1. வாசகர்களே!
2. வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல்
3. விடாப்பிடியான விசுவாசம்
4. உயிர் மாய்க்கும் நஞ்சும், கொசுத்தொல்லையும்
5. 1689 விசுவாச அறிக்கை - வாசகர் மதிப்பீடு
வாசகர்களே!
வணக்கம் வாசகர்களே! இந்த இதழ் மூலம் மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இடது தோளில் ஆபரேசன் செய்து ஒரு வாரம் முடிந்த கையோடு இந்த இதழைத் தயாரிக்க கர்த்தர் உதவி செய்தார். அதுவும் பிரசங்கம் செய்யும் அவசியமில்லாமல் வீட்டிலிருந்து குணப்பட்டு வந்த காலத்தில் நேரத்தோடு இந்த இதழைத் தயாரிக்க முடிந்தது.
இந்த இதழில் மிகவும் முக்கியமானதொரு ஆக்கத்தை எழுதியிருக்கிறேன். முடிந்தவரையில் எளிமையாக எழுத முயற்சி செய்திருக்கிறேன். இறையியல் அறிவு பெரிதளவுக்கு இல்லாதவர்களுக்கு இது விளங்கிக்கொள்ளுவதற்கு சிறிது நேரமெடுக்கலாம். ஒருதடவைக்கு மேல் கவனத்தோடு சிந்தித்து வாசித்தீர்களானால் இதை விளங்கிக்கொள்ளுவது கடினமாக இருக்காது.
இந்த இதழில் வெயின் குரூடம் (Wayne Grudem) எனும் இறையியலறிஞரின் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை ஆராய்ந்து சீர்திருத்த இறையியல் கண்ணோட்டத்தில் என்னுடைய கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். பிரபலமாகியிருக்கும் அந்நூலில் பிரச்சனைகள் அதிகம் காணப்படுகின்றன. அந்தப் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக அடையாளங்கண்டு அவற்றின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி கிறிஸ்தவர்கள் தவறான போதனைகளை தவிர்த்துக்கொள்ள துணைசெய்யும் விதத்தில் இந்த ஆக்கத்தை வரைந்திருக்கிறேன்.
இது தவிர 2 இராஜாக்களில் இருந்து ஒரு செய்தியையும், 1689 விசுவாச அறிக்கை பற்றிய ஷேபா (ஓமான்) அவர்களின் கருத்துரையையும், அடிப்படை வேதசத்தியங்கள் பற்றியும் அவ்வாறில்லாத விதத்தில் தரப்பட்டிருக்கும் சத்தியங்கள் பற்றியும் விளக்கி, ‘உயிரை மாய்க்கும் நஞ்சும், கொசுத்தொல்லையும்‘ என்ற தலைப்பில் ஒரு ஆக்கத்தையும் தந்திருக்கிறேன். இந்த ஆக்கம் உங்களைச் சிந்திக்க வைக்கவேண்டும். “ஏனென்றால், அடிப்படைப் போதனைகளில் ஒற்றுமை, அவ்வாறில்லாத போதனைகளில் சுதந்திரம், அனைத்திலும் அன்பு” என்ற தத்துவத்தைப் பின்பற்ற இந்த ஆக்கத்தை விளங்கிக்கொள்ளுவது அவசியம்.
இந்த இதழைத் தயாரிக்கத் துணைபுரிந்த அனைவருக்கும் என் நன்றிகள்! இந்த இதழ் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கக் கர்த்தர் துணைபுரியட்டும். – ஆசிரியர்
வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல்
என்னுடைய இறையியல் மாணவர்களில் சிலர், நாங்கள் வாசிக்கக்கூடிய அளவுக்கு எளிமையான ஆங்கிலத்தில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல் ஏதாவது இருக்கிறதா, என்று அடிக்கடி கேட்டிருக்கிறார்கள்.
அதனால் எப்போதுமே நம்மவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இறையியல் நூல்கள் இருக்கின்றனவா என்று புதிதாக வெளிவரும் நூல்களின் மீது ஒரு கண் வைத்திருப்பது என் வழக்கம். அப்போதுதான் வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது 1000 பக்கங்களுக்கு மேலுள்ள பெரிய நூல். அதன் முதல் பதிப்பு வெளிவந்தபோது அது பற்றிப் பெரியளவில் பேசப்பட்டது; பாராட்டுக்களும் குவிந்தன. பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி அத்தகைய நூல்களில் முதல் இடத்தையும் பெற்றிருந்தது. அத்தோடு பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.
அதேவேளை, சூட்டோடு சூடாக இந்நூல் பற்றிய சில முக்கிய குற்றச்சாட்டுகளும், எதிர்ப்புகளும் உடனடியாக எழுந்தன. அதில் மிக முக்கியமான குற்றச்சாட்டு, குரூடம், இயேசு கிறிஸ்துவின் நித்திய குமாரத்துவத்தை (The Eternal generation of the Son) நிராகரித்திருக்கிறார் என்பது. அது உண்மைதான் என்பதை அறிந்தபோது அவருடைய நூலால் பெரிய பயனொன்றும் இருக்காது என்று அதை வாங்குவதைத் தவிர்த்தேன். ஏனென்றால், திரித்துவப்போதனை தொடர்பான எந்த சத்தியத்தையும் நிராகரிப்பது கர்த்தரையே நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்.
அதற்குப் பிறகு, 2016ல் இருந்து பலவிதமான கண்டனங்களுக்கு மத்தியில் வாக்குவாதங்களையும், பேச்சு வார்த்தைகளையும் இறையியல் அறிஞர்கள் அவரோடு நடத்தி, இறுதியில் குரூடம், தேவகுமாரனின் நித்திய குமாரத்துவத்தை இப்போது நம்புகிறேன் என்று அறிவித்து, அத்தோடு தன்னுடைய முறைப்படுத்தப்பட்ட இறையியலின் இரண்டாவது பதிப்பு வருகிறபொழுது முன்பெழுதியிருந்ததைத் திருத்திக்கொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆகையால், இரண்டாவது பதிப்பு 2020ல் வெளிவந்தபோது சில வருடங்கள் கழித்து 2024ல் ஒரு பிரதியை வாங்கினேன். எதற்கும் நேரடியாகவே நூலை வாசித்து அது எத்தகையது என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். எதையும் வாசித்துப் பார்க்காமல் அதுபற்றி கருத்துச் சொல்லுவது தவறு. நல்லதாக இருந்தால் ஏனையோருக்கும் அதை அறிமுகப்படுத்தலாம்; தரமானதாக இல்லாதிருந்தால் எனக்குத்தான் பணம் இழப்பு. குரூடமின் நூலைப் பற்றிய கருத்துக்களை ஒரு சீர்திருத்த பாப்திஸ்து கிறிஸ்தவன் என்ற அடிப்படையில் ஆராய்ந்தே இந்தக் கருத்துக்களை முன்வைக்கிறேன். அதனால் ஒப்புக்கு வெறும் நல்ல வார்த்தைகளைச் சொல்லி, சொல்ல வேண்டியவற்றை மறைத்துவிடுகிற செயலை என்னால் செய்ய முடியாது. அத்தோடு, ஒரு போதகக் கண்ணோட்டத்தில் ஆத்துமாவின் ஆவிக்குரிய நலனையும், திருச்சபையின் நலனையும் கருத்தில் கொண்டே இதை எழுதியிருக்கிறேன்.
இம்முறையில் வெயின் குரூடமின் நூலை விமர்சிப்பது அவரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாகாது. அவர் பக்திவிருத்தியுள்ள மனிதராகவும், என்னைவிடச் சிறந்தவராகவும்கூட இருக்கலாம். இந்த ஆக்கம் அவருடைய நூலையும், அவருடைய இறையியல் கருத்துக்களையுமே விமர்சிக்கிறது. இப்போது அவர் சரீரத் துன்பத்துக்காளாகியிருக்கிறார். அவர் விசுவாசிக்கும் தேவன் இவ்வேளையில் அவரோடிருந்து அவர் தன் விசுவாச ஓட்டத்தை வெற்றிகரமாக முடிக்கத் துணைசெய்யட்டும்.
வெயின் குரூடம்
வெயின் குரூடம் அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் செமினரியில் இறையியல் பேராசிரியராக இருந்து வருகிறார். அதற்கு முன் இருபது வருடங்களுக்கு திரித்துவ இவாஞ்சலிக்கள் இறையியல் கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் பிரிவின் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது பலராலும் பயன்படுத்தப்பட்டு வரும் English Standard Version ஆங்கில மொழிபெயர்ப்பை மேற்பார்வை செய்த கமிட்டியில் குரூடம் பணிபுரிந்திருக்கிறார். அத்தோடு ESV Study Bible தயாரிப்பில் பொது ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். இப்போது பார்கின்சன் வியாதியால் துன்பப்படும் அவரால் தொடர்ந்து பீனிக்ஸ் செமினரியில் இறையியல் வகுப்புக்களை நடத்த முடியவில்லை. அவர் 22 புத்தகங்களுக்கு மேலாக எழுதி இருக்கிறார். அவற்றில் பிரபலமானது இதுவரையில் இரண்டாவது பதிப்பாக வந்திருக்கும் முறைப்படுத்தப்பட்ட இறையியலே. இந்நூல் 75,000 பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல் இந்த அளவுக்கு விற்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை.
நூலின் பாராட்டக்கூடிய அம்சம்
குரூடம் முறைப்படுத்தப்பட்ட இறையியலை சாமானியனும் ஆங்கிலத்தில் வாசித்து விளங்கிக்கொள்ளும் முறையில் இலகுவானதாக விளக்கி இருக்கிறார். அதைத்தான் இதைப் பாராட்டும் பெரும்பாலானோர் குறிப்பிட்டிருக்கிறார்கள். என் நாட்டில், எனக்குத் தெரிந்த ஒருவருடைய பெந்தகொஸ்தே சபைப் போதகரான அவருடைய உறவினர் இந்த நூலை வாசித்து அது பற்றிப் பெரியளவில் பாராட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று என்னிடம் சொன்னார். பொதுவாகவே இறையியலில் அடியோடு ஆர்வம்காட்டாத பெந்தகொஸ்தே பிரிவைச் சேர்ந்த ஒருவர் இத்தனை பெரிய இறையியல் நூலை வாசிக்கச் செய்யும் ஆர்வத்தை இந்நூல் தூண்டியிருக்கிறது.
தன் நூலின் ஒவ்வொரு அதிகாரத்தின் இறுதியிலும் பயன்பாடுகளைத் தந்து, ஒரு கிறிஸ்தவப் பாடலோடு தியானப் பாணியில் முடித்திருக்கிறார் குரூடம். டாக்டர் பீட்டர் மாஸ்டர்ஸ் அவர்களின் வார்த்தையின்படி, (மேலைநாட்டில்) ஒன்பதாம், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எழுதப்பட்டதுபோல் குரூடம் நூலை எளிமையாக எழுதியிருக்கிறார் (ஆடியோ செய்தியொன்றில் கேட்டது). முறைப்படுத்தப்பட்ட இறையியலை வேதப்பாடப் படிப்பு போல எளிமையாக விளக்கி எழுதியிருக்கிறார். அதன் காரணமாக, முறைப்படுத்தப்பட்ட இறையியல் புத்தகத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப்பட வேண்டிய நுணுக்கமான டெக்னிக்கல் வார்த்தைகளையும், வரலாற்று இறையியலில் பயன்படுத்தப்படுகின்ற வார்த்தைப் பிரயோகங்களையும் இந்தப் புத்தகத்தில் அவர் பெருமளவுக்குத் தவிர்த்திருக்கிறார். உண்மையில், இறையியல் கல்லூரி மாணவனுக்கு இந்தப் புத்தகத்தில் இருப்பதைவிட மேலும் அதிகமான, நுணுக்கமான விளக்கங்கள் தேவைப்படும். அத்தகைய வரலாற்று இறையியலோடு தொடர்புடைய நுணுக்கமான இறையியல் ஆய்வுகளையும், விபரங்களையும் இந்நூலில் காண முடியாது.
புத்தகம் எழுதப்பட்டிருக்கின்ற முறையும், அதிகாரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற முறையும் பாராட்டுதலுக்குரியது. இதை அனேகர் வரவேற்றிருக்கிறார்கள். இறையியலை, இறையியல் மாணவர்களுக்கும், போதகப் பணியில் இருப்பவர்களுக்கும், இறையியல் போதிப்பவர்களுக்கும் எழுதாமல், (மேலை நாடுகளிலுள்ள) சாதாரண திருச்சபை அங்கத்தவர்கள் வாசித்து விளங்கிக்கொள்ளக்கூடிய ஆங்கில மொழிநடையில் இந்தப் புத்தகத்தை குரூடம் எழுதியிருக்கிறார். ஆகவே, பாராட்டக்கூடிய இத்தகைய அம்சங்கள் இந்நூலில் காணப்பட்டபொழுதும், கவலைக்குரிய, ஆபத்தான அநேக அம்சங்களை இதில் பரவலாகக் காணமுடிகின்றது.
இந்நூலைப் பற்றி
குரூடம் பாரம்பரிய வரலாற்றுச் சீர்திருத்த இறையியல் பின்னணியில் (Traditional Reformed) வந்தவரில்லை. இரட்சிப்போடு தொடர்புடைய பொதுவான கல்வினிசப் போதனைகளை மட்டும் அவர் கொண்டிருக்கிறார். அதனால் அவர் முழுமையான கல்வினிஸ்டு என்றும் கூறிவிட முடியாது. அந்தவிதத்தில் அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதுமில்லை. அவரை “நடுத்தர” கல்வினிஸ்டு (moderate) என்றே கூறமுடியும். அதாவது இரட்சிப்புக்குரிய கல்வினிசப் போதனைகளில் வசதிக்கேற்ற ஒரு சில மாற்றங்களை அவர் செய்துகொண்டிருக்கிறார் (Ex: Reprobation). அதற்கு மேல் அவரிடம் பாரம்பரிய வரலாற்று சீர்திருத்த இறையியலை எதிர்பார்க்க முடியாது. பொதுவாக அவர் சுவிசேஷ இயக்கப் பின்னணியைக் (Broad Evangelical) கொண்டிருக்கிறவர். பேராசிரியராக அவர் இறையியல் போதித்து வரும் இறையியல் கல்லூரிகளும் அத்தகைய பின்னணியைக் கொண்டவையே. இதன் காரணமாக, குரூடம் பலவிதங்களில் பாரம்பரிய சீர்திருத்த போதனைகளோடும், வரலாற்று விசுவாச அறிக்கைகளோடும் முரண்படுகிறார். சபைப் பிரிவுகள், சபை வேறுபாடுகள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், அனைவருக்கும் பொதுவான போதனைகளை குரூடமின் புத்தகம் தருகிறது. ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல் வரலாற்று இறையியலை ஒதுக்கி வைக்காமல், முரண்பாடுகளுக்கு இடமில்லாமல், வரலாற்று விசுவாச அறிக்கைகளுக்கு முரணாக அல்லாமல், சத்தியத்தை விளக்க வேண்டும். அதை வெயின் குரூடமின் நூலில் காண முடியாது.
குரூடமின் நூலில் ஆமோதிக்கக்கூடிய பகுதிகள் அடியோடு இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. இறையியலில் பொதுவான போதனைகளைப் பொருத்தளவில் அவருடைய விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே. உதாரணத்திற்கு, வேதவியல் (முதல் பாகம்), கர்த்தரியல், கர்த்தருடைய குணாதிசயங்கள் (இரண்டாம் பாகம்), மீட்பின் நடைமுறைச் செயலாக்கம் ஆகியவை. இந்த நூலைப் பற்றிய பிரச்சனை என்னவென்றால் நன்மையானவற்றோடு மிகவும் ஆபத்தான போதனைகளும், முரண்பாடான போதனைகளும், மேலெழுந்தவாரியான அழுத்தமற்ற குழப்பமான விளக்கங்களும் கலந்து காணப்படுவதுதான். இத்தகைய இறையியல் கலப்படம் கிறிஸ்தவனுக்கோ, சபைகளுக்கோ ஆகாது.
நம்மினத்து அரிசியில் கல்லிருப்பது இயற்கை. இருந்தும், முடிந்தவரை கற்களை அகற்றிவிட்டுத்தான் பெண்கள் சமைப்பார்கள். இறையியல் நூல்களில் அதற்கு இடமிருக்கக்கூடாது. காகித அட்டைகளைப் பயன்படுத்தி ஒரு கோபுரத்தைக் கட்டி முடித்த பிறகு, அதில் எந்தப் பகுதியிலிருந்தாவது ஒரு அட்டையை மெதுவாக நீக்கினாலும் முழு அட்டைக் கோபுரமும் சரிந்துவிடும். இறையியல் அதுபோன்றதுதான். அதன் அடிப்படைப் போதனைகளில் ஒன்றை நிராகரித்தாலோ அல்லது மாற்றங்களை ஏற்படுத்தினாலோ முழு இறையியலையும் அது பாதிக்கும். குரூடம் தன் இறையியல் கோபுரத்தில் செய்திருக்கும் மாற்றங்கள் அவருடைய கோபுரத்தைத் தொடர்ந்து நிற்க முடியாமல் செய்திருக்கிறது.
நம்மினத்தில் இறையியல் தேர்ச்சி இல்லாதவர்கள் குரூடமின் நூலை வாசித்து இதுதான் வேதம் போதிக்கின்ற இறையியல் என்று நம்பிவிடுகின்ற ஆபத்து இந்நூலில் இருக்கிறது. கீழைத் தேசத்து இறையியல் கல்லூரிகள் எல்லாவற்றிலும், ஆங்கிலிக்கன், லூத்தரன், பிரஸ்பிடெரியன் கல்லூரிகளிலிருந்து, பாப்திஸ்து, பெந்தகோஸ்தே, கெரிஸ்மேட்டிக் கல்லூரிகள் அனைத்திலும் இந்த நூல் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கேள்விப்படுகிறேன். அதற்கு முக்கிய காரணம், எல்லாச் சபைப் பிரிவுகளுக்கும் ஒத்துப்போகின்ற விதத்தில், கலப்படமாக சத்தியங்கள் இந்நூலில் விளக்கப்பட்டிருப்பதுதான். என்னைப் பொறுத்தவரையில் அதுவே மிகப் பெரிய ஆபத்து!
இன்றைய சமுதாயத்தில் காணப்படும் பிரச்சனையே, எது பிரபலமானதோ, எது அதிகம் விற்பனை ஆகிறதோ, எது கவர்ச்சி உள்ளதாக இருக்கிறதோ, எதை அதிகமானோர் ஆதரித்து பேசுகிறார்களோ அதற்குப் பின்னால் சிந்தித்துப் பார்க்காமல் எல்லோரும் ஓடுவதுதான். ராமாயணத்தில் சீதைக்கு முன்னால் வந்த மாயமான் கவர்ச்சி உள்ளதாகத்தான் இருந்திருக்கிறது. அதனால் வந்த பேராபத்து எத்தகையது என்பது நமக்குத் தெரியாதது அல்ல. கர்த்தரின் வார்த்தைக்கு எதிராகத், தான் ஏற்படுத்திய ஆராதனைக்கு யெரொபெயாம் கொடுத்த விளக்கம் இஸ்ரவேல் மக்களுக்கு மிகக் கவர்ச்சி உள்ளதாகத்தான் தெரிந்திருக்கிறது. அதிலிருந்த ஆபத்தை அவர்கள் உணரவில்லை. சிந்திக்காமல் அவன் வழியில் போன அனைவரும் அழிவையே சந்தித்தார்கள். தன் வார்த்தைக்கு முரணான ஆராதனையை காத்தர் அனுமதிக்கவில்லை.
வெயின் குரூடமின் நூலை அங்கீகரித்துப் பரிந்துரை (Endorcement) செய்திருப்பவர்களின் பட்டியல் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. ஜோன் பைப்பரின் பெயர் முதலாவதாக இருக்கிறது. அவர் வெயின் குரூடத்தைப்போலக் கெரிஸ்மெட்டிக் தாக்கத்தைத் தன்னில் கொண்டிருக்கிறவர். அத்தோடு பாரம்பரிய சீர்திருத்தவாதத்தில் இருந்து மாறுபட்டுக் காணப்படும் புதிய கல்வினிச மார்க்கத்தைச் சேர்ந்தவர் (New Calvinism). பட்டியலில் ஆச்சரியமளித்த பெயர் ஜிம் பெக்கர். ஜிம் பெக்கரும் அற்புத ஆவிக்குரிய வரங்களின் தொடர்ச்சியை வலியுறுத்துகிறவர். இவர்கள் எல்லோருமே ஆவிக்குரிய வரங்களைப் பொறுத்தவரையில் தொடர்வாதப் (Continuationist) பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்நம்பிக்கைக்கு எதிரானவர்களை இடைநிறுத்தவாதிகள் (Cesationist) என்று அழைப்பார்கள். நான் இடைநிறுத்தவாதத்தைப் பின்பற்றுகிறவன். நல்லவேளையாக பிரபலமான எந்தப் பாரம்பரிய சீர்திருத்த இறையியலறிஞரும் நூலுக்கு பரிந்துரை எழுதவில்லை. பொதுவாகப் பரவலாகக் காணப்படும் சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்தவர்களே பரிந்துரை அளித்திருக்கிறார்கள்.
இறையியலையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நட்புக்காகப் பரிந்துரை தரும் வழமை இன்று மேலை நாடுகளில் வழமையாகி வருகிறது. நாம் மிகவும் மதிக்கும் ஒரு இறையியல் வல்லுனரும், பெரும் பிரசங்கியானவரும் தன் நூல்களுக்கு பரிந்துரை அளிக்க எவரையும் தேடிப்போவது தனக்குப் பிடிக்கவில்லை என்று என்னிடம் சொன்னார். அவருடைய வார்த்தைகளின் பொருள் எனக்குப் புரிந்தது. தன் புத்தகம் பிரபலமாகவேண்டும் என்பதற்காகப் பிரபலமானவர்களின் பரிந்துரையைத் தேடியலைவது இன்று வழமையாகிவிட்டது. இந்த முறையை நூல் அதிகம் விற்கவேண்டும் என்பதற்காகப் பலர் பின்பற்றுகிறார்கள்.
