றிய வேதபோதனையை விளங்கிக்கொள்ளுவது கொஞ்சம் கஷ்டந்தான். அது அப்படியொன்றும் கஷ்டமல்ல என்றெல்லாம் சொல்லி உங்களை நான் ஏமாற்ற மாட்டேன். தத்துவரீதியில் வேதவிளக்கங்களைக் கொடுத்து அதைச் சரி என்று காட்டுவது எனக்கொன்றும் பெரிதல்ல. பிரச்சனை என்னவென்றால் வேதம் சொல்லுவதற்கு மேல் போய் அதற்கு என்னால் விளக்கங்கொடுக்க முடியாது. சுவிசேஷம் சொல்லுவதுபற்றிய இந்த வேதபோதனையில் ஓரளவுக்கு இரகசியம் அடங்கியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது கர்த்தர் மட்டுமே மனிதனின் எந்தவித பங்கும் இல்லாமல் ஒருவனுக்கு இரட்சிப்பளிக்க முடியும் என்றும், அதேநேரம் நம் பணி முழுமூச்சோடு ஆவியில் தங்கியிருந்து சுவிசேஷத்தை ஆணித்தரமாக சொல்லுவது மட்டுமே என்பதையும் நாம் நம்பி இந்தப் பணியில் ஈடுபடவேண்டும். இந்த இரண்டும் இரயில் பாதையில் இருக்கும் இரண்டு தண்டவாளங்கள்போல. அவற்றை நாம் நித்தியத்திற்கும் இணைக்க முடியாது. இணைத்தால் இரயில் அதில் எப்படிப் போகமுடியாதோ அதேபோல் சுவிசேஷம் பற்றிய போதனையும் குழப்பத்தில் போய் முடிந்துவிடும்.
சீர்திருத்தப் பிரசங்கிகள் வாலிபர்களைச் சுவிசேஷம் சொல்லவைப்பதோடு நின்றுவிடக்கூடாது. அவர்களுக்கு இந்தச் சத்தியம் விளங்குமளவுக்குத் தெளிவாகப்போதித்து அவர்கள் பாவிகளின் இரட்சிப்பிற்காக கர்த்தரில் தங்கியிருந்து ஜெபத்தில் ஈடுபட பயிற்சியளிக்க வேண்டும். அநேக போதகர்களுக்கு இதைச் செய்ய நேரமில்லை. முக்கியமாக வாலிபர்களுக்கு தங்களுடைய சாட்சியை வேதபூர்வமாக சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சாட்சி சொல்லுகிறோம் என்று உளறிக்கொட்டிக் கொண்டிருக்கக்கூடாது. வேத அடிப்படையில் நம் சாட்சி அமைந்திருக்கவேண்டும். பல போதகர்களின் சாட்சியைக் கேட்டு நான் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் இருந்திருக்கிறேன். நம் சாட்சியை ஆராய்ந்து பார்த்து வேதபூர்வமாக சொல்லத்தெரியாதவன் மற்றவர்களுக்கு சுவிசேஷம் சொல்லுவதெப்படி? சுவிசேஷம் சொல்லப் பயிற்சிகொடுக்கும்போது இதுபற்றிய வேத சத்தியங்களை வாலிபர்களுக்கு விளக்கவேண்டும். அப்படி நாம் கொடுக்கின்ற மெய்யான வேத விளக்கங்கள் அவர்களுக்குப் புரியும்போது சுவிசேஷம் சொல்லுவதில் தவறிழைப்பதை அவர்கள் தவிர்த்துக்கொள்ளுவார்கள். சுவிசேஷம் சொல்லுவதெப்படி என்று வேதம் நமக்கு எந்தப் பக்கத்திலும் தனி விளக்கங்கொடுக்கவில்லை. அதற்கென்று ஒரு தனிக் கலை இருப்பதாகவும் அது நமக்குத் தெரிவிக்கவில்லை. ஆகவே, சுவிசேஷம் சொல்லுவதை ஒரு புத்திக்கெட்டாத விஷயமாக நாம் மாற்றிவிடக்கூடாது.
சுவிசேஷம் சொல்லுவதென்பது என்ன? அதில் நான்கு விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்று நான் நம்புகிறேன். முதலாவது, கிறிஸ்து யார்? இரண்டாவது, கிறிஸ்து என்ன செய்திருக்கிறார்? மூன்றாவது, கிறிஸ்து ஏன் அவசியமாயிருக்கிறார்? நான்காவது, இரட்சிப்படைய நீ என்ன செய்யவேண்டும்? இந்த நான்கையும் விளக்கி நீளமான ஆக்கத்தை எழுத உடனடியாக என் கை துடிக்கிறது. ஆனால், அதை இன்னொரு தடவை செய்யலாமென்றிருக்கிறேன். இந்த நான்கையுந்தான் சுவிசேஷமாக ஒருவருக்கு நாம் விளக்கப்போகிறோம். இந்த நான்கையும் வேதபூர்வமாக தெளிவாக அறிந்துவைத்திராத ஒருவனால் சுவிசேஷம் சொல்ல முடியாது. சுவிசேஷத்தை சொல்லுகிறோம் என்று எதையாவது நாம் உளறிக்கொட்ட முடியாது. பரிசுத்த ஆவியானவர் உளறல் மன்னர்களின் மூலமாக பாவிகளின் இருதயத்தில் கிரியை செய்வதில்லை. மேலே பார்த்திருக்கும் நான்கு கேள்விகளுக்கும் தெளிவான பதில்களை நாம் வேதத்தில் இருந்து பெற்றுவைத்திருக்க வேண்டும். அதில் தெளிவடைய எவ்வளவு படித்தாலும் தகும். இதில் தெளிவில்லாதவர்கள்தான் பொய்ச்சுவிசேஷத்தை அதாவது கிறிஸ்துவும், பவுலும், பேதுருவும் பிரசங்கித்திராத வேறொரு சுவிசேஷத்தை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய சுவிசேஷத்தைத் தவிர வேறொரு சுவிசேஷத்தை ஒரு தேவதூதன் சொன்னாலும் அதற்குச் செவிகொடுக்காதே என்று பவுல் எச்சரித்திருக்கிறார். நீங்கள் விசுவாசிக்கின்ற, பிரசங்கிக்கின்ற சுவிசேஷம் வேதபூர்வமானதா பிரசங்கிகளே? அதில் தெளிவுபெற்றிருக்கிறீர்களா நீங்கள்?