வெயின் குரூடமின் நூலில் காணப்படும் பிரச்சினைகள் யாவை என்பதை இனி ஆராய்வோம்:
- இது பாரம்பரிய வரலாற்று சீர்திருத்த இறையியல் பின்னணியைக் கொண்ட நூலல்ல
குரூடம் இந்த முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை சீர்திருத்த பாரம்பரிய வலாற்று இறையியலின் அடிப்படையில் எழுதவில்லை. நம்மினத்தில் சீர்திருத்த இறையியல் கற்கும் ஆர்வமுள்ளவர்களுக்காக இதை நான் விளக்கவேண்டியிருக்கிறது. சீர்திருத்த இறையியல் அறிஞர்களான ஜோன் கல்வின், சார்லஸ் ஹொட்ஜ், ரொபர்ட் டெப்னி, ஜே. ஜே. டேக், லூயிஸ் பேர்கொவ், ரொபர்ட் ரேய்மன்ட் போன்றோருடையதைப் போன்றதல்ல குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல். இவர்களுடையதைப் போன்ற இறையியல் நிலைப்பாட்டைத் தன் நூலில் குரூடம் எடுக்கவில்லை; அவ்வகையில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் இல்லை. எந்தவித சபைப்பிரிவுகளையும், இறையியல் பிரிவுகளையும் சார்ந்து நிற்காமல், பொதுவான சுவிசேஷ இயக்க இறையியல் என்றளவில் இதை எழுதியிருக்கிறார் குரூடம். ஒரு சீர்திருத்த கிறிஸ்தவனாக இதையே நான் குறைபாடுடையதாகக் காண்கிறேன்.
- குரூடம் பொதுவாகப் பெருமளவுக்கு சீர்திருத்த இறையியலறிஞர்கள் அல்லாதவர்களின் கருத்துக்களைச் சார்ந்தே நூலைத் தயாரித்திருக்கிறார்.
1600 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்த இறையியல் நூலில் அவர் ஆய்வுக்குப் பயன்படுத்தியிருப்பவர்களின் நூல் பட்டியல் ஏழு பக்கங்கள் மட்டுமே. அவற்றில் சீர்திருத்த, பியூரிட்டன் இறையியல் அறிஞர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடம் மிகக் குறைவானது; விடப்பட்டு இருப்பவர்களின் தொகை அதிகம். வரலாற்று இறையியல் நூல்களுக்கோ, வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகளுக்கோ அவருடைய நூல் பட்டியலில் எந்த இடமும் தரப்படவில்லை. (மூன்று வரலாற்று விசுவாச அறிக்கைகளை மட்டும் பின்னிணைப்பாகத் தந்திருக்கிறார். அவற்றை ஆதாரமாக மேற்கோள் காட்டி எதையும் விளக்கவில்லை. குரூடம் பாப்திஸ்தாக இருந்தபோதும் 1689 விசுவாச அறிக்கையை இந்தப் பின்னிணைப்பில் தருவதைத் தவிர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.) ஆர்மினியன் இறையியலாளர்களான ஜெக்கபஸ் ஆர்மீனியஸ், சார்ள்ஸ் பினி, ஸ்ட்ரோங், ஹென்றி தீசன், லூயிஸ் பேரி, சார்ள்ஸ் ரைரி, ரிச்சர்ட் வாட்சன், வில்லியம் ஜே. ரோட்மன் (கெரிஸ்மெட்டிக்), ஆகியோர் பழமைவாத சுவிசேஷ இயக்க இறையியல் அறிஞர்களாக (Conservative evangelical theologians) அடையாளங்காணப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் தன் நூல் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைவரையுமே பழமைவாத சுவிசேஷ இயக்க இறையியல் அறிஞர்களாகக் குரூடம் குறிப்பிட்டிருப்பது, பழமைவாத சுவிசேஷ இயக்கம் (Conservative evangelicalism) என்ற வார்த்தைப் பிரயோகத்தையே பொருளற்றதாக்கிவிடுகிறது. கிறிஸ்தவ இறையியலுக்கும், சீர்த்திருத்த இறையியலுக்கும் புதிதாக அறிமுகமாகி வருகிறவர்களுக்கு இது பெருந்தடுமாற்றத்தை ஏற்படுத்தும்; அவர்களுக்குத் தவறான வழியைக் காட்டும்.
- வரலாற்று இறையியலுக்கும், சீர்திருத்த பாரம்பரியத்திற்கும் நூலில் இடமளிக்கவில்லை
குரூடம் தன் போதனைகளுக்கு ஆதரவாக, உதாரணங்களாக வரலாற்று சீர்திருத்த இறையியல் பாரம்பரியத்திலும், சபை பிதாக்களிலும், வரலாற்று விசுவாச அறிக்கைகளிலும், சீர்திருத்த இறையியல் அறிஞர்களிலும் தங்கியிராமல், பொதுவாக 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வந்திருக்கும் சுவிசேஷ இயக்கத்தின் இறையியலாளர்களின் கருத்துக்களிலேயே தங்கியிருக்கிறார். 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின்வந்திருக்கும் பெரும்பாலானோரின் சிந்தனை அக்காலப்பகுதிக்கு முன்னிருந்தோரின் இறையியல் பார்வையைவிட்டுப் பெருமளவுக்கு விலகியிருக்கிறது என்பதைக் கிறிஸ்தவ வரலாறு நமக்குக் காட்டுகிறது. “குரூடம் பரந்தளவுக்கு பாரம்பரிய வரலாற்று சீர்திருத்தவாதத்தைக் கலந்தாலோசிக்கவில்லை. தற்கால சுவிசேஷ இயக்க இறையியலறிஞர்களான ஜோன் பிரேம், வில்லியம் லேன் கிரெக் போன்றவர்களையே அவர் சார்ந்து நிற்கிறார்” என்கிறார் கிரெக் ஏ. கார்ட்டர் (Credo Magazine, Vol 11, Issue 1, 2021)
- சத்தியத்தை நிலைநாட்டுவதில் தவறான இறையியல் அணுகுமுறை.
குரூடம் தன்னுடைய நூலை முறைப்படுத்தப்பட்ட இறையியல் என்று அறிவித்துக்கொண்டிருந்தாலும், அதை எழுதப் பாரம்பரிய இறையியலாளர்களின் அணுகுமுறையைக் கையாளவில்லை. வேதத்தில் ஒரு தலைப்பு தொடர்பான அத்தனை ஆதார வசனங்களையும் தொகுத்து அவற்றில் இருந்து நேரடியாக வேதஉட்பொருள் வசன ஆய்வை (Exegesis) நடத்தி, அதன் மூலம் தனக்கு உண்மையானதாகத் தோன்றியவற்றின் அடிப்படையில் மட்டும் தன் இறையியல் போதனையை அவர் தந்திருக்கிறார். அவர் கண்டுகொண்ட உண்மையைக் கிறிஸ்தவ வரலாற்று இறையியலையும், வரலாற்றில் எழுந்திருக்கும் விசுவாச அறிக்கைகளையும், சபைப்பிதாக்களின் போதனைகளையும், சீர்திருத்த, பியூரிட்டன் பெரியவர்களின் போதனைகளையும் பயன்படுத்தி ஆராய்ந்து தன் முடிவு சரியானதா? இல்லையா? என்ற தீர்மானத்திற்கு அவர் வரவில்லை. அவ்வாறு செய்வதை அவர் அடியோடு தவிர்த்திருக்கிறார். அப்படிச் செய்வது வரலாற்றையும், அதன் மூலம் உருப்பெற்றுள்ள சபைப் போதனைகளையும் வேத வசனங்களுக்குள் திணிக்கும் செயல் என்ற தவறான நோக்கத்தை அவர் கொண்டிருந்திருக்கிறார். வேதத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் குரூடம், சபை வரலாறும், சபைப் பாரம்பரியமும் அங்கீகரித்துள்ள சத்தியங்களை அதற்கு எதிரானவையாகக் காண்பது ஆச்சரியமானது மட்டுமல்ல, பெரும் ஆபத்தானதுமாகும்.
குரூடம் கையாளும் இன்னுமொரு ஆச்சரியமானதும், ஆபத்தானதுமான வேதவிளக்க விதிமுறை, அவர் எந்த சத்தியத்தையும் வெளிப்படையாகத் (Explicit) தெளிவாகத் தரப்பட்டிருக்கும் வசனப்பகுதிகளில் மட்டுமிருந்து நிரூபிக்க முற்படுவது. உள்ளடக்கமாக (Implicit) மட்டும் சத்தியத்தை விளக்கும் வசனப்பகுதிகளுக்கு குரூடம் அடியோடு முக்கியத்துவமளிக்கவில்லை. இது சீர்திருத்த வரலாற்று வேதவிளக்க முறைக்கு முற்றிலும் புறம்பான போக்கு (1689 விசுவாச அறிக்கை, அதி. 1:6).
வேத சத்தியங்கள் அத்தனையும் வெளிப்படையாக அவற்றை விளக்கும் வசனப்பகுதிகள் மூலம் மட்டும் அல்லாமல், உள்ளடக்கமாக விளக்கப்பட்டிருக்கும் பல்வேறு வசனப் பகுதிகளின் மூலமும் தரப்பட்டிருக்கின்றன. அதிமுக்கிய கோட்பாடுகளான ஆராதனைக் கோட்பாடுகளையும் (Worship of God), திருச்சபைக் கோட்பாடுகளையும் (The Doctrine of the Church), உடன்படிக்கை இறையயிலையும் (Covenant Theology) வேதத்தில் உள்ளடக்கமாக அவற்றை விளக்கும் பரவலாகக் காணப்படும் பல்வேறு பகுதிகளைப் பயன்படுத்தியே பொதுவாக அனைத்து சீர்திருத்த இறையியலாளர்களும் விளக்கமளித்திருக்கின்றனர். அம்முறையிலேயே பரிசுத்த ஆவியானவர் அத்தகைய விளக்கங்களை நமக்கு அளித்திருக்கிறார்.
இதற்கு மாறாக வெளியரங்கமாக எதையும் விளக்கும் வசனங்களில் இருந்து பெறப்படும் சத்தியங்களை மட்டுமே அதிகாரமுள்ளவையாகக் கருதுவது பெருந்தவறு. அந்த முறையில் செயல்பட்டால் வேதத்தின் அனேக முக்கிய போதனைகளை நாம் இரண்டாந்தரப் போதனையாக, கட்டாயம் நம்பிப் பின்பற்ற அவசியமற்றதாகவே கருத முற்படுவோம். அந்த அணுகுமுறையைத்தான் குரூடமில் பரவலாகக் காண்கிறேன். இந்த அணுகுமுறையே அவருடைய குழப்பமானதும், ஆபத்தானதுமான பல்வேறு முடிவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. (Ryan M. Mcgraw மேலே நான் குறிப்பிட்ட சீர்திருத்த வேதவிளக்கவிதி பற்றி அருமையாகத் தன் சிறு நூலில் விளக்கியிருக்கிறார். By Good and Necessary Consequence, Reformation Heritage Books).
கிறிஸ்தவ இறையியல் ஒன்றுமில்லாததிலிருந்து உருவாவதில்லை. ஏற்கனவே வேதத்தில் இருந்து முன்னனுமானமாகத் (Presupposition) தீர்மானிக்கப்பட்டிருக்கும் சில உண்மைகளின் அடிப்படையிலேயே உருவாகின்றது. உதாரணத்திற்கு, கடவுள் இருக்கிறவராய் இருக்கிறார் (ஆதி 1:1) என்பது வேத முன்னனுமானம். அதுவே கடவுளைப் பற்றிய இறையியலின் ஆரம்பம். இந்த முன்னனுமானத்தை விவாதிக்க முடியாது; இது சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. திரித்துவப் போதனை இன்னுமொரு உதாரணம். அடிப்படைச் சத்தியங்களனைத்திலும் கிறிஸ்தவம் இத்தகைய அனுமானங்களைக் கொண்டிருக்கிறது. இதேவகையில்தான் வரலாற்று விசுவாச அறிக்கைகளும், சபைப் போதனைகளும் உருவாகியிருக்கின்றன. அவற்றை நிராகரித்துத் தனியொருவராக சிந்தித்துப் புதியதொரு இறையியலை உருவாக்க முடியாது.
எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் அது ஏற்கனவே கிறிஸ்தவம் முன்னனுமானமாகக் கொண்டிருக்கும் அடிப்படைச் சத்தியங்களை மீறக்கூடாது. இந்த விதியைக் குரூடம் மீறியிருக்கிறார். எதிலும் தங்கியிராமல் எதையும் நேரடியாக வேதத்தில் இருந்து தானே ஆராய்ந்து கண்டுகொள்வது குரூடமின் இறையியல் அணுகுமுறை. ஆகவே, வரலாற்று சபை அனுமானங்களை அவர் வெறும் மனித சிந்தனையில் இருந்து புறப்பட்டவையாகக் கருதுகிறார். அதன் காரணமாகவே அவருடைய வேதவசன உட்பொருள் விளக்கக் கண்டுபிடிப்புகள் பாரம்பரிய சபைப்போதனைகளை மீறி அமைந்துவிடுகின்றன. உதாரணமாக, திரித்துவ அங்கத்தவர்கள் பற்றிய அவருடைய விளக்கங்கள். குரூடமின் இறையியல் ஹைபிரிட் அணுகுமுறை (Theological Hybrid approach) தவறானது. அது வென்டீலியன் முன்னனுமான அணுகுமுறைக்கு (Van Tilian presuppositionalism) முற்றிலும் மாறானது. அத்தோடு, சார்ள்ஸ் ரொபட் ஸ்பிரவுலின் தர்க்கரீதியான சத்திய வாதாடல் முறைக்கும் (Apologetic) முற்றிலும் மாறானது.
குரூடமின் இம்முடிவும், போதனைகளும், இதுவரை நம்பிப் பயன்படுத்தக்கூடியவிதத்தில் நம்மத்தியில் இருந்து வந்திருக்கும் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல்களிலிருந்து (உதா: டெரடீன், சார்ள்ஸ் ஹொட்ஜ், லூயிஸ் பேர்கொவ்) அவருடைய நூலை விலக்கி வைக்கிறது. 19ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த ஆய்வு முறையும், போதனைகளும், சபைப் பாராம்பரியமும் இக்காலத்துக்கு உதவாது எனும் முடிவும், எதையும் கேள்விகளைக் கேட்டு வேதத்தை ஆராய்ந்து மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்ற முறையும் அடியோடு ஏற்றுக்கொள்ள முடியாததும், வேதத்தை விட்டு நாம் விலகிப்போவதிலுமே கொண்டு சேர்க்கும்.
- நித்திய குமாரத்துவமும், நித்திய கீழ்ப்படிவும்
திரித்துவப் போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளில் ஒன்று. நித்தியத்தில் பிதாவும், குமாரனும், ஆவியானவரும் ஒரே தன்மையையும் (equal in nature), ஒரே வல்லமையையும் (equal in power), ஒரே சித்தத்தையும் (one will) கொண்டிருக்கிறார்கள் என்பது மறுதலிக்கமுடியாத உண்மை. ஆதி சபைக்கால வரலாற்றில் இது குறித்து எழுந்த (Arianism) முரண்பாடான போலிப்போதனைக்கு திருச்சபை முகங்கொடுத்து “நைசீயா” கவுன்சில் அறிக்கை மூலம் அப்பிரச்சனைக்கு முடிவுகட்டியது. அன்றிலிருந்து திருச்சபை நைசியா கவுன்சில் அறிக்கைக்கு மாறான எந்தப் போதனையையும் போலிப்போதனையாகவே கருதி வந்திருக்கிறது.
வெயின் குரூடம், நைசீன் அறிக்கைக்கு மாறான ஒரு போதனையைத் தன்னுடைய முதலாவது பதிப்பில் வெளியிட்டார். அதில் அவர் திரித்துவத்தில் குமாரனின் நித்திய குமாரத்துவத்தை நிராகரித்தார். அதாவது, திரித்துவத்தின் இரண்டாம் ஆள்தத்துவமான குமாரன் நித்தியத்தில் இருந்து பிதாவுக்கு குமாரன் அல்ல என்பது அவருடைய வாதமாக இருந்தது. இந்த வாதம் திரித்துவப் போதனை பற்றிய நைசீன் அறிக்கையின் விளக்கதிற்கு எதிரானது. இந்த விளக்கத்தின் மூலம் குரூடம், குமாரனைப் பற்றிய அநேக தவறான போதனைகளுக்கு வித்திட்டார். உதாரணத்திற்கு, நித்தியத்தில் இருந்து இயேசு கிறிஸ்து குமாரனாக இல்லாதிருந்தால், எப்போது அவர் குமாரனானார்? எனும் ஏரியனிசப் பிரச்சனை (Arian controversy) மறுபடியும் தலைதூக்கும். அப்பிரச்சனைக்கு நைசீன் அறிக்கை (A.D. 325) ஏற்கனவே முடிவுகட்டியிருந்தது. சீர்திருத்த இறையியலாளர் கெவின் டீயொங்கின் வார்த்தைகளில் சொல்லப்போனால், “குமாரனின் நித்திய குமாரத்துவமில்லாமல் நமக்குப் பூரண இரட்சிப்பை அளிக்கக்கூடிய கிறிஸ்து இருக்க முடியாது. ஏனெனில், தெய்வீகத்தின் மொத்தக் குணாதிசயங்களையும் தன்னில் கொண்டிருக்கும் ஒரு குமாரனாக அவர் இருக்கமாட்டார்.” (Daily Doctrine, Kevin Deyong, 2024, pg 174).
2016ல் பல்வேறு இறையியல் அறிஞர்களின் கண்டனத்திற்கு முகங்கொடுத்த குரூடம், இதுபற்றிய தன்னுடைய கருத்தை மாற்றிக்கொள்ளுவதாக வாக்களித்து, தன் நூலின் இரண்டாம் பதிப்பில் முதல் பதிப்பிலிருந்த பகுதிகளை நீக்கிக்கொண்டார். அத்தோடு, திரித்துவம் போதிக்கும் குமாரனின் நித்திய குமாரத்துவத்தை ஏற்றுக்கொள்ளுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தப் பிரச்சனை அதோடு முடிந்துவிட்டதாகக் கருதிவிடக்கூடாது. முதல் பதிப்பில் அவர் திரித்துவத்தைப் பற்றி வெளியிட்டிருந்த இன்னுமொரு கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அதாவது, கிறிஸ்து நித்தியத்திலிருந்து பிதாவின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிகிறவராக இருக்கிறார் (Eternal Functional Subordination of the Son) என்று குரூடம் குறிப்பிட்டிருக்கிறார். குரூடமின் விளக்கத்தில் பிரச்சனை காணப்படுகிறது. அவர், திரித்துவ அங்கத்தவர்கள் நித்தியத்தில் தங்களுடைய தன்மையில் (Essence) எந்தவித மாறுபாடும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை அங்கீகரிக்கிறார். ஆனால், பிதாவும், குமாரனும் தங்களுடைய பாத்திரத்திலும், பணிகளைச் செய்வதிலும் நித்தியத்திலிருந்தே அதிகாரப்பிரிவைக் கொண்டிருக்கிறார்கள் என்று விளக்குகிறார். இவ்விளக்கம் அவருடைய நூலின் இரண்டாம் பதிப்பில் தொடர்ந்து காணப்படுகிறது. நைசீன் அறிக்கையிலிருந்து வரலாற்றில் உருவாகியிருக்கும் அத்தனை விசுவாச அறிக்கைகளும் குரூடமின் இந்தக் கருத்துக்கு எதிராகவே இருக்கின்றன.
உங்களுக்குப் புரியும்படி இதைச் சுருக்கமாக விளக்கவேண்டியது அவசியம். திரித்துவப் போதனையின்படி பிதா, குமாரன், ஆவியானவர்கள் நித்தியத்திலிருந்து ஒரே தன்மையையும் (Essence), ஒரே வல்லமையையும் (power), ஒரே சித்தத்தையும் (will) கொண்டிருந்து, அவர்களுடைய பாத்திரம் (Role) வெவ்வேறானவையாக இருந்தபோதும், திரித்துவத்தில் நித்தியத்தில் (Ontological Trinity) அதிகாரப் பிரிவுக்கு ஒருபோதும் இடங்கிடையாது. தன் விளக்கத்தின் மூலம் திரித்துவ அங்கத்தவர்களின் பாத்திரத்தை அவர்களுடைய தன்மையில் இருந்து பிரித்துவிடுகிறார் குரூடம். அவர்களின் தன்மையில் மாற்றமில்லாதிருந்தபோதும், பாத்திர வேறுபாட்டின்படி Ontological Trinityல் அதிகாரப் பிரிவிருப்பதாக அவர் விளக்குகிறார். இந்தவிதத்தில் பிரித்துவிளக்கமளிப்பதிலேயே பிரச்சனை காணப்படுகிறது. அதாவது, ஏதோவொருவிதத்தில் நித்தியத்திலிருந்தே பிதா குமாரனைவிட உயர்ந்தவர் என்று எண்ணுவதற்கு இது வழிகோலுகிறது. அதையே குரூடமின் நண்பரான புரூஸ் வெயரும் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன் சபை வரலாற்றில், வரலாற்றிறையியலில் எவரும் இந்தவிதத்தில் விளக்கமளித்திருக்கவில்லை. இது பற்றிய கெவின் டியொங்கின் எளிமையான விளக்கம் அவசியம் வாசிக்க வேண்டியது; அதுவே சீர்திருத்த கிறிஸ்தவ நம்பிக்கை. (Taxis, Daily Doctrine, Pg 70-71). கெவின் டியொங்கின் வார்த்தைகளில் சொல்லப்போனால், “திரித்துவத்தின் மூன்று அங்கத்தவர்களும் நித்தியத்தில் அவர்களுடைய பாத்திரங்களுக்கேற்ற அதிகாரத்தினாலும், கீழ்ப்படிவினாலும் பிரித்துக் காட்டப்படவில்லை.” (Taxis, Daily Doctrine, Pg 71).
பிதா, குமாரன் என்று திரித்துவத்தின் இரு அங்கத்தவர்களும் அழைக்கப்படுவது ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர், அதிகாரம் கொண்டவர் என்பதற்காகவல்ல; அவர்களுக்கிடையில் காணப்படும் உயர்தரமான தெய்வீக உறவையும், ஐக்கியத்தையும் வெளிப்படுத்துவதற்காகத்தான். இத்தகைய உறவை சாதாரண குடும்ப உறவுக்கு ஆதாரமாகவோ, இணையானதாகவோ விளக்கக்கூடாது. நித்தியத்திலிருந்து குமாரன் பிதாவிலிருந்து புறப்படுவது (Eternal generation) அவர்களுக்கிடையில் காணப்படும் மனித சிந்தனைக்கப்பாற்பட்ட உறவையும் ஐக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது.
இயேசு கிறிஸ்து மனிதகுமாரனாக பிதாவால் மீட்பை நிறைவேற்ற அனுப்பப்பட்டபோதே (Economical Trinity) பிதாவுக்குக் கீழ்ப்படியும் அவருடைய பணி ஆரம்பித்தது; நித்தியத்தில் அதற்கு அவசியமோ, இடமோ இருக்கவில்லை. நித்தியத்தில் மீட்புக்கான திட்டத்தைப் பிதாவும் குமாரனும் வகுத்து, குமாரன் பிதாவின் திட்டத்தை நிறைவேற்ற ஒப்புக்கொண்டபோதும் அங்கே சகலவிதத்திலும் அவர் பிதாவுக்குச் சமமானவராகவே இருந்தார்.