கிறிஸ்து யார்? என்று தெளிவாக சொல்லத்தெரியாத அநேகர் இருக்கிறார்கள். வேதசத்தியங்கள் தெரியாமல் அதை விளக்கமுடியாது. இறையியல் அவசியமில்லை என்று கூக்குரலிடுகிறவர்கள் இங்கே கொஞ்சம் யோசிக்கவேண்டும். கிறிஸ்து யார் என்பது நமக்குத் தெளிவாக வேதபூர்வமாகத் தெரிந்திருக்க வேண்டும். அதைத்தான் ‘கிறிஸ்து மட்டுமே’ (Christ alone) என்ற வார்த்தைப் பிரயோக சத்தியத்தின் மூலம் சீர்திருத்தவாதிகள் விளக்கியிருக்கிறார்கள். தெளிவாக கிறிஸ்து யார் என்பது நமக்குத் தெரிந்திருப்பது மட்டுமல்ல, அவர் என்ன செய்திருக்கிறார் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். இந்த இடத்தில்தான் அநேக இறையியல் கோளாறுள்ள போதனைகள் வரலாற்றில் எழுந்து சபைகளைப் பாதித்திருக்கின்றன. 1689 விசுவாச அறிக்கையின் 8ம் அதிகாரம் இதற்கு மிகவும் தெளிவான விளக்கத்தைத் தருகிறது. அத்தோடு நாம் தமிழில் வெளியிட்டுள்ள சிம்சன் வெளியீட்டின் பாப்திஸ்து சுருக்க வினாவிடைப் போதனையும் அதைப் பல வினாவிடைகளின் மூலம் விளக்கியிருக்கின்றது. நம் வாலிபர்கள் இவற்றை வாசித்து நல்லறிவு பெறும்படி போதகர்கள் அவர்களுக்கு வகுப்பு நடத்தவேண்டும். முதலில் போதகர்கள் இதில் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம். குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாதல்லவா!
கிறிஸ்துவின் சுவிசேஷம் நமக்கு பாவத்தில் இருந்து விடுதலையையும், நித்திய ஜீவனையும் இலவசமாக அளித்திருக்கிறது. அந்த சுவிசேஷத்தின் தார்ப்பரியங்களை அறிந்து தெளிவடையாமல் வாலிபர்கள் ஆத்மீகவாழ்க்கையில் வளருவதும் கர்த்தருக்குப் பணிபுரிவதும் எப்படி? ஆங்கிலம் நன்றாக வாசிக்கத் தெரிந்த வாலிபர்கள் இருந்தால் நான் ஜோன் மரெயின் ‘மீட்பின் நிறைவேற்றமும், மீட்பின் செயல்படுத்தலும்’ என்ற ஆங்கில நூலைப் பலதடவைகள் வாசித்து அதில் தேர்ச்சியடையும்படிச் செய்வேன். உண்மையில் சிலரை அப்படி நான் வாசிக்க வைத்திருக்கிறேன். இரண்டு பேர் சமீபத்தில் அவர்களுடைய வாசிப்பின் அனுபவத்தைப்பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். ஒருவர் சொன்னார், ‘எல்லாக் கிறிஸ்தவ நூல்களிலும் இது மிக உயரத்தில் வைக்கப்பட வேண்டியது’ என்று. இன்னொருவர், ‘கிறிஸ்துவின் பரிகாரப்பலிபற்றி விளக்கும் அருமையான நூல் இது’ என்றார். நான் இதை இவர்கள் வாசிக்கும்படி செய்ததற்குக் காரணமிருக்கிறது. இதை வாசித்து இவர்கள் தேர்ச்சியடைந்தால் கிறிஸ்துவின் சுவிசேஷ சத்தியங்களில் தேர்ச்சி பெற்றவர்களாவார்கள், அதுதானே முக்கியம்.
கர்த்தருக்குப் பணிபுரிய வருவதற்கு வேதம் பல இலக்கணங்களை எதிர்பார்க்கிறது. முக்கியமானவை 1 தீமோத்தேயு 3லும், தீத்துவிலும் தரப்பட்டுள்ளன. இவை தவிர பொதுவாக எல்லோரிலும் காணப்பட வேண்டிய தகுதிகள் இருக்கின்றன. அவை கிறிஸ்தவ வாழ்க்கைபற்றி புதிய ஏற்பாடு தரும் விளக்கங்களில் காணப்படுகின்றன. நம்மினத்துப் பிரச்சனை என்னவென்றால் புறஜாதி இந்துப் பண்பாட்டில் இருந்து கிறிஸ்துவை அறிந்துகொண்டிருக்கிறவர்கள் அந்தச் சிலைவணக்க இந்துப் பண்பாட்டை இன்னும் மூட்டைகட்டி எறிந்துவிடாமல் இருப்பதுதான். நிச்சயம் சிலைகளை எறிந்துவிட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையும் நேர்மையும் இல்லாத பழைய மனிதனோடு தொடர்புடைய கலாச்சாரத்தை அநேகர் இன்னும் நிராகரித்துவிடவில்லை. நான் சொல்லவருவது ஒழுக்கத்தைப்பற்றிய பண்பாட்டையே. ஒழுக்கம் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கை நடைமுறையே. காலையில் எழுந்திருப்பது, உணவருந்துவது, மனதில் சிந்திப்பவை, சரீரத்தின் மூலம் செய்யும் செயல்கள், மற்றவர்களோடு பழகும், பேசும் விதம், அவர்களோடு உறவாடி கூடிச் செய்யும் செயல்களில் காணப்பட வேண்டிய ஒழுக்க முறைகள், சமுதாயத்தில் நாம் மற்றவர்களோடு பழகிப் பேசி உறவுகொள்ளும் முறை. இதெல்லாம் ஒழுக்கத்தோடு தொடர்புடையவை. இந்த விஷயங்களில் கிறிஸ்துவின் வேதம் நம்மை ஆண்டு நாம் கிறிஸ்தவ சிந்தனையும், செயலுமுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்பதை கிறிஸ்தவ வேதம் எதிர்பார்க்கிறது. இந்தச் செயல்களையெல்லாந்தான் கர்த்தர் சுருக்கமாக பத்துக்கட்டளைகள் மூலம் விளக்கியிருக்கிறார். இவற்றில் ஆராதனையும் இணைந்துகொள்ளுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். அதாவது கர்த்தரின் நாளில், கர்த்தரின் முன்னிலையில் அவருடைய வழிமுறைகளை மட்டும் பின்பற்றி எப்படி ஆராதனை செய்வதென்பதும் இதிலடங்கும். இதெல்லாம் புதிய மனிதனாக ஆவியினால் மாற்றப்பட்டிருக்கும் கிறிஸ்தவன் பின்பற்ற வேண்டிய வேதஒழுக்கமுறைகள். ஒருவன் கிறிஸ்துவை விசுவாசித்து புதிய இருதயத்தை அடைந்திருக்கும் புதிய மனிதனான போதும், அவன் புதிய மனிதனுக்குரியவைகளைத் தன்னில் தரித்துக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறான். அதாவது மனதில் ஆராய்ந்து சிந்தித்துப் பார்த்து தன்னில் காணப்படும் பழைய மனிதனுக்குரியவைகளை (பழைய இந்துப் பண்பாடு உட்பட) அரவே அன்றாடம் களைந்துபோட வேண்டியவனாக இருக்கிறான். இது கிறிஸ்தவனின் கடமை, பொறுப்பு. பழைய மனிதனுக்குரிய அம்சங்களை அவன் தன்னில் தொடரவிடக்கூடாது. அவை தானே ஓடிப்போகாது. புதிய மனிதனாயிருப்பவனில் தொடர்ந்தும் பாவம் வாசம் செய்வதால் (ரோமர் 7), அவன் உள்ளிருக்கும் அந்தப் பாவம் தன்னை ஆளமுடியாதபடி அதை அடக்கி ஆளவேண்டும். ஆதலால், கிறிஸ்தவன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து தன்னில் பாவம் ஆளாதபடி வாழவேண்டியவன். அவன் பத்துக்கட்டளையின்படியான புதிய ஒழுக்கத்தைத் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டும். இதையெல்லாம் எத்தனை சீர்திருத்தப் போதகர்கள் வாலிபர்களுக்கு விளக்கிப் போதித்து வழிகாட்டி வாழ்ந்து வருகிறீர்கள்?