குரூடமின் திரித்துவம் பற்றிய இந்த விளக்கம், வேத விளக்கமளிக்கும்போது முக்கியமாக திரித்துவ இறையியலில் எவரும் போகக்கூடாத இடத்திற்குள் நுழைந்திருக்கிறது. இது அவருடைய இறையியல் அணுகுமுறையின் தவற்றையும், பாரம்பரிய வரலாற்றுக் கிறிஸ்தவத்தில் இருந்து எந்தளவுக்கு அவர் விலகி நிற்கிறார் என்பதையும் சுட்டுகிறது.
- ஆண், பெண் பணிகளும், பாத்திரப் பிரிவும் (Complementarianism)
குரூடம், படைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் அடிப்படையில் கர்த்தர் விதித்திருக்கும் பணிப்பிரிவுகளை ஏற்றுக்கொள்ளுகிறார். அதேநேரம், வீட்டில் மனைவி கணவனின் அதிகாரத்திற்குக் கீழிருந்து பணிபுரிய வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார். பிரச்சனை, திருச்சபையில் பெண்களின் பணிகளைப் பற்றியதே. பெண்கள் திருச்சபையில் ஆத்மீக ரீதியில் ஆண்களுக்கு சமநிலையில் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குரூடமின் பேராதங்கம். அதைச் சரிசெய்வதற்கான வழிமுறைகளைக் குரூடம் நாடுகிறார்.
குரூடம் பெண்கள் போதகர்களாக இருப்பதை வரவேற்காதபோதும், போதகர்களுடைய பணிகளாக அல்லாத சபைத் தலைமைக்குரிய அநேக பணிகளைப் பெண்கள் செய்ய அனுமதியளிக்கிறார். அவர்கள் உதவிக்காரர்களாக இருப்பதையும் அவர் ஆதரிக்கிறார் (அதி. 47). அதற்குக் காரணம் திருச்சபைத் தலைமை பற்றிய அவருடைய விளக்கங்கள் பாரம்பரிய, வரலாற்றுக் கிறிஸ்தவத்தை விடவும் மாறுபாடானதாகவும், வரையறுக்கப்பட்டதாகவும் இல்லாமலிருப்பதுதான். குரூடமின் திருச்சபைக் கோட்பாடு நடைமுறையில் காணப்படும் வேத ஆதாரமற்றதும், கட்டற்றதுமான (தளர்வானதுமான) பொதுவான சுவிசேஷ இயக்க திருச்சபை (General loose evangelical practice) அமைப்பைத் தழுவிக்காணப்படுகின்றது. பெண்கள் செய்யக்கூடியதும், செய்யக்கூடாதுமான பணிகளுக்கான 83 விதிகள் என்ற ஒரு ஆக்கத்தைக் குரூடம் எழுதியிருக்கிறார். (83 Rules of what women can do and can’t do in the church, Wayne Grudem). குரூடமின் நடைமுறைவாத விளக்கங்களின்படி (Pragmatic) வேதத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படாத, சமுதாயத்தில் காணப்படும் அனேக பதவிகளைச் சபை கொண்டிருக்க முடிவதோடு, அப்பதவிகளைப் பெண்கள் வகித்து ஆணும், பெண்ணும் கூடிவரும் இடங்களிலெல்லாம் அவர்கள் போதனையளிக்கவும் முடியும். இது பாரம்பரிய வரலாற்றுக் கிறிஸ்தவத்திற்கு அப்பாற்பட்ட பரவலான நவீன தளர்வான சுவிசேஷ இயக்கத்தைச் சார்ந்த விளக்கங்களாகும்.
குரூடமின் இன்னுமொரு தவறு, குடும்பத்தில் கணவன், மனைவி ஆகியோருக்கிடையில் காணப்படும் அதிகாரப் பிரிவை வலியுறுத்தி நியாயப்படுத்துவதற்காக, அத்தகைய அதிகாரப்பிரிவு நித்தியத்திலிருந்து பிதா, குமாரன் ஆகியோருக்கிடையில் காணப்படுகின்றது என்று விளக்கியிருப்பதுதான். அதாவது, நித்தியத்திலிருந்து குமாரன் பிதாவின் அதிகாரத்திற்குக் கீழிருந்து செயல்படும் முறையே, குடும்பத்தில் கணவனுக்குக் கீழிருந்து மனைவி செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கிறதென்கிறார் குரூடம். இதே கருத்தை அவருடைய நண்பரான புரூஸ் வெயாரும், ஜோன் பிரேமும் கொண்டிருக்கிறார்கள். குரூடம், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்களிடம் காணப்படும் அதிகாரப்பிரிவையும், உறவையும் தழுவியே குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகளிடம் சமுதாயத்தில் உறவும், அதிகாரப்பிரிவும் அமைந்து காணப்படுகின்றது என்று விளக்கியிருக்கிறார்.
இந்தவகையில் திரித்துவ அங்கத்தவர்கள் மத்தியில் நித்தியத்தில் இருந்து அதிகாரப்பிரிவு காணப்பட்டதாக விளக்குவது, நான் ஏற்கனவே விளக்கியிருப்பதுபோல் நைசியா வரலாற்றுக் கிறிஸ்தவப் போதனைக்கு முற்றிலும் மாறுபாடானது; எதிரானது. குடும்பத்தில் காணப்படும் அதிகாரப் பிரிவையும் உறவையும் திரித்துவத்திற்குள் நுழைப்பது வேதமோ, சபை வரலாறோ கண்டிராத புதுமை விளக்கம். இதுவும் குரூடம் எந்தளவுக்குப் பாரம்பரிய வரலாற்றுக் கிறிஸ்தவத்திலிருந்து வேறுபட்டு நிற்கிறார் என்பதைச் சுட்டுகிறது.
- படைப்பு (Creation)
படைப்பைப் பற்றிய கோட்பாடுகளில் குரூடம், உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது என்ற பாரம்பரிய வரலாற்றுப் போதனையை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அதற்கு எதிரான, உலகம் பலகோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் படைக்கப்பட்டது என்ற வாதத்தையே சார்ந்து நிற்கிறார். “சுவிசேஷ இயக்கத்தார் அனைவருக்கும், கிறிஸ்தவ நிறுவனங்கள் அனைத்திற்கும் உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டது (young earth) அல்லது பலகோடிக்கணக்கான வருடங்களில் படைக்கப்பட்டது (old earth) ஆகிய இரண்டு கருத்துக்களுமே ஏற்புடையதாக இருக்கின்றது” என்று குரூடம் கூறுகிறார் (Chapter 15, Creation, pg 411). இந்த விஷயத்தில் மாறுபாடான கருத்துக்களைக் கொண்டிருப்பது வேதத்தை நாம் நம்புகிறோமா, இல்லையா? நாம் தாராளவாதத்தைப் பின்பற்றுகிறோமா அல்லது பாரம்பரியப் பழமைவாதத்தைப் பின்பற்றுகிறோமா? என்பது போன்ற விவாதத்தோடு தொடர்புடையதல்ல என்கிறார் குரூடம். அவரைப் பொறுத்தவரையில் வேதம் தவறுகளற்றது என்ற போதனைக்கும், வேதம் அதிகாரமுள்ளது என்ற போதனைக்கும் படைப்பைப் பற்றிய அவருடைய சொந்தக் கருத்தான உலகம் பலகோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் படைக்கப்பட்டது எனும் கருத்து முரணானதல்ல. அது எப்படி? என்பதுதான் எனக்கும் புரியவில்லை.
ஆறு நாட்களில் (24 மணிநேரங்கொண்ட ஒரு நாள்) உலகம் படைக்கப்படாதிருந்தால் கிறிஸ்தவ சபத்து நாளான வாரத்தின் முதல் நாளை ஓய்வுநாளாக அனுசரிப்பதற்கு வழியே இல்லை. நிச்சயம் குரூடமின் ஓய்வு நாள் பற்றிய நம்பிக்கையும் கேள்விக்குரியதாகவே காணப்படும். ஆதியாகமம் 1-3 அதிகாரங்களை வரலாறாகக் காண மறுத்தால் உலகத்தோற்றத்தைப் பற்றிய போதனைகளை மட்டுமல்லாமல் அடிப்படைப் போதனைகளில் பலவற்றை மறுதலிக்க நேரிடும்.
“உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது என்ற போதனை வேதத்தில் வெளிப்படையாகத் தரப்படவில்லை என்றும், பல வசனங்களைப் பயன்படுத்தி ஊகித்தே அந்த முடிவுக்கு வரமுடியும்” என்கிறார் குரூடம் (Chapter 15, Creation, pg 412). இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் வெளிப்படையாகத் தரப்படாமல் உள்ளார்ந்தவிதத்தில் கர்த்தர் தந்திருக்கும் எந்தப் போதனையும் வலிமையானது அல்ல என்பது குரூடமின் முடிவு. இதன் மூலம் சீர்திருத்தவாத வேதவிளக்க விதிகளில் ஒன்றான, பல்வேறு வேதவசனங்களின் அடிப்படையில் தத்துவார்த்த ரீதியாக ஆராய்ந்து உள்ளார்ந்த விதத்தில் வேதத்தில் தரப்பட்டிருக்கும் போதனைகளைப் (Implicit teachings) பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முக்கிய விதியைக் குரூடம் நிராகரிக்கிறார். ஏற்கனவே இந்த ஆக்கத்தில் நான் விளக்கியிருப்பதுபோல் குரூடமின் வேத ஆய்வு அணுகுமுறையே இறையியல் பற்றிய அவருடைய பல்வேறு தவறான முடிவுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
வரலாற்று விசுவாச அறிக்கைகள் அனைத்தும் உலகம் ஆறுநாட்களில் படைக்கப்பட்டதாகவே விளக்குகின்றன. 19ம் நூற்றாண்டு காலத்து இறையியல் வல்லுனர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் வேதத்தை ஆராய்ந்து நிரூபிக்கும் வழிமுறையைப் பின்பற்றியே உலகம் பலகோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் படைக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்தனர். இதுவே அன்றுமுதல் இறையியல் கல்லூரிகளனைத்தையும் பாதித்து இன்றுவரை தொடர்கின்றது. விஞ்ஞானம் வேதத்தோடு ஒத்துப்போக வேண்டுமே தவிர வேதத்தை நிராகரிக்கக்கூடாது.
- வெளிப்படுத்தளோடு தொடர்புடைய ஆவிக்குரிய வரங்கள் (Revelatory gifts)
குரூடம் பலவீனமான சுவிசேஷ இயக்கத்தைச் சார்ந்தவராக இருப்பதால் பல்வேறு கிறிஸ்தவப் பிரிவுகளோடும் அவர்களுடைய போதனைகளுடன் ஒத்துப்போகிறவராக இருக்கிறார். பொதுவாகக் காணப்படும் பெந்தகொஸ்தே, கெரிஸ்மெட்டிக் இயக்கத்தின் பல்வேறு நடைமுறைச் செயல்களை அவர் ஏற்றுக்கொள்ளாதபோதும் ஆவிக்குரிய வரங்கள் பற்றிய போதனைகளைச் சில திருத்தங்களோடு அவர் ஏற்றுக்கொள்ளுகிறார். அவரைப் பொறுத்தவரையில் வெளிப்படுத்தலோடு தொடர்புடைய, அப்போஸ்தலர்களின் காலத்தில் காணப்பட்ட பல்வேறு ஆவிக்குரிய வரங்களும் இன்றும் திருச்சபையில் தொடர்கின்றன. முக்கியமாக, தீர்க்கதரிசனம் இன்றும் தொடர்கிறதென்றும், இன்றைய தீர்க்கதரிசனம் அப்போஸ்தலர் காலத்து தீர்க்கதரிசனத்தைவிட சிறிது மாறுபட்டதென்றும் விளக்குகிறார். அதாவது, அப்போஸ்தலர் காலத்து தீர்க்கதரிசனம் ஒருக்காலும் பொய்க்கவில்லை என்றும், இன்றைய தீர்க்கதரிசனங்களில் எல்லாமே நிறைவேறாமல் போய்விடலாம் என்று விளக்கமளிக்கிறார். அதனால் தீர்க்கதரிசனம் சொல்லுவதைத் தவிர்க்கக்கூடாது என்கிறார் குரூடம்.
“பெரும்பாலான ஆவிக்குரிய வரங்களைப் பொறுத்தவரையில் அவை நிரந்தரமானவை என்றே புதிய ஏற்பாடு நமக்குக் காட்டுகிறது” என்கிறார் குரூடம் (Ch. 25. Gift of the Holy Spirit (1), pg 1264). வேதத்தைக் கவனமாக ஆராய்ந்து படித்தால் இத்தகைய விளக்கத்தை அதில் காணமுடியாது. 1 கொரி 12 ஐ மேலெழுந்தவாரியாக வாசித்துவிட்டு அதில் பவுலின் மொழிநடை, அதில் விளக்கப்பட்டிருக்கும் ஆவிக்குரிய வரங்களெல்லாம் இன்றும் நிரந்தரமாகத் தொடர்கின்றன என்ற விதத்திலேயே காணப்படுகின்றது என்கிறார் குரூடம். இவற்றை விளக்கப் பெரும்பகுதியை குரூடம் ஒதுக்கியிருக்கிறார். பாரம்பரிய வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் போதனைகளுக்கு முற்றிலும் மாறுபட்டது குரூடமின் விளக்கங்கள். இந்த விஷயத்தில் ஜோன் பைப்பரும் இவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். (இது பற்றி நான் எழுதி வெளியிட்டிருக்கும் “ஆதி சபையின் அற்புத வரங்கள்” என்ற நூலை வாசியுங்கள்).
- பொது ஆராதனை
திருச்சபை ஆராதனை பற்றிய குரூடத்தில் விளக்கங்கள் ஒரு சில பக்கங்களை மட்டுமே கொண்டன. அவருடைய விளக்கங்களில் வரலாற்றுக் கிறிஸ்தவம் விளக்கும் வரையறுக்கப்பட்ட ஆராதனைத் தத்துவத்திற்கு (Regulative Principle of Worship) எந்த இடமும் இல்லை. அப்படியொன்றிருப்பதாகவே அவர் கண்டுகொள்ளவில்லை. கர்த்தரால் ஆராதனை எவ்வாறு ஏற்படுத்தப்பட்டு, எந்த முறையில் பொது ஆராதனை நடத்தப்பட வேண்டும் என்றெல்லாம் பழைய ஏற்பாட்டில் தரப்பட்டிருக்கும் விளக்கங்களை அவர் அடியோடு விளக்கவில்லை. பழைய ஏற்பாட்டு ஆராதனை இஸ்ரவேலரின் ஆலய வழிபாட்டுக்கு மட்டுமானது எனும் காலப்பிரிவுக்கோட்பாட்டுப் போதனையின் (Dispensationalism) தாக்கத்தை இந்த விஷயத்தில் குரூடமில் காணமுடிகின்றது.
புதிய ஏற்பாட்டை மட்டுமே ஆராதனையைப் பற்றி விளக்க குரூடம் பயன்படுத்தியிருக்கிறார். புதிய உடன்படிக்கை ஆராதனைக்கு பழைய உடன்படிக்கை அடிப்படையாக இருக்கிறது என்பதை குரூடமின் விளக்கங்களில் அடியோடு காணமுடியவில்லை. திருச்சபை ஆராதனை பற்றிய விளக்கங்களில் சீர்திருத்தவாத, பியூரிட்டன்களில் பெயர்களோ, அவர்களுடைய அருமையான ஆலோசனைகளையோ காணமுடியவில்லை. வரலாற்றில் அப்படியொன்றிருந்திருப்பதாகவே அவர் காட்டிக்கொள்ளவில்லை.
தளர்வானதும், பலவீனமானதுமான சுவிசேஷ இயக்கத்தின் நவீன ஆராதனை முறையைப் பொதுவாக அங்கீகரிக்கும் குரூடம் திருச்சபை ஆராதனையை நடத்தும் பொறுப்பு மூப்பர்களினுடையதாகக் காணவில்லை. அவரைப் பொறுத்தவரையில் போதகர்கள் அல்லாத நவீன “ஆராதனைத் தலைவர்கள்” (Worship leaders) ஆராதனையை நடத்த அவசியம். பீனிக்ஸில் குரூடம் அங்கத்தவராக இருக்கும் திருச்சபை அத்தகைய ஆராதனை முறையைக் கொண்டிருக்கும் நவீனகால சபையாக இருக்கிறது. குரூடத்தைப் பொறுத்தவரையில் ஆராதனையில் எந்த வாத்தியக் கருவியை வாசிப்பதற்கும் தடையில்லை; சத்தம் மட்டும் காது வெடித்துப் போகுமளவுக்கு இருக்கக்கூடாது. ஆராதனை வேளையில் கைகளைத் தட்டி ஆராதிப்பதும், கைகளைத் தூக்குவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால், அதைக் கர்த்தருக்காக மட்டும் செய்யவேண்டும் என்கிறார் குரூடம். காலை ஆராதனை மட்டும் முறையானதாக இருந்து மாலை ஆராதனை சில நோக்கங்களுக்காகக் கச்சேரிபோல இருப்பதில் தவறில்லை என்கிறார் குரூடம் (pg 1249).
சபை ஆராதனையில் பழமையான பாடல்களைப் பாடுவதை விட்டுவிடத் தேவையில்லை என்றாலும் நவீன சமகாலப் பாடல்களைப் பாடுவதைக் குரூடம் அதிகம் விரும்புகிறார். கர்த்தரின் ஆராதனை பற்றிய குரூடமின் விளக்கங்கள் ஆராதனை பற்றிய வேத இறையியலை அடிப்படையாகக் கொண்டு அமையாமல் நாம் வாழும் காலத்து சூழ்நிலையையும், நடைமுறை வசதியையும் மட்டும் கணக்கில் கொண்டு அமைந்திருப்பது கவலைக்குரியது. திருச்சபை ஆராதனை பற்றிய போதனையில் குரூடமின் வேத ஆதாரமற்ற அலட்சியப்போக்கைக் கையாளாமல் வரலாற்றுக் கிறிஸ்தவத்தைப் பின்பற்றி அதை அருமையாக விளக்கி உதவியிருக்கிறார் இறையியலறிஞர் சாம் வோல்டிரன். (How Then Should We Worship, The Regulative Principle and Required Parts of the Church’s Corporate Worship, Evangelical Press)
- திருச்சபைக் கோட்பாடுகள்
அ. திருச்சபை தலைமையும், ஆட்சிமுறையும்
திருச்சபை தலைமையைப் பொருத்தளவில் குரூடம், சபையின் பிரதான அதிகாரிகளாக மூப்பர்களையும், உதவிக்காரர்களையும் கருதுகிறார். இருந்தபோதும் ஒரு சபை ஒரேயொரு போதகரைக் கொண்டிருக்கும் முறையையும், அசோசியேட் போதகராக ஒருவர் இருப்பதையும், சமுதாய நிறுவனங்களில் காணப்படும் கமிட்டிகள், போர்டுகள் போன்றவை அவசியத்தைப் பொறுத்து சபையில் காணப்படலாம் என்பது குரூடமின் நம்பிக்கை. இதெல்லாம் இக்காலத்தில் தொடர்ந்து நடைமுறையில் சுவிசேஷ இயக்க சபைகளில் பொதுவாகக் காணப்படுகிறது. அவற்றின் அடிப்படையிலேயே குரூடமின் விளக்கங்கள் காணப்படுகின்றன. வேதம் விளக்கும் மூப்பர், உதவிக்காரர் பதவிகளைத் தவிர வேறு பதவிகளைச் சபையில் ஏற்படுத்துவதை அவர் தவறாகக் கருதவில்லை. திருச்சபைக் கோட்பாடுகள் பற்றிய குரூடமின் விளக்கங்கள் வேதத்தோடு பொருந்திக் காணப்படவில்லை. அதற்குக் காரணம் திருச்சபை அதுபற்றி வெளிப்படையாக எதையும் விளக்கவில்லை என்பது அவருடைய கருத்து.
பாப்திஸ்துகள் பொதுவாகக் கொண்டிருக்கும் காங்கிரேகேஷனல் சபை (Congregational Church Government) அமைப்பைப்பற்றி விளக்குவதற்கு அவர் அதிகம் ஏ. ஹெச். ஸ்ட்ராங்கினுடைய முறைப்படுத்த இறையியல் நூலிலேயே தங்கி இருக்கிறார். குரூடமின் போதனையின்படி ஒரு சபையில் ஒரே போதகர் உதவிக்காரரின் துணையோடு இருவரும் மூப்பர்களாக சபையை ஆள முடியும். (pg 1145). மூப்பர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டையும், அதிகாரப் பிரிவையும் குரூடம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. சபையை ஆளும் அதிகாரம் உதவிக்காரர்களுக்குத் தரப்படவில்லை. பொதுவாக அனேக பாப்திஸ்து சபைகளில் உதவிக்காரர்கள் மூப்பர்களைப் போல நடந்துகொள்கிறார்கள். அது முழுத் தவறு.
காங்கிரேகேஷனல் சபை அமைப்பை குரூடம் வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடிப்படையில் விளக்கவில்லை. காங்கிரிகேஷனல் சபை அமைப்பு ஆதியில் இருந்ததை விட, அதாவது சவோய் விசுவாச அறிக்கையைப் பின்பற்றிய பியூரிட்டன் ஆன ஜோன் ஓவன் போதித்தைவிட இன்று வழக்கத்தில் மிகவும் மாறுபாடு உடையதாகக் காணப்படுகிறது. இதுபற்றிய எந்த விளக்கமும் இந்நூலில் இல்லை. இந்தச் சபை ஆட்சி முறையின்படி இறுதி அதிகாரம் உள்ளூர் சபைக்கு உண்டு. ஆனால், சபையை ஆளுபவர்கள் மூப்பர்களே. இதை ஜனநாயக முறையாகக் கருதிவிடக்கூடாது. தற்காலத்தில் பெரும்பாலும் காங்கிரேகேஷனல் சபை ஆட்சி முறை ஜனநாயக முறையாக, அதாவது எந்த தீர்மானத்தையும் அனைத்து அங்கத்தவர்களின் பெரும்பான்மை வாக்கின் மூலமே தீர்மானிக்கப்படுவதாக அமைந்திருக்கிறது. இந்த ஜனநாயக முறையை குரூடம் ஆதரிக்கவில்லை. புதிய ஏற்பாடு இது பற்றித் தரும் விளக்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமானால் சபையை ஆளும் அதிகாரம் மூப்பர்களின் கையிலேயே இருக்க வேண்டும் என்று அவர் சரியாகவே எழுதி இருக்கிறார் (pg 1147).