குருடன் குருடனுக்கு வழிகாட்டும் நிலையில் இருக்கும் இன்றைய நம்மினத்துக் கிறிஸ்தவம் இப்படியே தொடராமல் சீர்திருத்தம் ஏற்பட்டு திருச்சபைகள் வேதபூர்வமாக இருக்கவேண்டுமானால் இளைய தலைமுறை சத்தியத்தில் வளர்ந்துவர இத்தலைமுறையில் கர்த்தர் ஆசீர்வதித்திருக்கும் சீர்திருத்தப் போதகர்கள் தங்களை இழந்து உழைத்து அவர்களை வளர்த்துவிடவேண்டும். முப்பது வருடங்கள் வயிற்றுப்பாட்டுக்காக மட்டும் சபைத்தலைவனாக இருந்து தன் இயலாமையாலும், சத்தியப் பஞ்சத்தாலும் ஆத்துமாக்களை அழித்துக்கொண்டிருக்கும் போதகப்பணியில் இருந்துவரும் போதக இலக்கணங்கள் அரவே இல்லாதவர்களை நான் அறிவேன். வரப்போகும் நியாயத்தீர்ப்பில் தனக்கு என்ன நடக்கப்போகிறது என்ற உணர்வே இல்லாமல் இவர்களால் தைரியத்தோடு இருக்கமுடிவதற்குக் காரணம் இவர்கள் வேதபூர்வமான மனந்திரும்புதலையும் விசுவாசத்தையும் தங்களில் கொண்டிராததே. இத்தகையோரைத் தலைவர்களாகக் கொண்டிருக்கும் ஆத்துமாக்களைப் பார்த்து நான் பரிதாபப்பட்டாலும் அவர்களும் கர்த்தருக்குக் கணக்குக்கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
சமீபத்தில் ஒரு நபரோடு நான் பேசிக்கொண்டிருந்தபோது நீங்கள் எவ்வளவு காலமாக கிறிஸ்தவராக இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவருடைய சாட்சியை அறிந்துகொள்ளுவதற்காகக் கேட்ட கேள்வி அது. அவர் உடனே, நான் பிறந்ததிலிருந்து கிறிஸ்தவ நம்பிக்கையிலேயே வளர்ந்திருக்கிறேன் என்று சொன்னார். அப்படிச் சொல்ல முடியாதே என்று கூறி கிறிஸ்தவ விசுவாசம் பிறப்பிலிருந்து ஏற்பட வழியில்லை என்பதை விளக்கினேன். தொடர்ந்து தான் சொன்னதையே கிளிப்பிள்ளைபோல அந்த நபர் சொல்ல ஆரம்பித்தார். அங்கே என்னால் கிறிஸ்தவ தாழ்மையையோ, கிறிஸ்தவ ஞானத்தையோ பார்க்கமுடியவில்லை. சுயநலத்தோடு கூடிய, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை அவருக்கு இருந்ததே தவிர கிறிஸ்துவை மேன்மைப்படுத்தி சாட்சிசொல்லும் பக்குவம் இருக்கவில்லை. இப்படி எத்தனையெத்தனை பேரை நாம் அன்றாடம் காண்கிறோம். கிறிஸ்தவ சுவிசேஷம் வல்லமையுள்ளது; இருதயங்களைப் பிளந்து தாழ்மைப்படுத்தி கர்த்தரிடம் அழைத்து வரக்கூடியது. அத்தகைய சுவிசேஷத்தால் வாழ்க்கை மாறியிருப்பவர்கள் தங்கள் சாட்சியைக் கண்கள் திறக்கப்பட்டிருந்த பிறவிக்குருடனைப்போல ஆனந்தத்தோடு ஊரறியச் சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். சுவிசேஷம் கொடுக்கும் அத்தகைய வல்லமையுள்ள இரட்சிப்பை அடைந்தவர்களைக் கொண்டமைந்த சீர்திருத்தச் சபைகளும், சுவிசேஷத்தை வேத அடிப்படையில் அதிரடியாக ஆவியின் பலத்தோடு பிரசங்கித்துப் போதிக்கும் நல்லொழுக்கம் கொண்ட தன்னலமற்ற போதகர்களும் நம்மினத்துக்கு இன்று இன்றியமையாத தேவை.
சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே! – A.W. பின்க்
அதிகாரம் 3
பரிசுத்த வேதவார்த்தைகளின் மெய்யான பொருளை அறிய விரும்புகிற ஒருவனில் இருக்க வேண்டிய மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான சில தகுதிகளைக் குறித்து முந்தைய அதிகாரத்தில் விளக்கினேன். அத்தகுதிகள் பொதுவாக எல்லா விசுவாசிகளிடத்திலும் இருக்க வேண்டியவை. இந்த அதிகாரத்தில், கர்த்தருடைய வேதத்தைப் பிரசங்கிக்கவும், போதிக்கவும் கர்த்தரால் அழைக்கப்பட்டவர்களில் (பிரசங்கிகளில்) இருக்க வேண்டிய சில குறிப்பிட்ட தகுதிகளைக் குறிப்பிடப் போகிறேன். அவர்கள் தங்களுடைய முழு நேரத்தையும், ஆற்றலையும், ஆத்துமாக்களின் ஆவிக்குரிய மற்றும் நித்திய நன்மைக்கான பிரயோஜனத்துக்காகவும், அந்த ஆசீர்வதிக்கப்பட்ட, உன்னதமான, மற்றும் முக்கியமான வேலைகளைச் செய்யத் தங்களைத் தகுதிப்படுத்திக்கொள்ளவும் அர்ப்பணித்தவர்கள். கர்த்தருடைய சத்தியத்தை எடுத்துரைப்பதும், தான் பிரசங்கிக்கிற சத்தியத்தின்படியாக, நடைமுறையில் மிகுந்த கவனத்துடன் வாழ்ந்துகாட்டி, தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களுக்குத் தேவபக்திக்கேதுவான நடைமுறை உதாரணமாக வாழ்ந்து காட்டுவதுமே அவர்களுடைய முதன்மையான பணி. அவர்கள் சத்தியத்தைப் பிரசங்கிக்க வேண்டியிருப்பதனால், அவர்கள் பிரசங்கிப்பது வேத வார்த்தைகளாகிய களங்கமில்லாத பாலாக இருப்பதனால், இதில் எந்தத் தவறும் செய்துவிடக்கூடாது என்பதற்கான சகல முயற்சிகளையும் செய்கிறவர்களாக இருக்க வேண்டும். சத்தியத்திற்குப் பதிலாக தவறானதைப் போதிப்பது, கர்த்தரையும் அவருடைய வார்த்தையையும் அவமதிப்பது மட்டுமல்ல, அதைக் கேட்கிறவர்களைத் தவறாக வழிநடத்தி, அவர்களுடைய மனதையும் கெடுக்கும் செயலாகும்.