திருச்சபை ஆட்சியமைப்பு பற்றிய அதிகாரத்தின் இறுதியில் குரூடம் பின்வறுமாறு கூறுகிறார்,
“திருச்சபை ஆட்சியமைப்பு பற்றிய என்னுடைய விளக்கங்களை முடிவுக்குக் கொண்டுவரும்போது ஒன்றை நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஒரு சபை எத்தகைய ஆட்சி அமைப்பைக் கொண்டிருக்கிறது என்பது சத்தியத்தின் அதிமுக்கிய போதனை அல்ல. வித்தியாசமான ஆட்சி அமைப்புகளைப் பின்பற்றிக் கிறிஸ்தவர்கள் பிரச்சனைகளில்லாமல் இருந்து வந்திருப்பதோடு, பயனுள்ள முறையில் ஊழியங்களைச் செய்து வந்திருக்கிறார்கள்.” (pg 1150).
குரூடமின் இந்தக் கூற்று ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய சபையைக் கட்டுவேன் (மத். 16:18) என்று ஆணித்தரமாக சொன்ன இயேசு கிறிஸ்து அந்தச் சபை எந்தவகையில் அமைக்கப்பட்டு இயங்க வேண்டும் என்பதை வேதத்தில் தராமல் இருந்திருப்பாரா? அதை மனித சிந்தனைப் போக்குக்கு விட்டுவிடுவாரா? அப்போஸ்தலர், நடபடிகளிலும், ஏனைய புதிய ஏற்பாட்டு நிருபங்களிலும் பரவலாக திருச்சபைபற்றிக் கிறிஸ்து விளக்கமளித்திருக்கும்போது திருச்சபை ஆட்சியமைப்பு சத்தியங்களில் முக்கியமான போதனை அல்ல என்று எந்த அடிப்படையில் குரூடம் சொல்லுகிறார்? 1689 விசுவாச அறிக்கையில் மிக நீளமான அதிகாரம் திருச்சபை பற்றியது. திருச்சபை கோட்பாடு முக்கியமானதல்ல என்று எண்ணியிருந்தால் நம்முன்னோர்கள் அத்தனை நீளமான விளக்கங்களைத் தந்திருப்பார்களா?
16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதம் திருச்சபை சீர்திருத்தமாகவே இருந்தது. அதே சீர்திருத்தத்திலேயே பியூரிட்டன் பெரியவர்களும் 17ம் நூற்றாண்டில் ஈடுபட்டார்கள். இவர்களுக்கெல்லாம் திருச்சபை ஆட்சியமைப்பு சத்தியங்களில் முக்கியமானதாகத் தோன்றியிருக்காவிட்டால் சபை சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்திருப்பார்களா? திருச்சபைக் கோட்பாட்டு இறையியலை விளக்கும் ஜோன் கல்வினின் கிறிஸ்தவ கோட்பாடுகள் பற்றிய நூலிலும், ஜோன் நொக்ஸின் எழுத்துக்களிலும், ஜேம்ஸ் பேனர்மனின் திருச்சபை பற்றிய முக்கியமான நூலிலும், அல்பர்ட் என். மார்டினின் போதக இறையியல் வால்யூம்களிலும், கிரெக் நிக்கல்ஸ் எழுதிய திருச்சபைக் கோட்பாடு எனும் நூலிலும் திருச்சபை ஆட்சியமைப்பு பற்றிய குரூடமின் அலட்சிய வார்த்தைகளை ஒருபோதும் காணமுடியாது.
ஆ. திருச்சபை கூடிவருகையில் பெண்களின் பங்கு
திருச்சபைக் கோட்பாடுகளை விளக்கும் பகுதியில் குரூடம் சபையில் பெண்களின் பங்கு பற்றியும் விளக்கியிருக்கிறார். ஆண்களும் பெண்களும் கூடி வரும் சபையில் பெண்கள் பிரசங்கிக்கவோ, தலைமை தாங்கவோ குரூடம் அனுமதிக்காவிட்டாலும், வேறு பலவிதங்களில் அவர்கள் சபையில் பேசலாம் என்கிறார். அத்தகைய சபை ஆராதனைக் கூட்டங்களில் பெண்கள் சத்தமாக ஜெபிக்கவும், வேத வசனங்களை வாசிக்கவும், சாட்சி சொல்லவும், தனியாகப் பாடவும், ஒரு கூட்டத்தோடு இணைந்து பாடவும், நாடகமொன்றில் நடிக்கவும் அனுமதியுண்டு என்கிறார். (pg 1155, 1157). இதையெல்லாம் அவர் 1 கொரி 14, 1 தீமோ 2 ஆகிய அதிகாரங்களை வைத்துத் தன் போக்கில் சிந்தித்து விளக்கமளிக்கிறார். இந்தப் பகுதிகளை குரூடம் விளக்கும் முறை வழமையான வேதவசன உட்பொருள் விளக்க முறைக்கு மாறானது. இத்தகைய நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்று வெளிப்படையாக வேதம் விளக்கவில்லை என்பதே குரூடமின் வாதமாக இருக்கிறது. இந்த வாதமே மிகத் தவறானது. இது பற்றிய சீர்திருத்த பாப்திஸ்து இறையியலறிஞர் சாம் வோல்டிரனுடைய விளக்கங்களே சரியானவை; வேதபூர்வமானவை. அவருடையதைப் போன்ற வேதவசன உட்பொருள் விளக்க முறையை (Exegesis) குரூடம் கையாளவில்லை. (https://www.withallthymind.com/biblestudy/readings/TheRoleofWomenintheChurch.pdf)
இ. ரோமன் கத்தோலிக்க மதம்
மெய்யான கிறிஸ்துவின் திருச்சபைக்கான மூன்று இலக்கணங்களாகிய வேதப் பிரசங்கம், திருநியமங்களை முறையாக அனுசரித்தல், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றை விளக்கும் குரூடம், இவற்றில் இரண்டை மட்டும் கொண்டிருந்து, அடிப்படைச் சத்தியத்திற்குப் புறம்பான சில போதனைகளைத் தன்னில் தொடர்ந்து கொண்டிருந்தபோதும், சில ரோமன் கத்தோலிக்க சபைகள் “மெய்யான சபைகள்” அல்ல என்று நம்மால் கூற முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார் (pg 1063). இந்தக் கூற்று மிகவும் பிரச்சனையும், ஆபத்துமுள்ளதாகவே எனக்குத் தெரிகிறது.
முதலாவதாக, கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நம்பித் திருநியமங்களை சரியாக அனுசரிக்கும் ரோமன் கத்தோலிக்கர்கள் தொடர்ந்தும் சில முக்கியமான அடிப்படைக் கிறிஸ்தவ சத்தியங்களில் முரண்பட்டு நிற்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவதாக, அத்தகைய சபைகள் தொடர்ந்தும் ரோமன் கத்தோலிக்க சபைகளாக இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விஷயத்தில் நடைமுறை அனுபவத்தில் தான் கண்டிருக்கும் சில ரோமன் கத்தோலிக்க சபைகளின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு குரூடம் இதுவரையில் இல்லாததொரு புதிய இறையியலை உருவாக்குவதாகத்தான் தெரிகிறது.
வழமையாகக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ இறையியலை அடிப்படையாகக் கொண்டு தனி நபருடையதும், எந்தச் சபையினதும் தன்மைகளை ஆராய்ந்து பார்ப்பார்கள். அதுவே வேதபூர்வமான அணுகுமுறை. அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு இறையியலை உருவாக்குவது ஆபத்து. மெய்க்கிறிஸ்தவன் கிறிஸ்தவ சத்தியத்திற்கு மட்டும் அடிபணிந்து தன்னுடைய பழைய நம்பிக்கைகளையும், நடவடிக்கைகளையும் அடியோடு விட்டுவிடுவான். அந்தவிதத்தில் பழையதை ஒதுக்கித் தள்ளி அடிப்படைக் கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுக்காத எந்த ரோமன் கத்தோலிக்கரையும் மெய்க்கிறிஸ்தவராகக் கணிக்க வேதம் அனுமதி தரவில்லை. குரூடமின் பாதை ஆபத்தான இறையியல் பாதை.
கத்தோலிக்க மதத்திற்கும் புரொட்டஸ்தாந்து கிறிஸ்தவத்திற்கும் இடையில் காணப்படும் 13 இறையியல் வேறுபாடுகளைப் பட்டியலிட்டு இதற்கு அடுத்த பகுதியில் குரூடம் தந்திருக்கிறார் (pg 1080-1089). இந்தப் பகுதியைத் தெளிவாக விளக்கியிருக்கும் குரூடம், இந்தப் பதின்மூன்று வேறுபாடுகளுக்கும் அடியோடு முழுக்குப் போட்டு விசுவாசத்தின் மூலம் மட்டும் கிறிஸ்துவால் நீதிமானாக்கப்படாத கத்தோலிக்கர்களுக்கு வக்காலத்து வாங்குவது ஏன் என்பது கேள்விக்குறி. ரோமன் கத்தோலிக்க மதத்திற்குச் சார்பாகப் பேசி அதன் பக்கம் சரியப் பார்க்கும் போக்கு சுவிசேஷ இயக்கத்தில் என்றோ ஆரம்பித்துவிட்டது. அந்த இயக்கத்தைச் சார்ந்திருக்கும் குரூடம் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பற்றிய மிருதுவான கருத்துக்களை முன்வைத்திருப்பதில் ஆச்சரியமில்லை.
- குழப்பமளிக்கும் விளக்கங்கள்
வெயின் குரூடம் நூலின் பல்வேறு பகுதிகளில் முக்கிய போதனைகளுக்கு குழப்பமளிக்கும் விளக்கங்களைத் தந்திருக்கிறார். அவருடைய வார்த்தைகள், ஒரு பொருளை ஒரு கையால் கொடுத்துவிட்டு, மறுகையால் அதைத் திரும்ப வாங்கிக்கொள்ளுவதுபோல் அமைந்திருக்கின்றன. இறையியல் விளக்கங்களில் ஒருபோதும் எந்தவிதக் குழப்பத்தை ஏற்படுத்தும் விளக்கங்களும் இருக்கக்கூடாது.
குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு (Particular Redemption) எனும் போதனையை அளிக்கின்ற பகுதியில் (Pg 743) குரூடம், “சீர்திருத்தவாதப் போதனையான குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு எனும் போதனையே வேதத்தின் மொத்தப் போதனைகளோடும் பொருந்திப் போவதாக இருக்கிறதாக நான் காண்கிறேன்” என்று அதை ஆமோதித்து ஏற்றுக்கொள்ளுகிறபோது, அதே பகுதியில் இன்னொரு இடத்தில் மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பின்வருமாறு கூறுகிறார்,
“சீர்திருத்தவாதிகள் சில சமயங்களில் ஒருவரின் கோட்பாடுகள் பாரம்பரியக் கோட்பாடா (Orthodox)? இல்லையா? என்பதை ஆராய்ந்தறிவதற்கு குறிப்பிட்டவர்களுக்கான மீட்பாகிய போதனையைப் பயன்படுத்துவார்கள். ஆனால் வேதம் இதை ஒருபோதுமே மிக முக்கியமான சத்தியமாகக் கணித்து விளக்கமளிக்கவில்லை என்பதை உணர்வது நலமானது. அதேநேரம், ஒரு தடவையாவது வேதத்தில் விளக்கமாகத் தரப்பட்டிருக்கும் எந்த இறையியல் போதனையிலும் இது ஒரு கருப்பொருளாகக் காணப்படவில்லை. ஏனைய சத்தியங்களையும், நடைமுறைகளையும் விளக்குகின்ற வேதப்பகுதிகளில் அங்கும் இங்குமாக தற்செயலாக இதுபற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பவற்றிலிருந்தே இப்போதனையை அறிந்து கொள்ளுகிறோம். இது திரித்துவ அங்கத்தவர்களின் உள்ளார்ந்த ஆலோசனைக்குரிய விஷயமாக இருப்பதோடு இதுபற்றிய மிகக் குறைவான நேரடி வேதசாட்சியங்களே உள்ளன - இந்த உண்மை இந்த விஷயத்தில் நாம் கவனத்தோடு நடந்துகொள்ள வேண்டுமென்பதைக் காட்டுகிறது. சமநிலையான போதகக் கண்ணோட்டத்தைக் கொண்டிருந்து சொல்வதானால், குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு எனும் போதனை நமக்கு உண்மையாக இருக்கலாம் என்று தோன்றினாலும், நம்முடைய இறையியல் நம்பிக்கைக்கு தர்க்கரீதியிலான ஒருமைப்படுத்தலைத் தந்தாலும் - இந்தப் போதனை குழப்பத்தை ஏற்படுத்துவதாலும், தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாலும், தவறான வாக்குவாதங்களையும், பிரிவினையையும் ஆத்துமாக்களின் மத்தியில் ஏற்படுத்துவதால்தான், யோவானும், பேதுருவும், பவுலும் ஞானமாக இதுபற்றி அழுத்தமான எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. அதனால் நாமும் அவர்களுடைய வழியையே பின்பற்ற வேண்டும்.”
குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு ஆகிய போதனையையே வேதம் போதிப்பதாக ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் குரூடம், அது வேதத்தில் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் விளக்கப்படவில்லை என்று இப்பகுதியில் கூறுவது அவருடைய இறையியல் வடிவமைப்பையே சந்தேகத்திற்குள்ளாக்குகிறது. குறிப்பிடப்பட்டவர்களுக்கான மீட்பு ஆகிய போதனை குறித்து அழுத்தமான விளக்கமளிப்பதை குரூடம் தவிர்த்திருக்கிறார். கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் அடித்தள அம்சமாக இதை விளக்காமல், ஒரு சில முக்கியமற்ற வசனங்கள் மட்டும் விளக்கும் இரண்டாம் நிலைப் போதனையாக இதற்கு விளக்கமளித்திருக்கிறார். குரூடமின் இந்த விளக்கம் முழு வேதமும் இதுபற்றி அளித்திருக்கும் தெளிவான, ஆரோக்கியமான விளக்கத்தை ஓரங்கட்டிவிடுகிறது. மத்தேயு 1:21; யோவான் 10:11; அப்போஸ்தலர் 20:28; ரோமர் 8:32-34, எபேசியர் 5:25; வெளிப்படுத்தின விசேஷம் 5:9-10 ஆகிய வசனங்கள் மிகத் தெளிவாகப் பிதாவினால் குமாரனின் கையில் கொடுக்கப்பட்டவர்களுக்கான பலிதமளிக்கும் நிச்சயமான பரிகாரப்பலியை விளக்குகின்றன. இதற்கு மேலாகவும் இதுபற்றிய வசனங்கள் வேதத்தில் உள்ளன.
குறிப்பிடப்பட்டவர்களுக்கான மீட்பு பற்றிய போதனையை ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் விளக்குவது, எல்லோருக்குமாக சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டிய நம்முடைய கடமையை மட்டுப்படுத்திவிடுகிறது என்று கருதுகிறார் குரூடம். தன்னுடைய விளக்கத்தின் மூலம் வரலாற்று சீர்திருத்த கிறிஸ்தவத்தில் என்றுமே காணப்பட்டிராத அநாவசியமானதொரு பதற்றத்தை ஏற்படுத்துகிறார் குரூடம்.
வரலாற்றில் தோன்றியிருக்கும் கவுன்சில் அறிக்கைகளும், விசுவாச அறிக்கைகளும் ஜோன் ஓவன், பென்ஜமின் வோர்பீல்ட் ஜோன் மரே, சார்ள்ஸ் ஸ்பர்ஜன் ஆகியோரும் குறிப்பிட்டவர்களுக்கான மீட்பையும், எல்லோருக்குமான சுவிசேஷ அழைப்பைக் கொடுப்பதையும் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் சமநிலையில் வேதத்தில் தரப்பட்டிருக்கும் போதனைகளாக வலியுறுத்திக் காட்டியிருக்கின்றனர். இந்த இரண்டிற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் தேவையற்ற எத்தனிப்பில் இவற்றில் ஒன்றின் அழுத்தத்தைக் குறைத்து விளக்குவதன் மூலம் குரூடம் ஒன்றோடொன்று ஒத்துப்போகும் வேத சத்தியங்களின் தெளிவான தன்மையைப் பலவீனப்படுத்திவிடுகிறார். கிறிஸ்துவின் மரணத்தை சாத்தியமானதொரு ஏற்பாடாக வேதம் விளக்காமல், வரலாற்றில் நிகழ்ந்த பலிதமளிக்கும் மீட்பாகவே விளக்குகிறது. பிதாவினால் குமாரனின் கையில் கொடுக்கப்பட்டவர்களுக்கான உடன்படிக்கையின் நிறைவேற்றமாகவே வேதம் இதை விளக்குகிறது.
குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு ஆகிய போதனை பற்றிய குரூடமின் பலவீனமான, குழப்பமுள்ள விளக்கங்களுக்கு மாறாகத் தலைசிறந்த பியூரிட்டன் இறையியலறிஞரான ஜோன் ஓவன் நம்பத்தகுந்த விதத்தில் தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டவர்களுக்கான மீட்பை ஆணித்தரமாக விளக்கும் விதத்தில், “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” (The Death of Death in the Death of Christ) எனும் நூலை எழுதியிருக்கிறார். குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு எனும் போதனையை அருமையாக விளக்கும் சீர்திருத்த சத்தியவாதாடல் (Apologetic) நூலிது.
வேதத்தில் இப்போதனை, குரூடம் சொல்லுவதுபோல் தற்செயலாக அங்குமிங்குமாகத்தான் காணப்படுவதாக இருந்தால் வரலாற்றில் டோர்ட் சினட் குழுவினர் ஆர்மீனியனிசத்திற்கெதிரான ஐம்போதனையைக் கட்டமைத்து அதில் குறிப்பிட்டவர்களுக்கான மீட்பைப் பற்றி ஆணித்தரமாக விளக்கியிருப்பார்களா? ஜோன் ஒவனின் “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” நூலுக்கு தர்க்கரீதியிலான அருமையான இறையியல் முன்னுரை அளித்து குறிப்பிட்டவர்களுக்கான மீட்பை நிலைநிறுத்திய ஜிம் பெக்கர் எந்தக் கண்ணோட்டத்தில் குரூடமின் இந்நூலுக்கு பரிந்துரை அளித்தார் என்பது தெரியவில்லை.
- குரூடமின் ஏனைய இறையியல் விளக்கங்கள்
இந்நூலில் திருச்சபையின் பொது ஆராதனை பற்றி விளக்கமளித்திருக்கும் குரூடம் ஓய்வுநாள் கோட்பாடு பற்றி எந்த விளக்கத்தையும் அளிப்பதை அடியோடு தவிர்த்திருக்கிறார். குரூடமின் உடன்படிக்கை பற்றிய விளக்கங்களையும், அவருடைய பொதுவான பலவீனமான சுவிசேஷ இயக்க இறையியல் போக்கைக் கவனிக்கும்போது ஓய்வுநாளைப் பற்றிய பலவீனமான நம்பிக்கையையே அவர் கொண்டிருப்பார் என்றுதான் நம்பவேண்டியிருக்கிறது. அத்தோடு அவர் இந்த விஷயத்தில் புதிய உடன்படிக்கை இறையியலாளரின் பக்கம் (New Covenant Theology) சார்ந்து நிற்பதாகத் தெரிகிறது. இந்நூலுக்கு பரிந்துரை (endorcement) அளித்திருக்கும் பலர் ஒய்வு நாள் அனுசரிப்பை ஏற்றுக்கொள்ளாத புதிய உடன்படிக்கை இறையியலாளர்கள்.
நியாயப்பிரமாணத்தின் மூன்று பிரிவுகள் (Three fold division of the Law) பற்றிய விளக்கங்களும், அவற்றில் இன்றும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய ஒழுக்கப் பிரமாணத்தைப் (Moral Law) பற்றிய எந்த விளக்கங்களும் இந்நூலில் இல்லை. பத்துக்கட்டளைகளை குரூடம் சில இடங்களில் மட்டும் குறிப்பிட்டிருந்தபோதும் விசுவாசியின் பரிசுத்தமாக்குதலில் அதற்கான பங்கைப் பற்றிய எந்த விளக்கத்தையும் தரவில்லை. பரிசுத்தமாக்குதலின் ஒரு அங்கமாக, கிறிஸ்தவன் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று விளக்கும் குரூடம், புதிய உடன்டிக்கையின் ஒழுக்கக் கட்டளைகளுக்கு மட்டுமே அவன் கீழ்ப்படிய வேண்டும் என்கிறார் (Ch. 38, Pg 932). பழைய உடன்படிக்கையின் ஒழுக்கப் பிரமாணத்தை அவர் புதிய உடன்படிக்கை இறையியலாளரைப்போல வலியுறுத்தாதிருந்திருப்பது அப்பட்டமாகிறது.
பாப்திஸ்தாக இருந்தபோதும், ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து பற்றிய குரூடமின் விளக்கங்களும் உறுதியற்றதாகவும், பலவீனமானவையாகவுமே காணப்படுகின்றன. இத்திருநியமங்களை எந்தக் கிறிஸ்தவனும் கொடுக்கலாம் என்று குரூடம் விளக்கியிருக்கிறார். இவற்றைத் திருச்சபையோடும், சபைத் தலைமையோடும் இணைத்துப் பார்ப்பதை அவர் தவிர்த்திருக்கிறார்.
பழைய ஏற்பாட்டில் கர்த்தர் மனிதரோடு ஏற்படுத்திய வெவ்வேறு உடன்படிக்கைகளை குரூடம் விளக்கியபோதும், பாரம்பரிய வரலாற்று சீர்திருத்த கிறிஸ்தவமோ, சீர்திருத்த பாப்திஸ்துகளோ பின்பற்றும் உடன்படிக்கை இறையியல் விளக்கங்களை ஆணித்தரமாகப் பின்பற்றவில்லை. உடன்படிக்கை இறையியலைப் பற்றிய விளக்கங்களை அவர் தந்திருந்தபோதும் அவருடைய விளக்கங்களில் அழுத்தமோ, வலிமையோ காணப்படவில்லை. சுவிசேஷ இயக்க பாப்திஸ்தாக இருக்கும் குரூடம் உடன்படிக்கை இறையியலை அதிமுக்கியமானதாகக் கருதி விளக்காமல் இருந்திருப்பதில் ஆச்சரியமில்லை. மாறாகப் பெரும் சீர்திருத்த பாப்திஸ்தான சார்ள்ஸ் ஸ்பர்ஜனின் வார்த்தைகளை நாம் கவனிப்பது அவசியம். ஸ்பர்ஜன் சொல்கிறார், “உடன்படிக்கை இறையியல் இறையியலின் வேராக இருக்கின்றது. கிரியையின் உடன்படிக்கைக்கும், கிருபையின் உடன்படிக்கைக்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை நன்றாக விளங்கிக்கொள்கிறவரே இறையியல் சாமர்த்தியர் என்று சொல்லப்படுகிறது. நியாயப்பிரமாண உடன்படிக்கை பற்றியும், கிருபை பற்றியதுமான அடிப்படைப் போதனைகளில் விடும் தவறுகளே அனேகரை வேதஇறையியலில் பெரும்பாலான தவறுகளை விடவைக்கிறது என்பதை நான் நம்புகிறேன்” என்கிறார். (https://www.monergism.com/covenant-theology-historic-christianity)
இறுதிக் காலப் போதனைகளைப் பொறுத்தவரையில் குரூடம் Progressive Dispensationalism போக்கையும், Historic Pre-millenialism கோட்பாட்டையும் பின்பற்றுகிறார். இதுவும் பாரம்பரிய வரலாற்று சீர்திருத்தப் போதனைகளோடு முரண்படும் கோட்பாடுகளாகும்.
முடிவுரை
இந்த ஆக்கத்தில் வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியலில் அதிமுக்கியமான போதனைகளை மட்டுமே ஆராய்ந்து விளக்கம் அளித்திருக்கிறேன். நூலில் நல்ல சில அம்சங்கள் இருந்தபோதும், எளிமையான விதத்தில் பல்வேறு போதனைகளுக்கு குரூடம் விளக்கமளித்திருந்தபோதும், நூலில் காணப்படும் ஆபத்தான குறைபாடுகளால் சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கு அதை அறிமுகப்படுத்துவது எனக்குப் பிரச்சனையாக இருக்கிறது. பாலையும் தண்ணீரையும் பிரித்துப் பாலை மட்டும் குடிக்கத் தெரிந்திருக்கும் அன்னப் பறவையைப் போல, நூலில் இருக்கும் நல்லவைகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு தவறானவற்றை ஒதுக்கிவிடலாமே என்று சிலர் சொல்லலாம். ஆனால், அந்தவிதத்தில் நல்லவைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நம்மினத்துக் கிறிஸ்தவர்களுக்கு இறையியல் ஞானமோ பக்குவமோ கிடையாது. எல்லா நூல்களிலும், நல்லவற்றிலும்கூட குறைகள் இருக்கத்தானே செய்யும் என்பார்கள் சிலர். உண்மைதான்! ஆனால், அத்தகைய நல்ல நூல்களில் காணப்படும் குறைபாடுகள் அதிமுக்கியமான சத்தியங்களைப் பற்றியதாக இருக்காது. இந்த நூலை அந்தப் பட்டியலில் வைக்க முடியாது. அதனால் என்னைப் பொறுத்தளவில் இறையியலே அடியோடு இல்லாத நம்மினத்துக் கிறிஸ்தவத் திருச்சபைகளுக்கு இந்த நூல் பொருந்தி வராது.
இறையியலைக் கற்றுக்கொள்ளும்போது நம்பகத் தன்மையுள்ள நூல்களிலிருந்தும், தரமான ஆசிரியர்களிடமுமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். அத்தன்மை இந்த நூலில் கிடையாது. பலவீனமான சுவிசேஷ இயக்கத்தைச் சேர்ந்த ஆங்கிலிக்கன், பாப்திஸ்து, சகோதரத்துவ, கெரிஸ்மெட்டிக் கிறிஸ்தவர்களுக்கு இந்நூல் பொருந்திவரலாம். ஆனால், பாரம்பரிய, வரலாற்று, விசுவாச அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட, சீர்திருத்தப் போதனைகளை (Traditional historical confessional reformed doctrines) நாடிக் கற்றுக்கொள்ளும் இருதயமுள்ளவர்களுக்கு குரூடமின் நூல் நிச்சயமாகத் துணைபோகாது.
சமீபத்தில், கடந்த வருடத்தில் (2024) வெளிவந்திருக்கும் ஒரு முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலை நான் பெற்று வாசித்துப் பார்த்தேன். அந்த நூல் குரூடமின் நூலின் மொத்தப் பக்கங்களில் நான்கில் ஒரு பங்கை மட்டுமே (410 pgs) கொண்டிருக்கிறது. முறைப்படுத்தப்பட்ட இறையியலை அருமையாக வடிவமைத்து போதகர்கள், இறையியல் கல்லூரி மாணவர்கள், கிறிஸ்தவர்கள் என்று அனைவருமே வாசித்து பயன்படக்கூடிய விதத்தில் நூல் அமைந்திருந்தது. இது சுருக்கமானதாக, ஒவ்வொரு தலைப்பும் ஒன்றரைப் பக்கங்களை மட்டும் கொண்டிருந்து நாளுக்கு ஒன்றாக வாசித்துப் பயன்படும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் சத்தியங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும் விளக்க ஆசிரியர் தவறவில்லை.
இதை எழுதிய கெவின் டியொங் சீர்திருத்த பிரஸ்பிடீரியன் பிரிவைச் சேர்ந்தவர். அதனால், ஞானஸ்நானம் பற்றியும், உடன்படிக்கை இறையியல் பற்றியும், திருச்சபைக் கோட்பாட்டில் சில அம்சங்களையும் பற்றி அவர் கொடுத்திருந்த விளக்கங்களை பாப்திஸ்து என்ற முறையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதைத் தவிர ஏனைய போதனைகள் பாரம்பரிய வரலாற்று சீர்திருத்த இறையியலின் அடிப்படையில் அமைந்திருந்தன. இறையியலின் முக்கியமான போதனைகளனைத்தையும், வரலாற்று இறையியல் உட்படத் தெளிவாக நுணுக்கமாக கெவின் டியொங் தந்திருக்கிறார். இந்த நூலைத் தயங்காமல் போதகர்களுக்கும், இறையியல் மாணவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் என்னால் அறிமுகப்படுத்த முடிந்தளவுக்கு, அளவில் பெரியதும், பிரபலமானதுமான குரூடமின் நூலை நம்பி அறிமுகப்படுத்த முடியவில்லை.
விடாப்பிடியான விசுவாசம்
2 இராஜாக்கள் 4:17-37
நாம் தொடர்ந்து 2 இராஜாக்கள் நூலை ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழில் சூனேமியப் பெண்ணைக் பற்றிய வசனங்களை 8-16 வரை ஆராய்ந்திருக்கிறோம். இந்த ஆக்கத்திலும் சூனேமியப் பெண்ணைக் குறித்த வசனங்களை 17-37 வரையுள்ள பகுதியில் ஆராயவிருக்கிறோம்.
பல வருடங்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சியில் பிரசங்கி ஒருவர் இந்த வேதப்பகுதிக்கு விளக்கமளித்ததை நான் இங்கு பதிவு செய்கிறேன். இந்த சூனேமியப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்த அற்புதமான காரியத்தைப் பற்றித்தான் அன்று அவர் விளக்கினார். அவர் என்ன சொன்னாரென்றால், இந்தப் பெண் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எலிசா தீர்க்கதரிசியோடு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டாளாம். ஆகவே அவள் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தனது தேவையை நிறைவேற்றிக்கொண்டாள். அதாவது அவள் தனது திட்டப்படி அந்த தீர்க்கதரிசிக்குத் தன் வீட்டில் ஒரு அறையை தயார் செய்து கொடுத்தாள். அவ்வாறு அவள் செய்தபோது அவளுடைய விசுவாசத்தின் காரணமாக அந்தத் தீர்க்கதரிசியால் அதை மறுக்கமுடியவில்லை. ஆகவே அவள் தன்னுடைய விசுவாசத்தின் காரணமாக தனக்குத் தேவையான ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்துக் கொண்டாள் என்று சொன்னார் அந்த பிரசங்கி.
அவர் சொன்னதிலிருந்து, நம்மிடம் போதுமான அளவுக்கு விசுவாசமிருந்தால் கடவுளுடைய கரத்தைப் பிடித்து நமக்குத் தேவையான காரியங்களைச் செய்துகொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அது எவ்வாறு முடியுமென்ற கேள்வி நமக்கு எழலாம். அதற்கு அவர் சொல்லுகிறார், ஆண்டவர் நமக்கு தெய்வீக அம்சத்தைக் கொடுத்திருக்கிறார், நாம் சரீரபிரகாரமாகவும், ஆத்மீகபிரகாரமாகவும், பொருள் ரீதியாகவும் நல்ல பலத்தோடு இருந்தால் ஆண்டவர் நமக்குத் தேவையானதை செய்யமுடியும். நாம் சரீரபிரகாரமாகவோ, ஆத்மீகபிரகாரமாகவோ, பொருள் ரீதியாகவோ பெலவீனர்களாக இருந்தால் கடவுளால் நம்மைப் பயன்படுத்த முடியாது என்று அந்தப் பிரசங்கி சொல்லுகிறார். வேதத்தில் இவ்விதம் எங்கு விளக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு, அந்தப் பிரசங்கி, ஆபிரகாமோடு ஆண்டவர் ஏற்படுத்தின உடன்படிக்கையில் இவையெல்லாம் அடங்கியிருக்கின்றன என்று பதிலளிக்கிறார்.
இதையெல்லாம் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைக்கு செழிப்பு உபதேசத்தைப் (Prosperity gospel) போதிக்கிற கூட்டத்தில் ஊழியம் நடத்திக்கொண்டிருக்கும் ஒருவர்தான் இந்தப் பகுதிக்கு இவ்விதம் விளக்கம் கொடுத்தார். இன்று எத்தனையோபேர் தொலைக்காட்சியில் தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறோமென்ற பெயரில் மேலே நான் குறிப்பிட்ட பிரசங்கியைப் போன்றவர்களிடம் வீணாய்ப் போகிறார்கள். அவர்களுடைய காதுகளுக்கும், மனதுக்கும் எது பொய், எது உண்மை என்று பிரித்தறியும் பக்குவமில்லாது இருக்கிறார்கள். இனி இந்தப் பகுதியில் தேவனுடைய வசனம் உண்மையிலேயே என்ன சொல்லுகிறது என்பதை நாம் கவனிப்போம்.
இந்தப் பகுதியை நாம் வாசிக்கிறபோது மேலே நான் குறிப்பிட்ட பிரசங்கி சொன்னபடி, எவ்விதமான சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தித் தீர்க்கதரிசியைத் தன்னுடைய விசுவாசத்தின் மூலமாகக் கடவுளைக் கொண்டு எதையும் செய்யவைக்கும்படி அந்தப் பெண் எதையுமே செய்யவில்லை. அவள் தீர்க்கதரிசிக்கு செய்த பணிகளனைத்தையும் எவ்வித தன்னலமும் இல்லாமல் செய்த பணிகளாகத்தான் வேதத்தில் நாம் காண்கிறோம். அந்தப் பகுதியை நன்றாகத் தெளிவாய் வாசித்துப்பார்க்கிறபோது அவள் தனக்கொரு பிள்ளை வேண்டுமென்று தீர்க்கதரிசியிடம் கேட்கவேயில்லை. அவள் இருதயத்தில் அப்படிப்பட்ட எண்ணம் எழவே இல்லை என்பதை நாம் பார்க்கமுடியும். தனக்கும் வயதாகிவிட்டது, தனது புருஷனுக்கும் வயதாகிவிட்டது என்பதால் தங்களுக்கு இனி பிள்ளை பிறக்கப்போவதில்லை என்பதை அவள் நன்றாக உணர்ந்திருந்தாள்.
எலிசா தீர்க்கதரிசியே அவளைப் பார்த்து உனக்கு என்ன வேண்டுமென்று கேட்டார். ஆனால் அவள்: இங்கு என்னுடைய மக்களோடு நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்று சொன்னாள். அதிலிருந்து நாம், அவள் போதுமென்ற மனத்தோடு ஆண்டவரை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தாள் என்பதைப் பார்க்கிறோம். இதுதான் இந்த சூனேமியப் பெண்ணைப்பற்றி நாம் கொடுக்கக்கூடிய விளக்கம். மேலே நாம் கவனித்த விசுவாச ஊழியம் நடத்திவந்த மனிதன் வேதத்தை மிகவும் தவறாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் காரியத்தைச் செய்து வருகிறார்.
இந்த வேதப்பகுதியிலிருந்து மூன்று காரியங்களைச் சிந்திப்போம்.முதலாவதாக, பிள்ளை பிறந்த விதத்தையும், இரண்டாவதாக, பிள்ளைக்கு ஏற்பட்ட மரணத்தையும், மூன்றாவதாக, பிள்ளை உயிர்த்தெழுந்த விதத்தையும் ஆராய்வோம்.
- பிள்ளை பிறந்த விதம்
இதை நாம் 2 இராஜாக்கள் 4:8-17 பகுதியில் வாசிக்கிறோம். அந்தப் பிள்ளை எப்படிப் பிறந்தது என்று அறிந்துகொள்ள இந்தப் பகுதியில் ஐந்து காரியங்களை நாம் கவனிக்க வேண்டும்.
முதலில், சூனேமியப் பெண்ணிற்கும் அவள் புருஷனுக்கும் பிள்ளைகள் இருக்கவில்லை. அப்படி இருந்தபோதும் அவர்கள் மிகவும் சந்தோஷத்தோடு வாழ்க்கையை அனுபவித்து வந்தார்கள். அவர்கள் தங்களுக்குப் “பிள்ளைகள் இல்லையே” என்று எண்ணி வருத்தப்படவில்லை. அவர்களுடைய வாழ்க்கையில் பிள்ளைகள் பிறந்திருந்தால் அவர்கள் நிச்சயமாக சந்தோஷமடைந்திருப்பார்கள். அவர்களை ஆண்டவருடைய வழியில் நடத்தியிருப்பார்கள். இருந்தபோதும் இஸ்ரவேலின் ஆண்டவர் தங்களுக்குப் பிள்ளைகளைக் கொடுக்கவில்லை என்பதற்காக அவர்கள் எந்தவிதத்திலும் ஆண்டவரைப் பற்றித் தவறாக எண்ணாமல் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். அதேநேரம் அவர்கள் உள்ளுக்குள் ஏமாற்றத்தோடு இருந்திருக்கலாம். அது யாருக்குத்தான் இல்லை? மனிதர்களாகிய அனைவரிடமும் அது சாதாரணமாகக் காணப்படும். இருந்தபோதும், அது தங்கள் வாழ்க்கையையோ, பணிகளையோ எந்தவிதத்திலும் பாதித்துவிடாதபடி அவர்கள் பார்த்துக்கொண்டார்கள். ஆண்டவர் தனது சித்தத்தின்படி தங்களுக்குப் பிள்ளையைக் கொடுக்கவில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதைப்பற்றி எவ்விதமான குற்றச்சாட்டை முன்வைத்ததையோ அல்லது பக்கத்து வீட்டாரிடம் குறைகூறிக்கொண்டிருந்ததையோ அவர்களுடைய வாழ்க்கையில் அடியோடு காணமுடியவில்லை. இதுதான் நாம் கவனிக்கவேண்டிய முதலாவது காரியமாகும்.
இரண்டாவதாக, ஆண்டவர் அவர்கள் வாழ்க்கையில் மிக அற்புதமாகச் செயல்பட்டார், கிரியை செய்தார் என்பதைப் பார்க்கிறோம். தீர்க்கதரிசியான எலிசா அந்தவீட்டார் தனக்கு அருமையாக விருந்துபசாரம் செய்ததைப் பார்த்து அவர்களுக்குத் தான் எதையாவது செய்யவேண்டும் என்று தீர்மானம் பண்ணினார். அப்படி அவர் முன்வந்து உனக்கு என்ன வேண்டும் என்று அவளிடம் கேட்டபோது அவள் எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அவள், என் மக்கள் மத்தியில் மிகவும் சந்தோஷத்தோடு இருக்கிறேன் என்று சொன்னாள். எலிசா தீர்க்கதரிசி பலமுறை அந்த சூனேம் ஊருக்குப்போய் இந்தக் குடும்பத்தைச் சந்தித்து வந்திருக்கக்கூடும். இதைக் கடந்த ஆக்கத்தில்கூட நான் குறிப்பிட்டிருந்தேன். ஏனென்றால் தீர்க்கதரிசிப் புத்திரர்களுக்கு போதிப்பதற்காக இஸ்ரவேல் முழுவதும் பயணம் செய்து வந்திருந்த இறையியலாளராகத்தான் அன்று எலிசா தீர்க்கதரிசி இருந்திருக்கிறார். அத்தகைய பிரயாணத்தின்போது இந்த ஊரில் அவர் நிச்சயமாக இந்தப் பெண்ணைச் சந்தித்திருக்கலாம். சில நேரங்களில் இவள் வீட்டில் கூட தங்கியிருந்திருக்கலாம். அப்படியிருந்தபோதும் எலிசா அவளுடைய வாழ்க்கையில் இந்தளவுக்குக் கருத்தாய் இந்த வீட்டில் பிள்ளைகள் இல்லையே என்றெல்லாம் கவனித்துப் பார்க்கவில்லை. இதனை அவருடைய வேலைக்காரனான கேயாசிதான் கவனித்து தீர்க்கதரிசியிடம் வந்து சொல்லுகிறான். ஆகவே தீர்க்கதரிசி தானாக இதையெல்லாம் கவனித்துச் செய்யவில்லை என்பதை இரண்டாவதாகக் கவனிக்கவேண்டும்.
மூன்றாவதாக, இந்த சூனேமியப் பெண் தீர்க்கதரிசியிடமிருந்து எந்தவிதத்திலும் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை என்பதைக் கவனிப்பது அவசியம். தீர்க்கதரிசி என்பவர் யார் என்பதையும், அவரால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதையும் அவள் நன்றாக அறிந்திருந்தாள். இருந்தபோதும் எனக்கொரு பிள்ளையைக் கொடு என்று அவள் ஒருபோதும் அவரிடம் கேட்கவில்லை. தீர்க்கதரிசியே அடுத்த வருடம் இதே நேரத்தில் உனக்கொரு பிள்ளை இருக்குமென்று சொன்னபோதும் அந்த நேரத்தில் அவள் அதை நம்பத் தயாராக இல்லை. அதற்காக தீர்க்கதரிசியின் வார்த்தையின்மீது அவளுக்கு நம்பிக்கை இல்லையென்று அர்த்தமில்லை. தனக்கும் தன் கணவருக்கும் வயதாகிவிட்டது என்று அவளுக்கு நன்றாக தெரிந்திருந்ததால் அவருடைய வார்த்தையை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
நான்காவதாக, எலிசாவின் வார்த்தையின் மூலம் மட்டுமே அவளுக்குப் பிள்ளை பிறந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். அவளுக்குப் பிள்ளை பிறந்த விஷயத்தில் அவள் எந்தவிதத்திலும் பங்குவகிக்கவில்லை என்பதை நாம் உணரவேண்டும். அதற்காக அவள் உபவாசம் இருக்கவோ, காணிக்கை கொடுக்கவோ, உடலை வருத்தியோ எதையுமே செய்யவில்லை. ஆகவே அவளுக்குப் பிறந்த பிள்ளை ஆண்டவர் அவளுக்குக் கொடுத்த ஈவாக இருந்தது. ஆண்டவர் அவளுக்கு ஒரு பிள்ளையைத் தன்னுடைய நேரத்தின்படி கொடுக்க வேண்டுமென்பது அவருடைய திட்டமாக இருந்தது. ஆகவேதான் நம்பமுடியாத அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, அதாவது வயதாகிப் பிள்ளைபெற முடியாத நிலையிலிருந்த கணவன் மனைவிக்கு ஆண்டவர் ஒரு பிள்ளையைக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். இது வேத வரலாற்றில் முதல் முறை நடந்த ஒரு காரியமல்ல. பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் பலருடைய வாழ்க்கையில் இதை நாம் கவனிக்கிறோம்.
இந்த நேரத்தில் நாம் ஆபிரகாமையும் அவன் மனைவி சாராளையும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது. ஆண்டவர் ஒரு பிள்ளையைக் கொடுக்கிறேன் என்று சொன்னபோது சாராள் சிரித்தாள் என்று பார்க்கிறோம். வயதாகிவிட்ட எங்களுக்குப் பிள்ளை பிறக்குமா என்று அவள் சிரித்தாள். பிள்ளை பிறக்கும் காலத்தையெல்லாம் மீறிப்போன ஒரு நிலைமையில் ஆண்டவர் அவர்களுக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்தார் என்று கவனிக்கிறோம். அப்படிக் கொடுத்த பிள்ளையின் மூலம் மனிதகுலம் விருத்தியடைந்தது மட்டுமல்ல, அந்த வழியில் இயேசு வரவேண்டிய திட்டம் இருந்தது. கர்த்தருடைய மீட்பின் திட்டங்களுக்குப் பயன்படும்படியாக ஆண்டவர் அவர்களுக்குப் பிள்ளையைக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஈசாக்குக்கும் அவன் மனைவிக்கும் இதேவிதமாகத்தான் நீண்ட காலமாகப் பிள்ளை இல்லாமல் இருந்து, பிறகு ஆண்டவர் பிள்ளையைக் கொடுத்தார். யாக்கோபுவுக்கும் ராகேலுக்கும் அநேக காலத்துக்குப் பிள்ளை இல்லாதிருந்து பிறகு பிள்ளை பிறந்தது. பிறகு வேதத்தில் எல்க்கானா அவனது மனைவி அன்னாளைப் பற்றி வாசிக்கிறோம். அவர்களுக்கும்கூட நீண்ட காலத்துக்குப் பிறகுதான் பிள்ளை பிறந்தது, அதற்காக அன்னாள் அழுது ஜெபித்திருக்கிறாள். பிறகு புதிய ஏற்பாட்டில் சகரியா அவனது மனைவி எலிசபெத்தைப்பற்றி வாசிக்கிறோம். இருவருக்கும் இதேவிதமாக நீண்ட காலத்துக்குப் பிள்ளை இல்லாதிருந்து பிறகு பிள்ளையை ஆண்டவர் கொடுத்தார்.
வேதத்தில் இதையெல்லாம் பார்க்கிறபோது ஆண்டவரின் உடன்படிக்கையின் அடிப்படையில் அவருடைய மீட்பின் திட்டங்களில் பங்குபெறும்படியாகவும், அந்த மீட்பின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறும்படியாகவும் குழந்தையை அவர்களுக்குக் கொடுத்தது மட்டுமல்லாமல், அந்தக் குழந்தைகளுக்கு மீட்பின் வரலாற்றில் பெரிய பங்கும் இருக்கும்படியாகக் கர்த்தர் செய்திருக்கிறார். ஆனால் இந்த சூனேமியப் பெண்ணைப் பார்க்கிறபோது அவளுடைய பிள்ளைக்கு அந்த விதத்தில் பெரிதாக ஒன்றும் நிகழவில்லை. அவர்களுடைய பிள்ளை பிறக்காமல் இருந்திருந்தாலும் மீட்பின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறியிருக்கும். உண்மையில் இந்த சூனேமியப் பெண்ணின் பெயரோ, அவளது புருஷனுடைய பெயரோ, அந்த பிள்ளையின் பெயரோகூட நமக்குத் தெரியாது.