ஒரு பிரசங்கியினுடைய வேலை, மிகவும் மதிப்புமிக்கதும், உன்னதமானதும், சிறப்பானதுமாக இருக்கிற அதேவேளையில், அது மிகவும் பொறுப்பான வேலையுமாகும். தன்னைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியன் என்று அறிவித்துக்கொள்ளுகிற ஒருவன், உன்னதமான தேவனால் அனுப்பப்பட்ட தூதுவனாக இருக்கிறான். தன் எஜமானுடைய செய்தியைத் தவறாக அறிவிப்பது, அதாவது அவருடைய சுவிசேஷத்தைவிட்டு வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது அல்லது தன்னை நம்பி அவர் கொடுத்த செய்தியைத் தவறாக எடுத்துரைப்பதென்பது, பாவத்திலும் மிகப்பெரிய பாவமாகும்; அது அவன்மீது உன்னதத்தின் சாபத்தை வருவிக்கும் (கலாத்தியர் 1:8). அவன் மிகக்கடுமையான தண்டனையை அடைவான் (மத்தேயு 23:14, யூதா 13). ஆகவே, “அதிக ஆக்கினை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” (யாக்கோபு 3:1) என்று வேதம் எச்சரிக்கிறது. நம்மை நம்பிக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பில் உண்மையற்றவர்களாக இருந்தால் இப்படித்தான் போய்முடியும். தம்முடைய மந்தையை மேய்ப்பதற்கு, என்னை கர்த்தர்தாமே அழைத்திருக்கிறார் என்று உரிமைபாராட்டுகிற எந்தவொரு சுவிசேஷ ஊழியனும், தன்னுடைய போதகப் பணியைப்பற்றி அவரிடத்தில் முழுக் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாக இருக்கிறான் (எபிரெயர் 13:17). அவன் தன் பொறுப்பில் விடப்பட்டிருக்கிற ஆத்துமாக்களுக்காக பதில் சொல்ல வேண்டியவனாக இருக்கிறான். “நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு . . . நீ அவனை எச்சரிக்காமல் இருந்தால், . . . அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன்” (எசேக்கியேல் 3:18) என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” (2 தீமோத்தேயு 2:15) என்ற இந்தக் கட்டளையின்படி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுவதே ஒரு பிரசங்கியினுடைய முதன்மையான மற்றும் தொடர்ச்சியான கடமையாக இருக்கிறது. முழு வேதத்திலும், ஒரு பிரசங்கிக்குப் புத்திசொல்லக்கூடிய வார்த்தைகளில், இந்தக் கட்டளைக்கு இணையாகவோ, நிகராகவோ வேறெதுவும் இருக்க முடியாது. எனவேதான் சாத்தான், இந்தக் கட்டளையின் மையச் செய்தியாகிய “சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாய் இரு” என்ற வேலையைத் தடுப்பதற்கான எல்லா முயற்சிகளிலும் மும்முரமாக ஈடுபடுகிறான். இந்தக் கட்டளையிலுள்ள “ஜாக்கிரதையாயிரு” என்ற வார்த்தைக்கான கிரேக்க மொழியின் அர்த்தம் “உன்னுடைய எஜமானைப் பிரியப்படுத்தக்கூடிய இந்தக் காரியத்தை முழுமூச்சோடு செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தொடர்ச்சியாக செய்வதே உன்னுடைய மிகமுக்கியமான பொறுப்பாக இருக்க வேண்டும்” என்பதே. பூமிக்குரிய புகழ்ச்சியைத் தேடாதே, கர்த்தர் உன்னை அங்கீகரித்து ஏற்பதையே நாடு. எல்லாவற்றிற்கும் மேலாக இதுவே முதன்மையானதாக உங்கள் வாழ்வில் இருக்கட்டும். இல்லாவிட்டால், “சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிப்பது” உங்களில் இருக்காது. “தேவனுக்கு முன்பாக உன்னை உத்தமனாக நிறுத்துவதே” உங்களுடைய நோக்கமாக இருந்து மற்ற எல்லாவற்றையும் அதற்குக் கீழ்ப்படுத்துங்கள். உங்களுடைய இருதயம், குணாதிசயம், மற்றும் கர்த்தருக்கு முன்பாக உங்களுடைய செயல்கள் அனைத்தையும் அவருடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தின்படியாக ஒழுங்குபடுத்துங்கள். நீங்கள் செய்வது அவருக்குப் பிரியமாயிராவிட்டால், உங்களுடைய ஊழியத்தியத்தினால் என்ன பலன்?
“நீ வெட்கப்படாத ஊழியக்காரனாக . . . உன்னை நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு” – கர்த்தர் உங்களுக்குக் கொடுத்துள்ள நேரத்தையும் தாலந்துகளையும் பயன்படுத்துவதில் நேர்மையும், ஆர்வமும், உண்மையுமுள்ளவர்களாய் இருங்கள். இந்தக் கட்டளையை நிறைவேற்றுவதற்கு, இடைவிடாத முயற்சியுடனான முழுக்கவனத்தைக் காட்டுங்கள். “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்” (பிரசங்கி 9:10), அதை முழு முயற்சியுடன் சிறப்பாக செய்யுங்கள். கடின உழைப்புடனும், ஊக்கத்துடனும் செய்யுங்கள். கவனக்குறைவாகவோ அஜாக்கிரதையாகவோ செய்யாதீர்கள். அதை எவ்வளவு சீக்கிரமாக செய்ய முடியும் என்றல்ல, அதை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியும் என்று பாருங்கள். “ஊழியக்காரன்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கு, மூலமொழியில் “கடினமாக உழைக்கிறவனைக்” குறிப்பிடுகிற கிரேக்க வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பொறுப்பற்றவர்களும், சோம்பேறிகளும் கர்த்தருடைய பணியில் இருக்கக்கூடாது. கிறிஸ்துவுக்காக தன்னை இழந்து உழைத்துப் பணிபுரியவும், ஆத்துமாக்களுக்காக தன்னை இழக்கவும் தயாராக இருக்கிறவர்களுக்கே கர்த்தருடைய ஊழியம். ஒரு பிரசங்கி, சுரங்கத் தொழிலாளியைவிட கடினமாக உழைக்க வேண்டியவன்; அலுவலகத்தில் வேலை செய்கிற ஒரு மேலதிகாரியைவிட அதிகமான நேரத்தை ஒவ்வொரு வாரமும் படிப்பதற்காக செலவிட வேண்டியவன். அவன் ஒருபோதும் தன்னுடைய வேலையிலிருந்து நழுவுகிறவனல்ல. ஒரு பிரசங்கி, தன்னைக் கர்த்தருக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தவேண்டுமானால், வெட்கப்படாத ஊழியக்காரனாக இருக்க வேண்டுமானால், மற்றவர்கள் தூங்குகிற நேரத்திலும் அவன் உழைக்கிறவனாக இருப்பான். அதுவும் வியர்வை சொட்டச் சொட்ட மனதைப் பயன்படுத்தி உழைக்கிறவனாக இருப்பான். “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்” (1 தீமோத்தேயு 4:15-16).
இது கிறிஸ்து தன்னுடைய வேலையாட்களுக்குக் கொடுத்திருக்கிற மற்றொரு தவிர்க்க முடியாத கட்டளை. ஒரு பிரசங்கியினுடைய பொறுப்பை விரிவாகவும் துல்லியமாகவும் இக்கட்டளை எடுத்துரைக்கிறது. தன்னுடைய வேலையாட்கள் இருதயபூர்வமாக அதைச் செய்யும்படி கிறிஸ்து எதிர்பார்க்கிறார். அதாவது, தன்னுடைய மனதை முழுமையாக அதில் செலுத்தி, தன்னுடைய நேரத்தையும் வலிமையையும் அதற்காக அர்ப்பணித்து உழைக்கும்படி எதிர்பார்க்கிறார். அவர்கள் உலகத்தின்மீதான ஆசையிலிருந்து விலகி, தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பொறுப்பில் முழுக்கவனத்தையும் செலுத்துகிறவர்களாக இருக்கவேண்டும். ஒரு பிரசங்கியினுடைய கடமையை விவரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள உதாரணங்களிலிருந்து, இது எவ்வளவு கடினமான வேலை என்பது தெரிகிறது. பிரசங்கியை வேதம் ஒரு போர்ச்சேவகனோடு ஒப்பிட்டுக் காட்டுகிறது. அதாவது, ஒரு பிரசங்கியினுடைய வேலையில் இடைவிடாத முயற்சியும், கடின உழைப்பின் மூலம் ஏற்படும் உடற்சோர்வும் இருக்கும். அடுத்து, “கண்காணி” – பொறுப்பும் அக்கறையும் கொண்டவனாக செயல்பட வேண்டியவன். “மேய்ப்பன், போதகன்” தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்களை வழிநடத்தி போஷிக்க வேண்டியவன். ஆனால், கர்த்தருடைய ஊழியனாக மற்றவர்களுக்கு நல்லவிதத்தில் நீங்கள் பயன்பட வேண்டுமானால், கிருபையிலும் தேவபக்தியிலும் நீங்கள் தனிப்பட்ட விதத்தில் வளருவதைப் பற்றி சிந்திப்பதே உங்களுடைய முதலாவது முக்கியமான பொறுப்பாகும்.
கர்த்தருடைய ஊழியன், வேதத்தை ஆராய்கிறபோது, அதைப் பொறுப்போடு செய்யும் முன்பு, “உன்னைக் குறித்து . . . எச்சரிக்கையாயிரு” என்ற கட்டளையின் அடிப்படையில் முதலில் அதைக் கவனிக்க வேண்டும். அதாவது, எந்தவொரு வேதப்பகுதியையும், பிரசங்கத் தயாரிப்புக்காக ஆராய்வதற்கு முன், அந்தப் பகுதியிலுள்ள போதனைகளும் பயன்பாடுகளும் தன்னுடைய ஆத்துமாவுக்குப் பயன்படும் நோக்கில் அதை ஆராய வேண்டும். இது குறித்து ஜேம்ஸ் ஹெர்வி, 1 யோவான் 1:1-2 வசனங்களை விளக்குகிறபோது பின்வருமாறு சொல்லியிருக்கிறார்,
“தேவனுடைய சத்தியத்தை நாம் ஆராய்கிறபோது, அது நம்மைச் சிந்திக்க வைத்து நம்மில் எப்போதும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். வேதத்திலுள்ள வார்த்தைகளுக்கான பொருளை அறிய வேண்டும் என்ற வெறும் ஆய்வுக்காக மட்டும் படிக்காதீர்கள். அது போதிக்கும் சத்தியத்தையும் அதன் பயன்பாட்டையும் அறிகிற விதத்தில் மிகுந்த ஆவலுடன் படியுங்கள். அப்பகுதி குறிப்பாக யாருக்கான புத்திமதியைத் தருகிறது, யாருக்கான கட்டளையை எடுத்துரைக்கிறது என்று சிந்தித்து படிக்க வேண்டும். யாருக்கான வாக்குத்தத்தம், யாருக்கான சிறப்புரிமைகளை அது விளக்குகிறது என்பதைக் கவனித்துப் படிக்க வேண்டும். இந்த விலைமதிப்பற்ற புத்தகத்தின் உள்ளடக்கத்தைத் தெளிவாக நாம் அறிந்துகொண்டால், வேத வாக்கியங்களின் வல்லமையை நாமும் ருசிபார்ப்போம். அப்போது நாமும் மகிழ்ச்சியாக சொல்லுவோம், ‘கர்த்தருடைய வார்த்தை வெறும் வார்த்தைகளின் சத்தமல்ல, அது ஆவியும் ஜீவனுமாய் இருக்கிறது என்று.’ புதியதும் சுவையானதுமான ஒன்றைத் தொடர்ச்சியாகத் தானே ருசித்துப் பார்க்காத ஒருவரால், அப்படியானதைத் தொடர்ச்சியாக மற்றவர்களுக்குத் தர முடியாது. ஒரு பிரசங்கி எதை மற்றவர்களுக்கு அறிவிக்கிறாரோ, அதை முன்னதாக அவருடைய காதுகள் கேட்டிருக்க வேண்டும்; அவருடைய கண்கள் கண்டிருக்க வேண்டும்; அவருடைய கரங்கள் அதில் பழகியிருக்க வேண்டும்.”
பிரசங்க மேடையில் நின்று வெறுமனே வசனங்களை வாசித்துவிட்டுப் போவது மட்டும் போதாது. அதை விசுவாசிகள் வீடுகளிலிருந்தே செய்து, வேதத்திலுள்ள வார்த்தைகளில் பரிச்சயமாகிவிடுவார்கள். வேத வார்த்தைகளை விளக்குவதும், அவற்றிலிருந்து அவர்களுக்கான போதனைகளை விளக்குவதுமே அவர்களுடைய தேவையாக இருக்கிறது. “பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான்” (அப்போஸ்தலர் 17:2-3).