பின் ஏன் அந்தப் பிள்ளையை ஆண்டவர் கொடுத்தார்? ஆண்டவர் தன்னுடைய மீட்பின் திட்டம் நிறைவேற வேண்டும் என்ற அடிப்படையில் நமக்குப் பிள்ளையைக் கொடுக்கத் தேவையில்லை. நமக்கு உதவி செய்வது ஆண்டவருக்குப் பிடித்திருக்கிறது. அவர் நன்மையின் தேவனாக, கிருபையின் தேவனாக இருக்கிறார். அவர் மிகவும் மனமகிழ்ச்சியோடு இவர்களுக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக ஒரு பிள்ளையைக் கொடுத்தாரே தவிர, தனக்கு அந்தப் பிள்ளையால் பெரிதாக ஏதும் ஆக வேண்டும் என்பதற்காகப் பிள்ளையைக் கொடுக்கவில்லை. ஆண்டவர் நமக்கு எதையாவது செய்ய நாம் சிறப்பான மக்களாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அவர் தன்னுடைய விருப்பத்தின்படி, தன்னுடைய சித்தத்தின்படி யாருக்கும் எதையும் செய்கிற தேவனாக இருக்கிறார். ஏன் இந்தக் குடும்பத்திற்கு ஆண்டவர் பிள்ளையைக் கொடுத்தார்? அவ்வாறு கொடுப்பது ஆண்டவருடைய விருப்பமாகவும், சித்தமாகவும் இருந்தது.
ஐந்தாவதாக, தீர்க்கதரிசியின் வார்த்தையில் இந்தப் பெண் நம்பிக்கை வைத்தாள். ஒருவேளை ஆரம்பத்தில் ஒரு கேள்வி எழும்பியிருக்கலாம். தீர்க்கதரிசி என்ன இப்படிச் சொல்லுகிறாரே என்று அவள் நினைத்திருக்கலாம். அந்தக் குழப்பமோ கேள்வியோ இருந்ததற்குக் காரணம் தீர்க்கதரிசியின் வார்த்தையில் நம்பிக்கையில்லாததால் அல்ல. தன்னுடைய வயது, சரீர பலவீனம், தனது கணவருடைய வயது, அவருடைய சரீர பலவீனம் எல்லாவற்றையும் நினைத்துத் தங்களுக்குப் பிள்ளை பிறப்பது நடைமுறையில் சாத்தியமா என்று அவள் நினைத்துப் பார்த்திருக்கலாம். ஆனால் அவள் ஒருநாளும் தீர்க்கதரிசியின் வார்த்தையில் நம்பிக்கை வைக்காமல் இருக்கவில்லை. தீர்க்கதரிசி சொன்னால் அது நடக்குமென்று உறுதியாக அவரையும், அவரது வார்த்தையையும் அவள் நம்பினாள். எங்கு தீர்க்கதரிசி இருக்கிறாரோ அங்குதான் தேவன் இருக்கிறார் என்பது இஸ்ரவேலின் ராஜாக்களுக்கும் தெரிந்திருந்தது, இஸ்ரவேல் மக்களுக்கும் தெரிந்திருந்தது. நடக்காத ஒரு காரியத்தை தீர்க்கதரிசி சொல்லமாட்டார். ஆகவே அவள் நிச்சயமாக தீர்க்கதரிசியின் வார்த்தையை நம்பினாள், கர்த்தரையும் நம்பினாள். உண்மையிலேயே தீர்க்கதரிசியை நம்புவது கர்த்தரை நம்புவதற்குச் சமம். ஆகவே இந்த மனுஷியின் வாழ்க்கையில் ஆண்டவர் அற்புதமாகக் கிரியை செய்து ஒரு பிள்ளையைக் கொடுத்தார் என்று பார்க்கிறோம். அவளுடைய வயிற்றில் எந்தவிதத்திலும் பிள்ளை பிறக்க வாய்ப்பில்லை, மருத்துவரோ வேறு எவருமோ உதவ முடியாது என்ற சூழ்நிலையில் இவ்வளவு காலத்திற்குப் பிறகு ஆண்டவர் ஒரு பிள்ளையைக் கொடுத்தார். இது எவ்வளவு சந்தோஷத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
- பிள்ளைக்கு மரணம் சம்பவித்தது
இதுவரை எந்தச் சந்தர்ப்பத்தில், எத்தனை அருமையான விதத்தில் ஆண்டவர் அந்தக் குடும்பத்திற்குப் பிள்ளையைக் கொடுத்தார் என்று கவனித்தோம். ஆனால் அந்தப் பிள்ளைக்கு இப்போது மரணம் சம்பவித்தது. 17 வசனத்தில் “அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து… ஒரு குமாரனைப் பெற்றாள்” என்று வாசிக்கிறோம். 19 வது வசனத்தில் அந்தப் பிள்ளை “என் தலை நோகிறது” என்று குறிப்பிடுகிறது. 20 வது வசனம் “அவள் மடியில் இருந்து செத்துப்போனான்” என்று விளக்குகிறது. அவள் கர்ப்பம் தரித்துப் பிள்ளை பெற்றாள், அந்தப் பிள்ளைக்குத் தலைவலி வந்து இறந்தது என்று நான்கு வசனங்களுக்குள்ளேயே நாம் வாசிக்கிறோம்.
இந்த சம்பவத்தை எவ்வாறு நாம் புரிந்து கொள்ளுவது? அந்தச் சின்னப் பையன் அந்த வீட்டிற்கு அதிக சந்தோஷத்தைக் கொண்டுவந்திருப்பான். பொதுவாகவே பிள்ளைகள் பிறந்தால் அதிகமாகக் கொண்டாடுவார்கள். நமது சமுதாயத்தில் திருமணம் முடிந்தவுடனேயே எப்போது பிள்ளை வரப்போகிறது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். பிள்ளை பிறக்கும்போது பெரிய கொண்டாட்டமாக இருக்கும். அதுவும் நமது சமுதாயத்தில் ஆண் பிள்ளை பிறந்துவிட்டால் மகா கொண்டாட்டந்தான். இன்று கிறிஸ்தவர்கள்கூட “ஆண்டவரே ஒரு ஆண் பிள்ளையைத் தாரும்” என்று உள்ளுக்குள் ஜெபிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். யாரும் பெண் பிள்ளைகளை விரும்புவதில்லை. எதையும் நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை. இது தமிழ் சமுதாயத்தில் ஆண்டாண்டு காலங்களாக இருந்து வரும் பண்பாட்டுச் சிந்தனை. ஒரு கிறிஸ்தவனைப் பொறுத்தவரையில் அவனுக்கு இத்தகைய பண்பாட்டுச் சிந்தனை இருக்கக்கூடாது. அவனுக்கு விசுவாசிக்குரிய வேத சிந்தனை இந்த விஷயத்தில் இருக்கவேண்டும். ஆண்டவர் எந்தப் பிள்ளையைக் கொடுத்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெண்பிள்ளை பிறப்பதைத் தாழ்வாகக் கருதக்கூடாது. இத்தகைய சிந்தனைகள் புறஜாதி இந்துப் பண்பாட்டிலிருந்து வரும் சிந்தனைகளாக இருக்கின்றன. பிள்ளை பிள்ளைதான். அது ஆண் பிள்ளையாகத்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறானது.
இந்தப் பகுதியில் ஒரு அற்புதத்தின் குழந்தையாக அந்தக் குழந்தை பிறந்திருந்தது. அந்தப் பிள்ளையால் பெற்றோர் அதிக சந்தோஷம் அடைந்திருப்பார்கள். அவர்கள் மட்டுமல்ல, அந்தக் கிராமமே சந்தோஷமடைந்திருக்கும். ஏனென்றால் அது அதிசயமாக பிறந்த குழந்தையாக இருந்தது. இந்த சூனேமியப் பெண்ணும் அவளது கணவனும் மிகவும் அருமையாக அந்தக் குழந்தையை வளர்த்திருப்பார்கள். இப்போது திடீரென்று எதிர்பார்க்காத விதத்தில் பிள்ளை இறந்துவிட்டது என்று வாசிக்கிறோம். அந்தப் பிள்ளைக்கு மோசமான தலைவலி வந்தது என்பதை 19 வது வசனத்தில் காண்கிறோம். “தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக் கொண்டுபோய் விடு என்றான். அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்” என்று இப்பகுதியில் வாசிக்கிறோம் (2 இராஜாக்கள் 4:19-20). மருத்துவரிடம் போகலாமா, வேண்டாமா என்று யோசிப்பதற்குள் அந்தப் பிள்ளை இறந்துவிட்டது என்று வாசிக்கிறோம். பெற்றோர்கள் இவ்வளவு அருமையாகப் பெற்ற பிள்ளை என்பதற்காக, அந்தப் பிள்ளையைப் பிழைக்க வைப்பதற்கு என்னென்னவோ செய்து பார்த்திருப்பார்கள். ஆனால் அந்தப் பிள்ளை இறந்துவிட்டது.
இங்கொரு விஷயத்தை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். எத்தனை அருமையான விசுவாசிகளாக இருந்தாலும், ஆண்டவரிடத்தில் வைத்திருக்கிற விசுவாசத்தில் இவர்களைப்போல இருந்தாலும், வாழ்க்கையில் துன்பமோ துயரமோ வராமல் இருக்காது. நீ கிறிஸ்தவனாகிவிட்டால் எந்த வியாதியும் வராது என்கிற போலிச் சுவிசேஷப் பேச்சிற்கெல்லாம் காதைக் கொடுக்கலாகாது. எல்லோருக்கும் வருவதுபோல் ஒரு கிறிஸ்தவனுக்குப் புற்றுநோய்கூட வரலாம்; அதால் இறக்கவும் நேரிடலாம். கோவிட் வந்தபொழுது அவிசுவாசிகள் மட்டுமா இறந்தார்கள்; எத்தனையோ கிறிஸ்தவர்கள் இறக்கவில்லையா? இதெல்லாம் நிகழ்வதற்குக் காரணம் உலகத்திலிருக்கும் பாவந்தான். பாவம் அந்தளவுக்கு உலகத்தையும் நம்மையும் பாதித்திருக்கிறது; பலவீனப்படுத்தியிருக்கிறது. ஆகவே கிறிஸ்தவர்களுக்கு நிச்சயம் துன்பம் வரும். கிறிஸ்தவர்களுக்குத் துன்பம் வராது என்று நினைப்பது ஒரு கனவு உலகில் வாழ்வதுபோல. அது தவறான எண்ணம். கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் இந்த உலகம் முடிகிறவரை பொதுவான விதத்தில் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும். ஆனால் அந்தத் துன்பங்களும், போராட்டங்களும், இடையூறுகளும் வாழ்க்கையில் வருகிறபோது ஒரு விசுவாசி அதை எவ்வாறு அணுகுகிறார் என்பதில்தான் ஒரு விசுவாசிக்கும் விசுவாசி அல்லாதவருக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது.
இப்போது சூனேமியப் பெண் என்ன செய்தாள் என்று பார்ப்போம். பிள்ளை இறந்துபோனவுடன் அவன் இறந்துவிட்டான் என்பதை அவள் இறுதி முடிவாக ஏற்றுக்கொள்ள மறுத்தாள். 25 வது வசனத்தில் “கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப் போனாள்” (2 இராஜாக்கள் 4:25) என்று வாசிக்கிறோம். ஏன் போனாள்? தன் பிள்ளை இறந்துபோனதை அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. 27 வது வசனத்தில் “பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்” (2 இராஜாக்கள் 4:27) என்று வாசிக்கிறோம். நீ எனக்குப் பிள்ளையைக் கொடுத்தாய், இப்போது அந்தப் பிள்ளை இறந்துவிட்டான். ஆகவே உன்னை நான் விடப்போவதில்லை என்று அவள் பிடிவாதமாக இருந்தாள்.
“அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான்” என்று 2 இராஜாக்கள் 4:27ல் வாசிக்கிறோம். எலிசா தீர்க்கதரிசியாக இருந்தபோதும் இது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்போது அவள் எலிசாவைப் பார்த்து: “நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்” (2 இராஜாக்கள் 4:28). அபத்தம் சொல்லவேண்டாம் என்றால் என்னை ஏமாற்றாதீர்கள் என்று சொல்லவில்லையா என்கிறாள். அதாவது அவருடைய வார்த்தையில் நம்பிக்கையில்லாமல் அவள் அவ்வாறு சொல்லவில்லை. தனது வயதையும், தனது கணவரின் வயதையும் கருத்தில்கொண்டு சும்மா ஏதாவது சொல்லி என்னை நம்ப வைக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறாள். இந்த இடத்தில் இந்தச் சூனேமியப் பெண்ணின் விசுவாசத்தின் உண்மையான தன்மைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. விசுவாசம் என்பது யாரோ ஒருவர் நம்மை வற்புறுத்தி நம்மை நம்ப வைக்கிற காரியமல்ல.
இந்தப் பெண்ணின் விசுவாசத்தைப் பற்றி இரண்டு காரியங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. முதலாவதாக, ஆண்டவர் எதை வெளிப்படுத்தியிருக்கிறாரோ அதை நம்புவதுதான் விசுவாசம். உறுதியாக எவ்வித சந்தேகமுமில்லாமல் ஆணித்தரமாக அவருடைய வார்த்தையை நம்புவதுதான் விசுவாசம். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் அவர் வார்த்தையில் தங்கியிருப்பதற்குப் பெயரே விசுவாசம். கர்த்தருடைய வார்த்தையிலிருந்து புறப்படாததாக இருந்தால், அந்த வார்த்தையில் தங்கியிருப்பதாக இல்லாமல் இருந்தால் எதுவும் விசுவாசமாகவே இருக்காது. ஆகவே இந்தப் பெண் தீர்க்கதரிசியின் வார்த்தையை நம்பினாள்.
கர்த்தர் உனக்கொரு பிள்ளையைக் கொடுப்பார் என்று சொன்னபோது அதை அவள் உறுதியாக நம்பினாள். ஏனென்றால் அந்த வார்த்தை ஒரு சாதாரண மனுஷனுடைய வார்த்தையல்ல. அது கர்த்தரிடத்திலிருந்து வந்த வார்த்தையாக இருந்தது. சாதாரணமாக சூழ்நிலையை வைத்துப் பார்க்கிறபோது அவ்விதமாக நடப்பதற்கு சந்தர்ப்பமுமில்லை வசதியுமில்லை. இருந்தபோதும் ஆண்டவர் இந்த சந்தர்ப்பங்களையெல்லாம் மீறி ஒரு காரியத்தைச் செய்யப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறபோது அதை எப்படி நான் நம்பாமல் இருக்க முடியும்? தேவனுடைய வார்த்தையில் உறுதியாக இருந்ததால்தான் அந்த மரணத்தை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆண்டவர் ஒரு அற்புதத்தை செய்து பிள்ளையைக் கொடுத்திருப்பதால் அந்தப் பிள்ளை வாழ்வான் என்று அவள் நம்பினாள். ஆண்டவரின் வார்த்தையின்மீது அந்தளவுக்கு விசுவாசம் இருந்ததை நாம் பார்க்கிறோம்.
இரண்டாவதாக, எலிசா தீர்க்கதரிசி இந்த சூனேமியப் பெண்ணிடம் இதற்குமுன் வரலாற்றில் நடந்ததொரு சம்பவத்தை கூறியிருந்திருக்கக்கூடும். நிச்சயமாக அவள் அதைக் கேள்விப்பட்டிருந்திருப்பாள். ஏனென்று கேட்டால், இதற்கு முன்பாக இருந்த எலியா தீர்க்கதரிசி இப்படிப்பட்டதொரு அற்புதத்தைச் செய்திருக்கிறார். 1 இராஜாக்கள் 17:17-24 -பகுதியை வாசித்துப் பார்க்கிறபோது சாறிபாத் என்கிற இடத்தில் ஒரு விதவையின் வீட்டிலே நடந்த அற்புதத்தை வாசிக்கிறோம். அங்கேயும் ஒருவன் இறந்து போய்விட்டான், எலியா அவனுக்கு உயிரைக் கொடுத்தார். அதை இவள் நன்றாக அறிந்து வைத்திருந்தாள். ஆகவே, ஆண்டவர் எனக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்திருக்கிறார், நிச்சயம் அவர் அதை வாழ வைப்பார் என்கிற நம்பிக்கை இவளுக்கு இருந்தது. இந்த இரண்டு காரியங்கள்தான் அவளுடைய பிள்ளையின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாதபடி செய்தது.
இது இரண்டும் கர்த்தரின் வார்த்தையின் அடிப்படையில் அவளுடைய நம்பிக்கையாக இருந்ததே தவிர, தேவனுடைய வார்த்தைக்கு முரணாக அவளுடைய விசுவாசம் இருக்கவில்லை. ஆகவே நம்முடைய விசுவாசமும் ஒரு கற்பனையாக இருக்கக்கூடாது. பலபேர் விசுவாசம் எனும் பெயரில் கற்பனையுலகில் வாழ்கிறார்கள். அதிகமான கற்பனைகளை நம்பி அவை விசுவாசத்தோடு சம்பந்தப்பட்டவை என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்விதமான கற்பனைகளையும் சிந்தனைகளையும் வேதத்தைக் கொண்டு ஆராய்ந்து பார்க்கிறபோது அவை எத்தனை போலியானவை என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். ஆகவே நம்முடைய எண்ணங்கள், நோக்கங்கள், நடவடிக்கைகள் எல்லாம் வேதத்தை சார்ந்தவையாக, வேதத்திலிருந்து புறப்படுபவையாக, வேதத்தை வைத்து ஆதாரம் காட்டக்கூடியவையாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவை வேத நம்பிக்கைகளே அல்ல. ஆகவே இவள் ஆண்டவருடைய வார்த்தையை நம்பினாள், அவருடைய ஞானத்தில் நம்பிக்கை வைத்திருந்தாள், அவருடைய பராமரிப்பில் நம்பிக்கை வைத்திருந்தாள். அவளுடைய விசுவாசம் அப்படிப்பட்டதாக இருந்ததால்தான் எலிசா தீர்க்கதரிசியின் காலைப் பிடித்துக்கொண்டு உங்களை விடமாட்டேன் என்று அழுதிருக்கிறாள்.
ஒரு வேத விளக்கவுரையாளர் இப்படியாக சொல்லுகிறார்: “கர்த்தருடைய கிருபையையும் வாக்குறுதிகளையும் தொடர்ந்து விசுவாசிப்பதே விசுவாசம். கர்த்தர் தனது வார்த்தையின்படி நடந்துகொள்ளுவார் என்பதே விசுவாசம். விசுவாசம் என்பது நாம் நினைப்பதற்கும் கேட்பதற்கும் மேலாகவும் கர்த்தர் செய்வார் என்பதை அறிந்து உணர்ந்திருப்பதே விசுவாசம். கர்த்தர் நம்மை ஏமாற்றவோ தவறான வழியில் ஒருபோதும் நடத்தவோ மாட்டார். அதுதான் விசுவாசம்”.
இப்போது நமக்கொரு கேள்வி எழலாம். அந்தப் பிள்ளை இறக்கக்கூடாது என்று ஆண்டவர் தீர்மானித்திருந்தால் அவன் ஏன் இறந்து போனான்? ஆண்டவர் தன் மக்களின் வாழ்க்கையில் தனது பராமரிப்பின் மூலம் செய்கிற காரியங்களைப் பற்றி இது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ஆண்டவருடைய பராமரிப்பை நாம் எப்போதும் பூரணமாகத் தெரிந்துகொள்ள முடியாது. நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற துன்பங்கள் துயரங்கள் கஷ்டங்களையெல்லாம் ஆண்டவர் தன்னுடைய திட்டங்களுக்காக அருமையாகப் பயன்படுத்திக்கொள்ளுகிறார். ஆகவே அப்படியான நிகழ்வுகள் நம் வாழ்க்கையில் நடக்கிறபோது, அவற்றைப் பயன்படுத்தி ஆண்டவர் நம்மைத் திருத்துகிறார், கிருபையின் மூலமாக நம்மை வளர்க்கிறார், நாம் பரிசுத்த வாழ்க்கையில் முன்னேறிப் போவதற்கும் உதவி செய்கிறார். மேலும் இதன் மூலம் ஆண்டவர் எவ்வளவு பெரியவர் என்பதை நமக்கு வெளிப்படுத்தி, நாம் அவரில் தங்கியிருக்கும்படியாகவும், அவரோடு இன்னும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளும்படியாகவும் செய்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆண்டவரைப் பொறுத்தளவில் இந்த உலகத்தில் நடைபெறுகிற எதுவும் தற்செயலாக நடக்கும் நிகழ்வு அல்ல.
- பிள்ளையின் உயிர்த்தெழுதல்
எலிசா இப்போது என்ன செய்கிறார் என்பதை 29-30 வது வசனங்களில் நாம் வாசிக்கிறோம். “அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய், என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான். பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.” (2 இராஜாக்கள் 4:29-30). கேயாசி எலிசா சொன்னபடி செய்தும் 31 வது வசனத்தில் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. “ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டு வந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.” (2 இராஜாக்கள் 4:31). கேயாசி அந்தத் தடியின் மூலமாக பெரிய அதிசயம் நடக்குமென்று நினைத்தான். ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு என்ன காரணம்? தீர்க்கதரிசியிடம் இருந்த விசுவாசமும், அந்த பெண்ணிடமிருந்த விசுவாசமும் கேயாசியிடம் இருக்கவில்லை. அவன் தடியை நம்பினானே தவிர கர்த்தரை நம்பவில்லை. அற்புதம் ஒரு தடியால் நடந்துவிடுமா? யாரை விசுவாசித்து அந்தக் காரியத்தைச் செய்யவேண்டுமோ அவரை விசுவாசித்து அந்தக் காரியத்தை அவன் செய்யவில்லை.
இங்கு நமக்கொரு பாடம் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு, கையில் வேதத்தை வைத்துக்கொண்டு, சபைக்கும் போய்வந்து, இருந்திருந்து ஜெபத்தையும் செய்து வருவதால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது. இவற்றைச் செய்வதால் மட்டும் ஒருவர் விசுவாசி என்று சொல்லிவிட முடியாது. ஆண்டவரை விசுவாசிப்பது என்பது ஒன்று, வெறுமனமே பக்தி என்கிற பெயரில் ஆலயத்திற்குப் போய் வருவது இன்னொன்று. பாரம்பரிய சபைகள் என்று இருந்து வரும் சபைகளில் நாம் எதைக் கவனிக்கிறோம்? தாத்தா, பாட்டி காலத்திலிருந்து நாங்கள் பரம்பரையாகக் கிறிஸ்தவர்கள் என்ற எண்ணத்தோடு அவர்கள் போலித்தனமான வாழ்க்கையை நடத்தி வருகிறார்களே தவிர அவர்களுடைய வாழ்க்கையில் மெய்யான இரட்சிக்கும் விசுவாசமில்லை. அவர்கள் வாழ்க்கையில் எந்த அற்புதத்திற்கும் வழியே இல்லை. ஏனென்றால் மறுபிறப்பாகிய பரிசுத்த ஆவியின் ஆவிக்குரிய அற்புதமே வாழ்க்கையில் நடந்திருக்காதபோது வேறு எந்த அற்புதத்தை ஆண்டவர் அவர்கள் வாழ்க்கையில் செய்துவிட முடியுமென்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நம்முடைய விசுவாசம் ஒரு போலி வாழ்க்கையாக இருந்துவிடக்கூடாது. இந்தப் பெண்ணின் வாழ்க்கையில் காணப்பட்டது போல நம்முடைய விசுவாசம் இருக்கவேண்டும்.