“திருஷ்டாந்தப்படுத்தினான்” (Explaining and giving evidence – NASB) என்றால் “ஆணித்தரமாக விளக்கிக்காட்டினான்” என்று அர்த்தம். விசுவாசிகளுக்கு வேத வாக்கியங்களை ஆணித்தரமாக விளக்கிக்காட்டுவதற்கு, இறையியல் கல்லூரியில் ஏதோ சில மாதங்களுக்கு அல்லது ஓரிரு வருடங்களுக்குப் பயிற்சி பெற்றிருப்பதைவிட மேலான ஆற்றல் தேவைப்படுகிறது. விசுவாசிகளுடைய ஆவிக்குரிய பிரச்சனைகளை அறிந்து, அதற்கான தீர்வாக வேத வாக்கியங்களை அவர்களுக்கு விளக்கிக்காட்டுவதென்பது, அந்த வேத வாக்கியங்களைத் தன்னுடைய வாழ்க்கையில் அனுபவபூர்வமாக அனுபவித்திருப்பவனால் மட்டுமே செய்ய முடியும். வேதம் நாம் வாழவேண்டிய முறையை நமக்குப் போதிப்பதனால், வேதப்படியான நம்முடைய வாழ்க்கை அனுபவமே நமக்கு வேதத்தை விளக்குகிறதாகவும் இருக்கிறது. “ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவை யூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்” (நீதிமொழிகள் 16:23). இங்கு “கல்வி” என்பது கற்றுக்கொள்வதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இதை உலகிலுள்ள எந்தப் பள்ளியிலிருந்தும் பெற முடியாது. உதாரணமாக, ஓர் ஒத்தவாக்கிய அகராதியைப் பயன்படுத்தி, வேதத்தில் “தாழ்மை” என்ற வார்த்தை எங்கெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று படிப்பதன் மூலமாக ஒருவனில் தாழ்மை வந்துவிடாது. அதேபோல், வேதத்திலுள்ள சில குறிப்பிட்ட பகுதிகளைப் படிப்பதனால், விசுவாசத்தில் மேலும் உறுதியைப் பெற்றுவிட முடியாது. ஒருவன் தன்னுடைய இருதயத்தின் சீர்கேட்டை அனுபவபூர்வமாக ஆராய்ந்து அறிகிறபோதே அவனில் தாழ்மை ஏற்படும். ஒருவன் கர்த்தரோடு நெருங்கியிருந்து, அவரைப் பற்றி ஆழமாக ஆராய்ந்து அறிகிறபோதே அவனிலுள்ள விசுவாசம் உறுதிபெற்று வளரும். மற்றவர்களை நாம் ஆற்றித்தேற்றுவதற்கு முன்பாக, கர்த்தரால் நாம் ஆற்றித்தேற்றப்பட்டிருக்க வேண்டும் (2 கொரிந்தியர் 1:4).
“இருதயத்தில் சத்தியத்தின் வல்லமையை அனுபவபூர்வமாக அறிந்துணர்வதற்கு முயற்சி செய்யாமல், வெறுமனே சத்தியத்தின் கருத்தை மட்டும் தேடுவதாக இருந்தால், ஆவிக்குரிய காரியங்களில் சரியான புரிதலைப் பெற்று வளர முடியாது. கர்த்தருடைய சத்தியத்தின் வல்லமைக்கும் ஆளுகைக்கும், தன்னுடைய மனதையும், எண்ணத்தையும், விருப்பத்தையும் கட்டுப்படுத்தி அதற்குக் கீழ்ப்படுத்துகிறவனே கர்த்தரிடமிருந்து கற்றுக்கொள்ளுகிறவனாக இருப்பான். ஒரு பிரசங்கி, வேதத்தை ஆராய்கிறபோது, மற்றவர்களுடைய நன்மைக்காகவும் பக்திவிருத்திக்காகவும் அதைச் செய்கிறான் என்பது உண்மைதான். ஆனால், தான் படிக்கும் வேத வார்த்தைகள், முதலில் தன்னுடைய ஆத்தும நன்மைக்கும், பக்திவிருத்திக்குமானது என்ற எண்ணம் அந்தப் பிரசங்கியில் இல்லாவிட்டால், அவன் வேதத்தைப் படிக்க வேண்டியவிதத்தில் படிக்கவில்லை என்பதையே காட்டுகிறான். அத்தோடு, அவனுடைய செயலுக்கான வெகுமதியும் கிடைக்காது. வேதத்தை நாம் படிக்கிறபோதெல்லாம், இந்த எண்ணம் நம் மனதில் வெளிப்படையாக இல்லாவிட்டால், வேதத்திலுள்ள எந்தவொரு சத்தியத்தையும் நாம் ஆராய்கிறபோது, அந்தச் சத்தியத்தை நம்முடைய இருதயத்தோடு ஒப்பிட்டுப் பார்க்காவிட்டால், நாம் படிக்கிற வேத சத்தியத்தின் முதன்மையான பலனை நாம் இழந்துவிடுகிறோம்” (ஜோன் ஓவன்).
கிறிஸ்துவினுடைய வருகையின் நாளில், அநேக பிரசங்கிகள், அழுது புலம்புவதற்கான காரணமாக இது இருக்கும், “என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரராக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை” (உன்னதப்பாட்டு 1:6). ஒரு சமையற்காரர் மற்றவர்களுக்கு உணவு தயாரித்துவிட்டு, தான் பட்டினியாக இருந்தது போல்தான் இது இருக்கிறது.
ஒரு பிரசங்கி வேதத்தை ஆராய்கிறபோது, அது தன்னுடைய வாழ்க்கைக்கு என்ன போதனையைத் தருகிறது என்ற கோணத்தில் அணுகுகிற அதேவேளையில், அதைக் கடின உழைப்புடனும் செய்ய வேண்டும். “உச்சிதமான கோதுமையினால்” (சங்கீதம் 81:16) தன்னுடைய மந்தையை மேய்ப்பதற்கு ஏற்றவராக இருக்க வேண்டுமானால், ஒரு பிரசங்கி, தன்னுடைய வாழ்நாள் முழுவதும், ஒவ்வொரு நாளும் அதிக கவனத்துடன் வேதத்தை இந்தவிதத்தில் ஆராய்கிறவனாக இருக்க வேண்டும். ஆனால் பரிதாபகரமான நிலை என்னவென்றால், அநேக பிரசங்கிகள், அந்தப் பொறுப்பையேற்ற கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே, வேதத்தை ஆராய்கிற பழக்கத்தை விட்டுவிடுகிறார்கள். வேதம், தன்னில் வற்றாத ஆவிக்குரிய பொக்கிஷத்தைக் கொண்டிருக்கிறது. கடின உழைப்புடன் அதன் ஐசுவரியத்தை எவ்வளவு அதிகமாக நாம் தோண்டி எடுத்தாலும், இன்னும் நாம் எடுக்க வேண்டியவைகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதையும், நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறவைகளில் எவ்வளவு குறைவாக நாம் அறிந்து வைத்திருக்கிறோம் என்பதையுமே உணரச் செய்கிறது. “ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக் கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை” (1 கொரிந்தியர் 8:2).
கர்த்தருடைய வார்த்தையைத் தொடர்ச்சியாகவும் கடின உழைப்புடனும் படிக்காமல், மிகுந்த கவனத்துடனும், ஜெபத்துடனும் நுட்பமாக ஆராயாமலும் இருந்தால், அதன் போதனைகளை ஒருபோதும் அறிய முடியாது. இப்படிச் சொல்லுவதனால், வேதத்தில் மறைபொருள் இருக்கிறதென்று பொருளல்ல. வேதம் எளிமையானதும், சிந்தித்து புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. பரிசுத்தமானதும், ஆழமான ஆத்மீகக் காரியங்களையும் பற்றிய விஷயங்களில், நமக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கிற விதத்திலேயே வேதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடின உழைப்புடன் அதை நாடாத ஒருவருக்கும் அது தன்னிலுள்ள சிறந்த வழியைக் காட்டுவதில்லை. அஜாக்கிரதையும் சோம்பலுமுள்ளவர்களுக்கு வேதத்தை அறிவதற்கான எந்த வாக்குறுதியும் தரப்படவில்லை. மிகுந்த கவனத்துடனும், ஆர்வத்துடனும் ஆவிக்குரிய பொக்கிஷத்தைத் தேடுகிறவர்களுக்கே அந்த வாக்குறுதி தரப்பட்டுள்ளது (நீதிமொழிகள் 2:3,5). ஒரு பிரசங்கி, கர்த்தருடைய வெளிப்படுத்தப்பட்டுள்ள சித்தத்தில் நல்ல பரிச்சயம் பெற்றிருக்க வேண்டுமானால், தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்களுக்கு “நல்ல கொழுமையான விருந்தை” தரவேண்டுமென்ற விரும்பமிருந்தால், அவர் வேதத்தை ஆராய்கிறவராக இருக்க வேண்டும். அதுவும் அனுதினமும், தொடர்ச்சியாகவும், விடாமுயற்சியுடனும் ஆராய்கிறவராக இருக்க வேண்டும். ஞானமுள்ள ஒரு பிரசங்கியைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள், “அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, . . . இதமான வார்த்தைகளைக் கண்டு பிடிப்பான்” (பிரசங்கி 12:9,10). ஞானமுள்ள ஒரு பிரசங்கி, தன்னுடைய பிரசங்கத்திற்கான சிறந்த வார்த்தைகளையும், அதை எடுத்துரைப்பதற்கான சிறந்த வழிமுறையையும் கண்டறிவதிலேயே மும்முரமாக ஈடுபடுவான்.
“வேதாகமங்களில் வல்லவன்” (அப்போஸ்தலர் 18:24) என்ற நிலையை அடையவே எந்தவொரு பிரசங்கியும் விரும்புவான். அதற்குக் குறைந்த நிலையில் தான் இருப்பதில், எந்தவொரு பிரசங்கியும் திருப்திப்பட்டுகொள்ள மாட்டான். ஆனால் அந்த நிலையை அடைய வேண்டுமானால், தன்னுடைய மற்ற விருப்பங்களை அதற்குக் கீழ் கொண்டுவர வேண்டும். பழங்கால எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார், “ஒரு கஞ்சனிடம் இருக்கும் தங்கத்தைப் போல், ஒரு பிரசங்கி தன்னுடைய நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். மிகுந்த கவனத்துடன் தன்னுடைய நேரத்தை மீதப்படுத்தி, எச்சரிப்புடன் தன்னுடைய நேரத்தைப் பயன்படுத்த வேண்டும்”. யாருடைய புத்தகத்தைத் தன் கையில் வைத்திருக்கிறேன் என்பதை ஒரு பிரசங்கி எப்போதும் தன் நினைவில் வைத்திருந்து, அதை மிகுந்த பயபக்தியுடன் பயன்படுத்துவான். “என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது” (சங்கீதம் 119:161) என்பதில் உறுதியாக இருப்பான். கர்த்தர் தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபை அளிப்பதனால், மிகுந்த மனத்தாழ்மையுடன் வேதத்தைக் கையாள வேண்டும். ஜெபத்தின் ஆவியைக் கொண்டிருந்து, “நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும்” (யோபு 34:32) என்று அவரிடம் மன்றாட வேண்டும். பரிசுத்த ஆவியினுடைய ஒளியூட்டும் கிருபை, எப்போதும் சாந்தமுள்ளவர்களுக்கே இரகசியங்களைத் தெரிவிக்கிறது. மிகவும் படித்தவர்களுக்கும், ஞானிகளுக்கும் அது மறைக்கப்பட்டதாகவே இருக்கிறது. சத்தியத்தை ஏற்பதற்கு சுத்த இருதயம் கட்டாயம் தேவை. இருதய சுத்தத்தினால் சத்தியம் தெளிவாகிறது. கர்த்தர்தாமே இதைத் தரும்படி, மிகுந்த மனத்தாழ்மையுடன் அவருடைய உதவியை நாடுங்கள்.
ஒருவன் வேதத்தை விளக்கும் தகுதியுள்ள நபராக இருக்கவேண்டுமானால், நான் இதுவரை குறிப்பிட்டுக்காட்டியுள்ள அடிப்படையான விஷயங்களில் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டால் மட்டுமே முடியும். அவனுடைய வேலையே கர்த்தருடைய வார்த்தையைத் தெளிவாகவும் துல்லியமாகவும் (Exegetically accurate) எடுத்து விளக்குவதுதான். தன்னுடைய சொந்த எண்ணங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, கர்த்தருடைய வார்த்தையின் மெய்யான பொருளைக் கண்டறிவதுதான் அவனுடைய முதன்மையான வேலை. வேதத்தை மொழிபெயர்க்கிறவர்கள், மூலமொழியாகிய எபிரெயம் மற்றும் கிரேக்க மொழியின் தன்மை மாறாமல், மொழிபெயர்க்கப்படும் மொழியில் வேதத்தைத் தர வேண்டியிருப்பதுபோல், வேதத்தை விளக்குகிறவர்களும், வேதம் எழுதப்பட்டிருக்கும் மொழிகளினடிப்படையில், அதன் சரியான பொருளை அறிந்து விளக்குகிறவர்களாக இருக்க வேண்டும். இதுகுறித்து பெங்கல் என்ற பழம்பெரும் போதகர் ஒருவர் பின்வருமாறு சொல்லியிருக்கிறார், “வேதத்தை விளக்குகிறவர்கள், கிணறு தோன்டுகிறவர்கள் போல் இருக்க வேண்டும். கிணறு தோன்டுகிறவன், கிணற்றில் தண்ணீரை ஊற்றாமல், கிணற்றிலிருந்து மாசுபடாத தண்ணீரை வெளியே கொண்டுவருவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவான்.” இன்னோருவிதமாகச் சொல்லுவதானால், அவன் கர்த்தருடைய வார்த்தையைத் தன் விருப்பப்படி கையாளுகிறவனாக இருக்க மாட்டான். வேத வார்த்தைகள் அவை கொண்டிருக்கும் அர்த்தத்தைத் தவிர்த்து தன்னுடைய சொந்த அர்த்தத்தைக் கொடுக்க முயலமாட்டான். வேதவார்த்தைகளைத் தான் நினைத்தபடி மாற்றாமலும், அவற்றின் அழுத்தம் குறையாமலும், தனிப்பட்ட சொந்த விருப்பு வெறுப்புகளின்படியாக அவற்றில் எதையும் நுழைக்காமலும், அவற்றின் மெய்யான விளக்கத்தையே தருவான்.