இங்கு என்ன நடக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனியுங்கள். “எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான். உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப்பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல்செய்து, கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல்கொண்டது. அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.” எனும் வார்த்தைகளை 2 இராஜாக்கள் 4:32-35 பகுதியில் வாசிக்கிறோம்.
எலிசா இந்தச் செயல்களையெல்லாம் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருக்கச் செய்தார். எவ்வாறு 1 இராஜாக்கள் 17 ஆம் அதிகாரத்தில் எலியா அந்த அற்புதத்தை செய்தாரோ அதேவிதமாக இங்கும்கூட அந்த அற்புதத்தை எலிசா செய்தார். உடனடியாக அந்தப் பிள்ளை உயிர்பிழைத்தது என்று கவனிக்கிறோம். எலிசா இதையெல்லாம் செய்ததற்குக் காரணமென்ன? தீர்க்கதரிசியோடு இருந்த ஆண்டவர் தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை எலிசாவுக்கு உணர்த்தியிருந்தார். தேவனுடைய ஞானத்தினாலும் அவருடைய வல்லமையினாலும் அந்தப் பிள்ளை அன்று உயிர்பிழைத்தான் என்று பார்க்கிறோம். அந்தத் தீர்க்கதரிசி கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியே தவிர, தீர்க்கதரிசியின் சொந்த வல்லமையினால் எதுவும் நடைபெறவில்லை. தீர்க்கதரிசியின் மூலமாக உயிர் கொடுப்பதும் நானே, ஒருவன் மரிப்பதற்குக் காரணமும் நானே என்று தேவன் இங்கு நமக்குக் காட்டுவதைப் பார்க்கிறோம். இது தேவனால் நடந்த அற்புதம்.
விசுவாசத்தைக் குறித்த இரண்டு பாடங்கள்
- மெய்யான விசுவாசம் எந்தவிதமான தடங்களும் இல்லாமல் தேவனுடைய வாக்குறுதிகளில் தாழ்மையோடு உறுதியாகத் தங்கியிருக்கும்.எந்தவிதத்திலும் ஒரு சந்தேகத்தை இருதயத்தில் கொண்டிராமல் தேவனுடைய வார்த்தையை உள்ளபடியே மனதில் ஏற்று அவருடைய பரிசுத்தமான வாக்குறுதிகளை மிகத்தாழ்மையோடு நம்புவதுதான் விசுவாசம். ஒரு கருவிபோல் பயன்படுத்தி கர்த்தரிடத்தில் காரியம் சாதித்துக் கொள்ளுவதற்காக உதவுவதல்ல விசுவாசம். ஆண்டவரைப் பற்றி மிக மோசமான ஒரு எண்ணத்தைக் கொண்டிருப்பவன்தான் விசுவாசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பார்ப்பான். நாம் நினைத்தபடி பயன்படுத்துவதற்கும், ஆட்டிப்படைப்பதற்கும் கர்த்தர் ஒரு பொம்மையல்ல. அவர் சர்வ வல்லவர், தன் சித்தப்படி எல்லாவற்றையும் செய்கிறவர். அவர் பரிசுத்தமுள்ளவராக, வல்லமையுள்ளவராக, இறையாண்மையுள்ளவராக, உலகத்தையும் பரலோகத்தையும் படைத்த தேவனாக இருக்கிறார். நாம் அவருக்கு முன்பாக ஒரு சாதாரண துரும்பாக இருக்கிறோம். ஆனால் ஆண்டவர் தன்னுடைய கிருபையினாலே தனக்கென ஒரு மக்களை தெரிவுசெய்து அவர்களில் இடைப்பட்டு தன்னுடைய மகிமைக்காகப் பயன்படுத்திக் கொள்ளுகிறார். விசுவாசம் இந்த உலகத்து மக்களின் சிந்தனையின் அடிப்படையில் இருந்துவிடக்கூடாது. ஆண்டவருடைய வாக்குறுதிகளில் அசைக்க முடியாதபடி, எந்தவித சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கை வைத்திருப்பதுதான் உண்மையான விசுவாசமாகும். ஆகவே நீங்கள் உங்கள் துயரமான சூழ்நிலையிலும் ஆண்டவரை நம்ப வேண்டும். எந்த நிலையிலும் ஆண்டவர் நமக்கு உதவ முடியும். ஏனென்றால் அவரால் முடியாதது ஒன்றுமேயில்லை. அவர் அற்புதங்களின் தேவனாக இருக்கிறார்.
- நம் வாழ்க்கையில் அன்றாட நடவடிக்கைகளில் விசுவாசம் நடைமுறையில் காணப்பட வேண்டும்.விசுவாசம் நம்முடைய ஒவ்வொரு செயலிலும் பார்க்கக்கூடியதாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயத்தில் வைத்திருக்கிற இரகசியம் அல்ல விசுவாசம். நாம் நடந்து கொள்ளும் விதம் நம் விசுவாசத்தின் அடிப்படையில் காணப்பட வேண்டும். விசுவாசம் அமைதியாக ஒரு ஓரத்தில் அடங்கியிருக்காது. சிலருக்கு விசுவாசம் என்கிற பெயரில் சில குருட்டுத்தனமான நம்பிக்கைகள் இருக்கும். அதை எதன் அடிப்படையில் எந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நம்புகிறீர்கள் என்று அவர்களைக் கேட்டால் அவர்களால் அதற்குப் பதிலே சொல்லமுடியாது. அது குருட்டு நம்பிக்கையாக மட்டுமே இருக்கும். இந்துப் பாரம்பரியத்திலிருந்து வருகின்ற குருட்டு நம்பிக்கையும், வேத அடிப்படையில் அதன் வாக்குறுதிகளின் மேல் நம்பிக்கை வைத்து வருகிற விசுவாசத்திற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. ஆகவே நம்முடைய விசுவாசம் நம்முடைய நடவடிக்கைகளில், எடுக்கின்ற தீர்மானங்களில், கடமைகளில், திட்டங்களில் காணப்பட வேண்டும். அதில் விசுவாசத்தைக் காணமுடியாவிட்டால் அதற்கு பெயர் விசுவாசமே அல்ல. நம்முடைய விசுவாசம் எவ்விதம் இருக்கிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
சூனேமியப் பெண்ணின் வாழ்க்கையில் மெய்யான விசுவாசத்தைக் காண்கிறோம். கர்த்தர்மேல் தனக்கிருந்த விசுவாசத்தை எலிசா தீர்க்கதரிசிக்கு முன்னால் அவள் காட்டினாள். தீர்க்கதரிசி ஊருக்கு வந்தபோது, கர்த்தர்மேல் அவள் நம்பிக்கை வைத்திருந்ததால், அந்தத் தீர்க்கதரிசி கர்த்தருடைய மனிதன் என்று அவள் நம்பியதால், அவரிடமிருந்து வருகிற வார்த்தை கர்த்தருடைய வார்த்தை என்று நம்பியதால், தனது விசுவாசத்தின் அடிப்படையில் அவருக்கு என்னென்ன செய்யலாமோ அதையெல்லாம் தன் கணவரோடு சேர்ந்து தீர்மானித்து அவள் செய்தாள் என்று பார்க்கிறோம்.
அவளுடைய செயல்களின் பொருளென்ன? அது சமுதாயத்தில் காணப்படும் சாதாரண விருந்தோம்பலல்ல, அவளுடைய விசுவாசம் அவளை அவ்வாறு செயல்படச் செய்தது. இன்னொரு இடத்திலும் அவளுடைய விசுவாசத்தைக் காண்கிறோம். அவள் விருந்துபசாரம் செய்தவேளை, உனக்கு என்னவேண்டும் நான் ஏதாகிலும் செய்கிறேன் என்று தீர்க்கதரிசி அவளைப் பார்த்துக் கேட்டபோது, அவள், என்னுடைய மக்கள் மத்தியில் போதுமென்கிற மனத்தோடு மிகவும் சந்தோஷத்தோடு வாழ்ந்து வருகிறேன் என்று சொன்னாள். அவளுடைய வார்த்தைகளுக்கு அர்த்தமென்ன? இங்கே அவளுடைய விசுவாசம் அவளை அவ்வாறு பேச வைத்ததைக் காண்கிறோம். அவளுடைய விசுவாசத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் தொடர்பு இருந்தது. அதுமட்டுமல்ல, தீர்க்கதரிசி உனக்குப் பிள்ளை பிறக்கும் என்று சொன்னபோது அவரோடு வாக்குவாதம் பண்ணாமல் அதை அவள் உறுதியாக நம்பினாள். ஆண்டவருடைய வார்த்தையை விசுவாசிக்க வேண்டியது விசுவாசத்தின் கடமை, ஆகவே அவள் அதை நம்பினாள். மேலும் அவள் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் தேவனுடைய சித்தத்தின்படியே நடந்தது. அவள் ஆண்டவரையும், அவருடைய ஞானத்தையும் நம்பினாள், போதுமென்கிற மனத்தோடு வாழ்ந்து வந்தாள், எவ்வித முறுமுறுப்பும் இல்லாமல் தன் வாழ்க்கையில் கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஆண்டவருக்காக உழைத்தாள், தீர்க்கதரிசிக்குப் பணி செய்தாள் என்று பார்க்கிறோம். இங்குதான் அவளுடைய விசுவாசம் அவளுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுவதைப் பார்க்கிறோம்.
நம் வாழ்க்கையில் அத்தகைய விசுவாசம் இருக்கிறதா? தானியேலை சிங்கத்தின் கெபியில் போட்டபோது அவனுடைய விசுவாசம் வேலை செய்தது அல்லவா! அவன் மகா துன்பமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டான், கர்த்தர்மேல் அவன் விசுவாசம் வைத்திருந்ததனால் ஆண்டவர் சிங்கத்தின் வாய்களை அடைத்து அவன் இறக்காமல் பார்த்துக்கொண்டார். வாழ்க்கை எப்போதும் மிகவும் ஆச்சரியமானது. அதில் சந்தோஷமான காரியங்களும் நடக்கும், வேதனை தரக்கூடிய நிகழ்வுகளும் நடக்கும். ஆனால் ஆண்டவர்மேல், அவர் வார்த்தையின்மேல் உறுதியான நம்பிக்கையை வைத்திருக்கிறவர்கள் அசாதாரண சூழ்நிலையிலும் தங்கள் விசுவாசத்தை நடைமுறையில் காட்டுவார்கள். இப்படித்தான் விசுவாசிகளின் வாழ்க்கையில் மெய்யான விசுவாசம் வேலை செய்கிறது. வேதத்தில் வாசிக்கிற ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் இதேவிதமாகத்தான் விசுவாசம் செயல்படுவதை வாசிக்கிறோம்.
இப்போது உங்களைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சூழ்நிலைகள் நடைபெறுகிறபோது உங்கள் விசுவாசத்தைக் கிரியைகளில் காட்டுகிறீர்களா? கிரியை இல்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு சொல்லுகிறார் அல்லவா! உண்மையான விசுவாசம் நம் செயல்களில் காணக்கூடியதாக இருக்கவேண்டும். இந்த சூனேமியப் பெண்ணின் வாழ்க்கையானது அவளுடைய விசுவாசம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. இதை வாசிக்கிற இந்நேரத்தில் நம்முடைய விசுவாசம் செயல்களின் மூலம் பிரகாசமடையுமானால் அதுவே தேவனுடைய சித்தம், அதுவே கர்த்தருக்கு மகிமையைக் கொண்டுவரும். இந்நேரத்திலும்கூட கிருபையிலும் தேவனுடைய ஞானத்திலும் நம்மை வளர்த்துக்கொண்டு, இக்கட்டான காலப்பகுதியிலும் விசுவாசத்திற்குரியவர்களாக, ஆண்டவருடைய பிள்ளைகளை நேசித்து அவர்களுக்கு நற்கிரியைகளைச் செய்து நாம் முன்னோக்கிப் போகிறவர்களாக இருந்தால் தேவனுடைய சித்தம் நம் வாழ்க்கையில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமாகும். ஏனென்றால் அவருடைய வாக்குறுதிகளை நாம் நம்பிச் செயல்படுவதால் அவருடைய சித்தம் நிறைவேறுவதையும் நாம் பார்க்கிறோம்.
கிறிஸ்துவை நீங்கள் முழுமனத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இப்படியான விசுவாசம் கிறிஸ்துவின் மீது உங்களுக்கு இல்லாமல் இருந்தால், இது சிந்திக்க வேண்டிய நேரம். இந்தச் சூனேமியப் பெண் தான் விசுவாசித்த தேவன் எவ்வளவு பெரியவர், எவ்வளவு ஞானமுள்ளவர், எவ்வளவு வல்லமையுள்ளவர், தன் மக்களைத் தொடர்ந்து காக்கிறவர் என்பதை நம்முன் காட்டுகிறாள். அந்த விசுவாசத்தைக் கொடுக்கிற இயேசு கிறிஸ்துவிடம் நீங்கள் ஏன் வரக்கூடாது? அவரை ஏன் நீங்கள் நம்பி விசுவாசிக்கக்கூடாது? சிந்தித்துப் பாருங்கள். உங்கள் பாவத்தில் இருந்து மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை உங்களின் இரட்சிப்பிற்காக விசுவாசியுங்கள். அவரே பாவிகளின் இரட்சகர்; அவரே ஒரே தடவை தன்னைப் பாவங்களுக்குப் பலியாக சிலுவையில் அர்ப்பணித்தவர். அவராலன்றி இரட்சிப்பில்லை. மரித்து உயிர்த்தெழுந்த இயேசு உங்களுடைய பாவங்களிலிருந்து உயிர்த்தெழ உதவுவார்; நித்திய ஜீவனையும் அளிப்பார்.
உயிர் மாய்க்கும் நஞ்சும், கொசுத்தொல்லையும்
கர்த்தருடைய சத்தியத்தைத் தாங்கி வரும் வேதத்தைப் பற்றிய நம்முடைய அறிவும், அணுகுமுறையும் எப்போதும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அதாவது, வேதத்தை எப்போதும் தேவபயத்தோடு அணுகுவது அவசியம். அது நம்மைப் படைத்தவரின் சித்தத்தைத் தாங்கி வருவதால் அதைத் துல்லியமாக அறிந்துகொள்ளுவதற்கு நமக்குத் தேவபயமும் பரிசுத்த ஆவியானவரின் துணையும் மிகமிக அவசியம். இவை இரண்டும் இல்லாமல் வேதம் படிக்க முயல்வது ஆபத்து.
இவற்றோடு நிதானித்துப் பொறுமையோடு ஆராய்ந்து அறிந்துகொள்ளும் பக்குவமும் தேவை. ஏனெனில், வேதத்தைப் படிக்கும்போது தினசரி செய்தித்தாளை வாசிப்பதுபோல அதைப் படிக்கமுடியாது. இரண்டிற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு தெரியாதவன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. வேதம் ஆராய்ந்து கவனத்தோடு படித்தறிந்துகொள்ள வேண்டிய தெய்வீகச் செய்தி. அதைப் படித்தறிவதற்கு அவசியமான வேதவிதிகளைக் கற்றுத் தேர்ந்து அவற்றை முறையோடு பயன்படுத்தி தேவ செய்தியை அறிந்துகொள்ள நேரமும், நிதானமும், பொறுமையும் அவசியம்.
வெளியரங்கமாகவும், உள்ளரங்கமாகவும்
வேதத்தில் அனைத்துச் சத்தியங்கள் வெளியரங்கமாகவும், உள்ளடக்கமாகவும் விளக்கப்பட்டிருக்கின்றன. வெளியரங்கமாக விளக்கப்பட்டிருப்பவற்றை விளங்கிக்கொள்ளுவது சுலபமானது. உதாரணத்திற்கு, இரட்சிப்பிற்காக நாம் மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டும் என்ற போதனை. இது குழப்பத்திற்கிடமில்லாமல் புதிய ஏற்பாட்டின் பல்வேறு பகுதிகளில் விளக்கப்பட்டிருக்கின்றது. இதை விளங்கிக்கொள்ள நாம் பெரும் மேதையாக இருக்கவேண்டியதில்லை.
வேதத்தில் வேறு பல சத்தியங்கள், அதுவும் மிக முக்கியமானவையுங்கூட உள்ளரங்கமாக விளக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, வெளிப்படையாக ஒரே வசனத்தில் தரப்படாமல், முழு வேதத்தையும் ஆராய்ந்து அந்த சத்தியத்திற்குரிய அனைத்து வசனப்பகுதிகளையும் தொகுத்து ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டிய விதத்தில் தரப்பட்டிருக்கின்றன. கர்த்தரின் ஆராதனை பற்றிய சத்தியம் இந்தவிதத்தில்தான் தரப்பட்டிருக்கிறது. அதுபற்றிய முழுப் போதனையையும் ஒரு சில வசனங்களை மட்டும் பயன்படுத்தி அதற்குரிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. 1689 விசுவாச அறிக்கையின் 22ம் அதிகாரம் ஆராதனைத் தத்துவங்களை எட்டுப் பத்திகளில் விளக்குகிறது. அந்த விளக்கங்கள் அனைத்தும் முழு வேதத்திலும் இருந்து தொகுக்கப்பட்டவை; ஒரு சில இடங்களில் மட்டும் அவை வெளியரங்கமாக விளக்கப்படவில்லை.
இந்த இரண்டாவது வகை (உள்ளடக்கமாக) வேதவிளக்கவிதியைப் பயன்படுத்தும்போது நமக்கு நிதானமும், பொறுமையும், உழைப்பும் அவசியம். உள்ளடக்கமாக விளக்கப்பட்டிருக்கும் சத்தியங்களை ஆராய்ந்தறிய நேரமும் அதிகம் செலவாகும். இந்த இரண்டு வேத விளக்கவிதிகளையும் பயன்படுத்தியே நாம் வேத சத்தியங்களனைத்தையும் அறிந்துகொள்ளுகிறோம். இந்த இரண்டும் மிகமிக முக்கியமானவை.
மாறுபாடான கருத்துக்கள்
இந்த முறையில் கற்று அறிந்துகொள்ள வேண்டியதாகக் கர்த்தர் வேதத்தைத் தந்திருப்பதால்தான் சில வேளைகளில் அதைப் படிப்பவர்கள் ஒரு சில சத்தியங்களைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும் நிலை உருவாகின்றது. உதாரணத்திற்கு, ஞானஸ்நானத்தை எடுத்துக்கொள்ளுவோம்.
புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் என்ற வார்த்தைக்கு “முழுக்குதல்” என்ற அர்த்தம் மட்டுமே காணப்படுகின்றது. அதை ஜோன் கல்வினும் ஏற்றுக்கொள்ளுகிறார். அத்தோடு, இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது யோவான் ஸ்நானனுடன் தண்ணீருக்குள் போய் தண்ணீரிலிருந்து கரையேறியதாக மத். 3:16 விளக்குகிறது. இந்த முறையிலேயே கிறிஸ்துவைத் தங்களுடைய இரட்சிப்பிற்காகத் தனிப்பட்ட முறையில் விசுவாசித்த அனைவரும் புதிய ஏற்பாட்டில் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் பாப்திஸ்து சபைகள் கிறிஸ்துவை விசுவாசித்து அதை பகிரங்கமாக அறிவித்து சபை அங்கத்தவத்துவத்தை நாடுகிறவர்களுக்கு மட்டும் முழுக்கு ஞானஸ்நானத்தை அளிக்கிறார்கள். பாப்திஸ்து சபைகள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிப்பதில்லை. ஏனெனில் அவர்களுக்கு சுவிசேஷத்தைக் கேட்டு கிறிஸ்துவை விசுவாசிக்கும் பக்குவமோ, விசுவாசத்தை பகிரங்கமாக அறிவிக்கும் வயதோ, அங்கத்தவராகும் தகுதிகளோ கிடையாது.
இம்முறைக்கு மாறாக குழந்தை ஞானஸ்நானத்தைப் பின்பற்றும் திருச்சபைகள், பழைய ஏற்பாட்டுப் போதனையைப் பின்பற்றி, ஆபிரகாமுக்குக் கர்த்தர் அளித்த வாக்குறுதியின்படி (ஆதி 15) ஆபிரகாமின் பிள்ளைகளும் விருத்தசேதனத்தின் மூலமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள் என்ற விளக்கத்தின் அடிப்படையில், அது புதிய ஏற்பாட்டிலும் தொடர்வதாகக் கருதி பழைய ஏற்பாட்டு விருத்தசேதனத்தின் இடத்தை ஞானஸ்நானம் பிடித்திருக்கிறது என்று கூறி, புதிய ஏற்பாடு விசுவாசிகளாக இருப்பவர்களின் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள். இவர்கள் இஸ்ரவேலைப் பழைய ஏற்பாட்டு சபையாகவும், அதுவே புதிய ஏற்பாட்டில் தொடர்கிறதாகவும் கருதுகிறார்கள். புதிய, பழைய உடன்படிக்கைகளுக்கிடையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது இவர்களுடைய விளக்கம்.