இதுவரை நாம் பார்த்திருப்பவைகளைத் தொகுப்பாக சொல்லுவதென்றால், வேதத்தை விளக்குகிறவர்கள், நடுநிலையோடும், உத்தம இருதயத்தோடும், நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வேதத்தை விளக்க வேண்டும்.
“வேதத்திலுள்ள எந்தவொரு பகுதியையும், உள்ளது உள்ளபடி அதன் மொழிநடை மாறாமல், அதன் பொதுவான இலக்கண வரம்பிற்குட்பட்டே விளக்கவேண்டும்”. (பெயார்பேர்ன்)
இக்கருத்தை ஏற்றுக்கொள்ளுவது கஷ்டமல்ல; நடைமுறைபடுத்துவதே மிகவும் கடினமானது. சில பிரசங்கிகள், தாங்கள் சார்ந்திருக்கிற சபைப்பிரிவின் காரணமாகவோ, பிரசங்கத்தைக் கேட்கிறவர்களைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ, தான் பிரசங்கிக்கும் வேதப்பகுதி நேரடியாக கண்டிக்கும் விஷயத்தை மழுப்பி, அதில் சொல்லப்பட்டிராத விஷயங்களைப் பெரிதுபடுத்தி காட்டுவார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து லூத்தர் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள்,
“கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது என்ற பெயரில் நம்முடைய சொந்த விருப்பத்தை விளக்கக்கூடாது. வேதத்தை நாம் நம் இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்கும்படி மாற்றி விளக்கக்கூடாது; அது நம்மில் மாற்றமேற்படுத்த நாம் அதற்கு இருதயத்தில் இடங்கொடுக்க வேண்டும். நம்முடைய சொந்த எண்ணங்களைவிட வேதமே சிறந்தது என்ற விதத்தில் அதை நாம் மதிப்புடன் கையாள வேண்டும்.”
இதற்கு மாறான எந்த முறையும் மிகவும் கண்டிக்கத்தக்கது. கர்த்தருடைய சித்தத்திற்குப் பதிலாக, நம்முடைய மனதிலுள்ள எண்ணங்களை விளக்கக் கூடாது என்பதில் எப்போதும் மிகுந்த அக்கறைக்காட்டுகிறவர்களாக இருக்க வேண்டும். “கர்த்தர் சொல்லுகிறார்” என்று சொல்லிகொண்டு, தன்னுடைய சொந்த கருத்தைச் சொல்லுவதைப்போன்ற தேவதூஷணம் வேறெதுவும் இருக்க முடியாது. இதையெல்லாம் அறியாமல்தான், பலரும் இப்படிச் செய்து வருகிறார்களா?
ஒரு மருந்துக்கடைக்காரர், மருத்துவர் எழுதிக்கொடுத்திருக்கும் மருந்துச் சீட்டிலுள்ளபடியே மருந்தை வழங்க வேண்டிவராக இருக்கிறார். இராணுவ வீரர்கள், தங்களுக்கு மேலிருக்கும் அதிகாரியின் வார்த்தைகளைக் கேட்டு, அதை நிறைவேற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அப்படிச் செய்யாதபோது, அதற்கான கடுமையான தண்டனையையும் பெறுகிறார்கள். அப்படியானால், கடவுளுடைய விஷயத்தில் ஈடுபடுகிற ஒருவன், அவருடைய வார்த்தையைப் பற்றிய விஷயத்தில் எவ்வளவு பொறுப்புடன் இருக்க வேண்டியவனாக இருக்கிறான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். நெகேமியா 8:8ல் சொல்லப்பட்டுள்ளதையே, எந்தவொரு பிரசங்கியும் பின்பற்ற வேண்டும், “அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைத் தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.”
இது பாபிலோனிலிருந்து இஸ்ரவேல் தேசத்திற்குத் திரும்பி வந்தவர்களைப் பற்றிய குறிப்பு. அவர்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்தபோது, கொஞ்ச கொஞ்சமாக எபிரெய மொழியில் பேசுவதையும் அதைப் பயன்படுத்துவதையும் நிறுத்திவிட்டார்கள். அரமேய மொழியையே பேச்சு மொழியாக பயன்படுத்தினார்கள். ஆகவே, எபிரெய மொழியில் எழுதப்பட்டிருந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை விளக்க வேண்டிய அவசியம் அன்றிருந்தது (நெகேமியா 13:23-24). இச்சம்பவத்தைக் கர்த்தர் வேதத்தில் பதிவிட்டுத் தந்திருப்பதன் மூலம், இது எக்காலத்திலும் நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்று என்பதையே நமக்குத் தெரிவிக்கிறார். கர்த்தருடைய பராமரிப்பினால் எபிரெய, கிரேக்க மொழியிலிருந்த வேதம் நாம் பயன்படுத்தும் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பிரசங்கிகளுக்கு, இந்நாட்களில் எபிரெய, கிரேக்க மொழியின் வார்த்தைகளை விளக்குவதிலுள்ள பாரம் கொஞ்சம் குறைக்கப்பட்டிருக்கிறது. எனினும், சில பகுதிகளுக்கு மூலமொழியின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி விளக்க வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. பிரசங்கிகளுடைய முதன்மையான வேலை, தன்னுடைய பிரசங்கத்தைக் கேட்கிறவர்கள் புரிந்துகொள்ளும்படியாக, வேத வார்த்தைகளுக்கான “அர்த்தஞ்சொல்லி” விளக்க வேண்டும். “என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 23:28) என்ற இந்தக் கட்டளையை மிகவும் கவனத்துடன் கடைபிடிப்பதே ஒரு பிரசங்கியினுடைய கடமையாக இருக்கிறது.