மேல் கவனித்த ஞானஸ்நானம் பற்றிய இரண்டு விளக்கங்களையும் கவனித்தால் வேதத்தை இரண்டு தரப்பாரும் விளக்கும் முறையில் வேறுபாடு இருப்பதைக் காண்கிறோம். முதல் தரப்பினரான பாப்திஸ்துகள், பழைய உடன்படிக்கை பெருமளவுக்கு இஸ்ரவேலை நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்கிறது என்றும், புதிய உடன்படிக்கையிலேயே திருச்சபை கிறிஸ்துவை மையமாகக் கொண்டு உருவாகியது என்கிறார்கள். அந்தவிதத்தில் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் திருச்சபை காணப்படவில்லை என்கிறார்கள். அத்தோடு ஞானஸ்நானம் புதிய உடன்படிக்கை திருச்சபைக்குக் கொடுக்கப்பட்ட திருநியமம் என்றும் அதற்கும் விருத்தசேதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்கள். இரண்டாம் தரப்பினரான குழந்தை ஞானஸ்நானவாதிகள் இதற்கு மாறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
மாறுபாடான இந்த இரு வேறு கருத்துக்களும் வரலாற்றில் இருந்து வந்திருக்கின்றன. அதனால் இவ்விருவேறு கருத்துக்களின் அடிப்படையில் திருச்சபைகளும் அமைந்து வந்திருக்கின்றன. இவை இரண்டில் எந்தவொரு கருத்தையும் நாம் போலிப்போதனையாகக் கருதக்கூடாது; இவை ஒரே தலைப்பைக் குறித்த வேறுபட்ட வேத விளக்கங்கள் மட்டுமே. சீர்திருத்த பாப்திஸ்தான நான், இந்த விளக்கங்களில் விசுவாசிகளுக்கு மட்டும் முழுக்கு ஞானஸ்நானமளித்து சபை அங்கத்தவர்களாக்க வேண்டும் என்ற கோட்பாட்டை உறுதியாக நம்புகிறேன். அதற்குரிய விளக்கங்களே முற்றிலும் வேதத்தோடு பொருந்திப் போவதாகவும் நம்புகிறேன். அதேவேளை, அதற்கு முரணான கருத்தைக் கொண்டிருக்கும் குழந்தை ஞானஸ்நானவாதிகளை நான் போலிப்போதனையைப் பின்பற்றுகிறவர்களாகக் கருதவில்லை. இந்த விஷயத்திலும், திருச்சபைக் கோட்பாடு மற்றும் கர்த்தரின் உடன்படிக்கை ஆகிய போதனைகளிலும் அவர்களோடு நான் முற்றிலும் வேறுபடுகிறேன். இருந்தபோதும் எனக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் குழந்தை ஞானஸ்னானவாதிகள் தாங்கள் நம்பும் விளக்கத்தைத்தான் வேதம் தருகிறது என்று நம்புகிறார்கள். அவர்களுடைய கருத்துக்கள் என்னுடையதிலிருந்து முற்றிலும் வேறுபாடானவையே தவிர போலிப்போதனைகள் அல்ல. அவர்கள் இந்த விஷயத்தை விளக்கும் முறையில் தவறிழைக்கிறார்கள், வேதவிளக்க விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்பதே என் பதில். இருந்தும் இந்த விஷயத்தில் அவர்களுடைய கருத்துக்கள் போலிப்போதனை என்ற பட்டியலுக்குள் வராதவை.
குழந்தை ஞானஸ்நானம் போலிப்போதனை இல்லை என்பதால் நாம் பாப்திஸ்து சபைகளில் இனி முழுக்கு ஞானஸ்நானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இரண்டையும் பின்பற்றி வரலாமே என்று சிலர் நினைக்கிறார்கள். இது அடிப்படையிலேயே மிகத்தவறான எண்ணம். முழுக்குஞானஸ்நானம் வெறும் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயமல்ல; அது திருச்சபையின் அங்கத்துவ அமைப்போடு தொடர்புடையது, இரட்சிப்போடும் தொடர்புடையது. அதனால் ஒருபோதும் ஒரே சபையில் இரண்டு முறைகளையும் பயன்படுத்த முடியாது; அப்படிப் பயன்படுத்தினால் வேதம் விளக்கும் திருச்சபை பற்றிய கோட்பாட்டை நாம் நடைமுறையில் பின்பற்ற முடியாது. அதைக் குழிதோண்டிப் புதைக்க நேரிடும். இந்தப் பிரச்சனைக்கு என்ன வழி? முழுக்கு ஞானஸ்நானமும், குழந்தை ஞானஸ்நானமும் கிறிஸ்து மறுபடியும் வரும்வரை உலகில் இருக்கத்தான் போகின்றன. அதனால் நாம் நம்பிப் பின்பற்றும் திருச்சபைக் கோட்பாட்டை முறையோடு பின்பற்றி அதில் உறுதியாக இருந்து கர்த்தரை மகிமைப்படுத்தவேண்டும். எதிர்தரப்பைப் போலிப்போதனையாளராகக் கருதக்கூடாது. அவர்களுடைய கருத்தை நாம் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவில்லை; ஆதரிக்கவும் இல்லை; பின்பற்றப்போவதுமில்லை. இருந்தபோதும் அவர்கள் நமக்கு எதிரிகளல்ல. கொசுக்கடியை நாம் பொறுத்துக்கொள்வதில்லையா? அதுபோலத்தான் இந்தப் பூரணமற்ற உலகில் இதையும் நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
எது போலிப்போதனை?
போலிப்போதனை வேதத்தின் (கிறிஸ்தவத்தின்) அடிப்படைச் சத்தியங்களுக்கு (Foundational doctrines or essential teachings) முற்றிலும் விரோதமானது. அது கிறிஸ்தவத்தைத் தாங்கும் சத்தியத் தூண்களைத் தகர்க்கிறது. உதாரணத்திற்கு, திரித்துவப்போதனையில் நாம் மாறுபாடான விளக்கங்களைக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்வது போலிப்போதனைக்கு வழிகோளும். (இதற்குள் நுழையத் துணிந்திருக்கும் வெயின் குரூடமின் தவறான போதனை பற்றி இந்த இதழில் விளக்கியிருக்கிறேன்). கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பற்றியும் நாம் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கக் கூடாது.
இயேசு கிறிஸ்துவின் கன்னிப் பிறப்பு, அவருடைய தெய்வீக, மானுடத் தன்மைகள், அவருடைய அற்புதச் செயல்கள், அவருடைய பூரணப் பரிகாரப்பலி, அவருடைய மரணம், உயிர்த்தெழுதல், அவருக்கும் பிதாவுக்கும் இடையில் காணப்படும் ஐக்கியம், திரித்துவ அங்கத்தவர்களுக்கிடையில் காணப்படும் ஐக்கியம், அவர்களுடைய தன்மை, பணிகள் ஆகியவை பற்றியும், இறையாண்மை, நீதிமானாக்குதல், ஜென்மபாவம், மறுபிறப்பு, மனந்திரும்புதல், விசுவாசம், பரிசுத்தமாக்குதல் ஆகியவை பற்றியும், வேதம் பரிசுத்த ஆவியினால் ஊதித் தரப்பட்ட தன்மை, அதன் குறைபாடுகளற்ற தன்மை, அதனுடைய அதிகாரம், அதன் போதுமான தன்மை, பரலோகம், நரகம் ஆகியவை பற்றியும் நாம் ஒத்த கருத்துள்ளவர்களாகவே இருக்க வேண்டும். இந்த அடிப்படைப் போதனைகளைப் பற்றி வேதம் விளக்குகின்ற முறையான போதனைகளை நாம் அறிந்து பின்பற்ற உதவவும், போலிப்போதனைகளிடமிருந்து நம்மைப் பாதுகாக்கவுமே வரலாற்றில் திருச்சபை விசுவாச அறிக்கைகளையும், வினாவிடைப் போதனைகளையும் உருவாக்கி நமக்குத் துணை செய்திருக்கிறது. இவை போலிப் போதனைகளுக்கு நம்மிருதயத்தில் இடங்கொடுத்துவிடாதிருக்க உதவும். (போலிப்போதனைகள் பற்றிய மிக ஆழமான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள, “போலிப்போதனைக்கு விலகி நில்லுங்கள்” எனும் ஆக்கத்தை 2021, மலர் 27, இதழ் 4ஐ வாசியுங்கள்).
இவற்றோடு, வேதம் அறுபத்தி ஆறு நூல்களில் விளக்கமாகத் தரும் போதனைகளுக்கு அடிப்படையில் முரணான எந்தப் போதனையும் போலிப்போதனையே. கருக்கலைப்புக்கு வேதம் அனுமதி தரவில்லை. அதற்கு ஒத்துப்போவது போலிப்போதனைக்கு நம் வாழ்வில் இடங்கொடுப்பதற்குச் சமம். இஸ்லாமியரைப்போல இரண்டு மனைவிகளைக் கொண்டிருப்பது போலிப்போதனைக்கு இடங்கொடுப்பதாகும். அதற்கு கிறிஸ்தவன் வாழ்வில் இடந்தரக்கூடாது. சிலைவணக்கத்தில் ஈடுபடுவதும், தேவதூதர்களை வணங்குவதும், பிறமதப் போதனைகளைப் பின்பற்றுவதும், இந்து மதப் போதனைகளுக்கு ஏற்றவிதத்தில் கிறிஸ்தவப் போதனைகளுக்கு விளக்கங்கொடுப்பதும் போலிப்போதனைக்கான உறுதியான அடையாளங்கள். கிறிஸ்துவின் பரிகாரப்பலியை இழிவுபடுத்தும் கத்தோலிக்க மத “மாஸ்” (Mass) ஆணித்தரமான போலிப்போதனை. தள்ளுபடி ஆகமங்களை ஒதுக்கிவைக்காமல் இருப்பதும் போலிப்போதனைக்கான அடையாளம். அதனால்தான் கத்தோலிக்க மதத்தைக் கிறிஸ்தவமாகக் கருதமுடியாது. இன்று அநேகரை வஞ்சித்துக்கொண்டிருக்கும் செழிப்புபதேசப் போதனை (Prosperity gospel) போலிப்போதனையே. அது வேதத்தில் அடியோடு காணப்படாததொரு போதனையை அளித்து ஆத்துமாக்களை வஞ்சிக்கிறது. போலிப்போதனை எந்த ரூபத்தில் வந்தாலும் அது நம் உயிரை மாய்க்கும் நஞ்சு.
அடிப்படைச் சத்தியங்களும் அவ்வாறில்லாத சத்தியங்களும்
நிச்சயம் வேதத்தில் அடிப்படைச் சத்தியங்களும், அவ்வாறில்லாத ஆனால் அவசியமான சத்தியங்களும் காணப்படுகின்றன. உண்மையில் இப்படிப் பிரித்துப் பார்ப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், இது தவறானதொரு கருத்து உருவாகக் காரணமாக அமைந்துவிடுகிறது. சிலர் தவறான புரிந்துகொள்ளுதலால் அடிப்படைப் போதனைகளாக இல்லாத சத்தியங்கள் அவசியமற்றவை என்று கருதி அவற்றை ஓரங்கட்டிவிடுகிறார்கள். இது பொதுவாகவே கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படுகிறது. அவ்வாறு நினைப்பது மிகவும் ஆபத்தானது; ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஜோன் கல்வின் சொல்லுகிறார், “மெய்யான சத்தியத்தின் எல்லாப் பகுதிகளும் ஒரேவிதமானவையல்ல” என்று. கெவின் டீ யொங்கின் பின்வரும் விளக்கம் இந்த விஷயத்தில் கைகொடுக்கிறது, “சில சத்தியங்கள் விசுவாசம் நிலைத்திருப்பதற்கு அத்தியாவசியமானவை, ஏனையவை அது பூரணமடைய அவசியமானவை. சில தவறான போதனைகள் நாம் அவற்றை விளக்குகின்ற விதத்தில் தங்கியுள்ளன; ஏனையவை அவற்றின் நம்பிக்கையில் அடங்கியுள்ளன. சில சத்தியங்கள் நமது இரட்சிப்புக்கு அவசியமானவை, ஏனையவற்றை நாம் ஒருபோதும் நிராகரிக்க முடியாது. சில சத்தியங்கள் நாம் பரலோகத்தை அடைய அவசியமானவை; ஏனையவை நாம் பரலோகம் போகும் வழியில் துணை செய்பவை” (Daily Doctrine, Kevin DeYong, pg 19-20, Crosway, USA)
திருச்சபைக்கு தசம பாகத்தைக் கொடுப்பது அடிப்படைச் சத்தியமல்ல; அது அவசியமற்ற, அக்கறை காட்டத் தேவையில்லாத சத்தியமுமல்ல. அது அடிப்படைச் சத்தியப் பட்டியலில் வராவிட்டாலும், திருச்சபை கோட்பாட்டோடு தொடர்புடைய அவசியமான போதனை. அப்படியில்லாமலிருந்திருந்தால் நேரத்தை செலவிட்டு அதற்கான வேத விளக்கங்களைத் தந்து ஏ. டபிள்யூ. பிங்க் ஒரு சிறு ஆக்கத்தை எழுதியிருப்பாரா? கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவினர் அது பழைய ஏற்பாட்டோடு மட்டும் தொடர்புடையது, புதிய ஏற்பாட்டிற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பார்கள். அது அவர்களுடைய காலப்பாகுபாட்டுக் கோட்பாட்டின் தாக்கத்தினால் ஏற்பட்ட கருத்தே தவிர வேதத்தில் இருந்து புறப்பட்டதல்ல. தசமபாகம் கொடுப்பது புதிய ஏற்பாட்டிலும் தொடர வேண்டிய ஒரு போதனை.
இறுதிக்காலப் போதனைகள் அடிப்படைச் சத்தியங்களின் பட்டியலில் வரவில்லை. ஏனெனில், அப்போதனைகளுக்கும் இரட்சிப்பிற்கும் தொடர்பில்லை. அப்போதனைகளை விசுவாசிக்காதவர்களை இரட்சிப்படையாதவர்கள் என்று அழைக்கமுடியாது. இருப்பினும் இறுதிக்காலப் போதனைகள் அவசியமானவை; அக்கறைகாட்ட வேண்டியவை. அவை கர்த்தர் உலகத்தில் எந்தவகையில் செயல்படுகிறார் என்பதையும், மீட்பின் வரலாறு எவ்வாறு முடியப்போகிறது என்பதையும் விளக்குகின்றன. இல்லாதிருந்தால் தானியேலை தைரியப்படுத்த கர்த்தர் வரலாற்றில் நடக்கவிருக்கும் காரியங்களைத் தரிசனத்தில் வெளிப்படுத்தியிருப்பாரா?
துன்புறுத்தப்பட்ட திருச்சபைக்கு ஆறுதலளித்து அவர்களைத் தைரியப்படுத்தவே ஆண்டவர் வெளிப்படுத்தல் விசேஷத்தை, அவர்களுடைய முதல் நூற்றாண்டின் ஆவிக்குரிய தேவையை நிறைவேற்ற அளித்தார். ஆவிக்குரிய விதத்தில் நமக்குதவும் இறுதிக்காலப் போதனைகள் அடிப்படைப்போதனைகளாக இல்லாதிருந்தாலும், அவசியமற்றவையோ, ஒதுக்கித்தள்ளிவிட வேண்டியவையோ அல்ல. கெவின் டீ யொங்க் குறிப்பிடுவதுபோல், “ஆயிரம் வருட அரசாட்சி பற்றிய போதனை திரித்துவப் போதனையைப் போலவோ, கிறிஸ்துவின் தெய்வீக மானுடத் தன்மையைப் போலவோ அல்லது நீதிமானாக்குதலைப் போலவோ முக்கியமானதாக அல்லாவிட்டாலும் அது நாம் இந்த உலகத்தை எவ்வாறு அணுகவேண்டும், அதன் பண்பாட்டோடு நமக்கு எத்தகைய உறவு இருக்கவேண்டும் எனும் விஷயங்களில் நம்மில் செல்வாக்கு செலுத்துகின்றது. . . . ஆகவே, அதை ஒதுக்கிவைத்துவிடாமல் கவனத்தோடு ஆராய்ந்து படித்து வேதம் அதுபற்றி என்ன சொல்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்” (Daily Doctrine, Kevin DeYong, pg 367-368, Crossway, USA).
ஒரு குறிப்பிட்ட பகுதியினர் முன்குறித்தல், தெரிந்துகொள்ளுதல் ஆகிய போதனைகளில் நாம் அக்கறைகாட்டத் தேவையில்லை, இரட்சிப்பை அடைவதும், அதை அனுபவிப்பதும் மட்டுமே அவசியம் என்கிறார்கள். இவர்களுக்கு முன்குறித்தலாகிய போதனையும், தெரிந்துகொள்ளுதலாகிய போதனையும் கசப்பானவை. இவை அந்தளவுக்கு அவசியமற்றவையாக இருந்தால் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் இவை பற்றிய போதனைகள் ஏன் தரப்பட்டிருக்கின்றன? பவுல் அப்போஸ்தலனும், பேதுருவும் தங்களுடைய நிருபங்களில் ஆழமாகவும், ஆணித்தரமாகவும் இவற்றை விளக்கி விசுவாசிகளைத் தைரியப்படுத்தியிருக்கிறார்கள். இயேசுவும், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நாம் புறம்பே தள்ளுவதில்லை” என அறிவித்திருக்கிறார். இயேசுவின் இந்த வரிகள் முன்குறித்தலையும், தெரிந்துகொள்ளுதலையும் விளக்குகின்றன என்பது புரியவில்லையா? இவை இரண்டையும் உதாசீனப்படுத்துகிறவர்கள் மீட்புக்கான திரித்துவ தேவனின் நித்திய திட்டத்தையும் இறையாண்மையையும் கொச்சைப்படுத்தி உதாசீனப்படுத்துகிறார்கள். அவற்றை அவசியமற்றவையாகக் கருத இவர்களுக்கு யார் உரிமை தந்தது? இறையாண்மைகொண்ட கர்த்தரின் வார்த்தைக்கு எதிராக நிற்க இவர்களுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது? இதெல்லாம் அறியாமையின் அறிகுறிகள்.
புதிதாக சீர்திருத்த போதனைகளை அறிந்துகொள்கிற சிலர் கல்வினித்துவ ஐம்போதனைகள் மட்டுமே முக்கியமானவை, அடிப்படையானவை; வேறெதைப் பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை என்கிறார்கள். இதுவும் மிகவும் அறிவீனமான வார்த்தைகள். ஐம்போதனைகள் ஆர்மீனியத்துவத்திற்கெதிராக டோர்ட் கவுன்சிலால் தொகுக்கப்பட்டவை. அவை கல்வினித்துவத்தை எதிர்த்தவர்களுக்கு எதிரான வரலாற்றில் எழுந்த காலத்துக்கேற்ற பதில்கள் மட்டுமே. அவை மட்டுமே வேதமாகிவிடாது. இவற்றிற்கு மேல் அடிப்படைச் சத்தியங்கள் வேதத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஐம்போதனைகளைத் தாண்டி முன்னோக்கிப் போகாதவர்கள் வேதஞானத்திலும், கிறிஸ்தவ வாழ்க்கையிலும் பின்தங்கிப்போய் குறைபாட்டோடு மட்டுமே வாழ்வார்கள்.
கர்த்தர் தன்னுடைய வெளிப்படுத்தலான வேதத்தில் அவசியமற்ற எதையும் நமக்கு விளக்கவில்லை. பரிசுத்த ஆவியானவர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய அனைத்தையும் நமக்கு அருளித்தந்திருக்கிறார். அவரே எந்தெந்த சத்தியங்கள் அதிமுக்கியமான அடிப்படைப் போதனைகள், எந்தெந்த சத்தியங்கள் அவ்வாரில்லாத, ஓரங்கட்டப்படக்கூடாத சத்தியங்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள உதவுகிறார். அதனால் நாம் நினைத்தபடி சுயமாக எந்தப் போதனையையும் நம்முடைய வசதிக்கும், எண்ணங்களுக்கும் ஏற்றபடி அவசியமானவை, அவசியமில்லாதவை என்று தீர்மானித்து ஒதுக்கித்தள்ள முடியாது. கர்த்தரின் வார்த்தை தனக்குத் தானே விளக்கமளிக்கிறது. இயேசு கிறிஸ்துவும், அப்போஸ்தலர்களும், வரலாற்றில் திருச்சபையும், விசுவாச அறிக்கைகளும் இனங்காட்டி அவசியமானவையாக விளக்கும் போதனைகள் எல்லாமே நமக்குத் தேவையானவை.
உயிரை மாய்க்கும் நஞ்சிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியவேண்டும். அதேநேரம் கொசுத்தொல்லையைப் பொறுத்துக்கொள்ளவும் வேண்டும்! அடிப்படைப் போதனைகளில், ஒற்றுமை. அவ்வாறல்லாத போதனைகளில், சுதந்திரம். எல்லாவற்றிலும், அன்பு! எனும் தத்துவத்தை நாம் கைக்கொள்ள வேண்டும்.
1689 விசுவாச அறிக்கை – வாசகர் மதிப்பீடு
1689 விசுவாச அறிக்கை நூலுடனான என் பயணம் அதன் கடைசி இரண்டு அதிகாரங்களில் இருந்துதான் ஆரம்பமானது. பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் நண்பர்களாக சேர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் அவிசுவாசிகளின் ஆத்துமாவுக்கு என்ன ஆகும்? என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுந்தது. ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை முன்வைத்தார்கள். சீர்திருத்த போதனைகளின் ஆதிக்கம் எனக்குள் தலைதூக்கியிருந்த அந்த ஆரம்ப நாட்களில், கேட்பதை எல்லாம் அப்படியே நம்பி விடும் குணம் மாறி, காரணகாரியங்களோடு வேதத்தின் அடிப்படையில் அவற்றை சிந்தித்துப் பார்க்கும் எண்ணம் வேரூன்றியிருந்தது. எனவே இந்தக் கேள்விக்கான சரியான பதிலைத் தேடி, இறுதியில் 1689 விசுவாச அறிக்கையின் கடைசி அதிகாரத்தில் அதனைக் கண்டுகொண்டேன்.
மரணம் மற்றும் நியாயத்தீர்ப்பு குறித்த அதன் விளக்கங்கள் ஒவ்வொன்றையும் சந்தேகத்திற்கிடமின்றி என்னால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. கடந்த ஆறேழு வருடங்களில் தனிப்பட்டவிதத்தில், குடும்ப ஆராதனையில், வேதப்பாட வகுப்புகளில் என்று பலமுறை வாசித்தும், ஆய்வு ரீதியிலான அதன் போதனைகளைக் கேட்டும், அதன் சில பகுதிகளை மனப்பாடம் செய்தும். . . . என்று பலமுறை அலசி ஆராயப்பட்ட ஒரு நூலிது. பலமுறை இதை வாசித்திருந்தபோதும் “போதும்” என்ற எண்ணம் இன்றுவரையில் தோன்றியதில்லை. அத்தோடு ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் தனிப்பட்ட ஆத்மீக அனுபவம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு ஏற்றவகையில் மேலும் மேலும் ஆழமான வேத அறிவை அள்ளிக் கொடுத்து ஆச்சரியப்படுத்திய புத்தகமும் இதுவே.
1689 விசுவாச அறிக்கை 76 பக்கங்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நூல். ஆனால் பிரித்தானிய அரசரின் கிரீடத்தில் பதிக்கப்பட்டிருக்கும் பலவகையான விலையேறப்பெற்ற வைரங்கள் போல விலைமதிப்பில்லா அடிப்படை வேத சத்தியங்களை முறையாகத் தொகுத்து வழங்கும் ஒரு ஒப்பற்ற புத்தகமாகும். நூலுடனான எனது பயண அனுபவம் மற்றும் அதன் மூலமாக நான் அடைந்த பயன்கள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- நூல் முழுவதும் இறையியல் போதனைகளாக இருப்பதால் முதல் வாசிப்பிலேயே இதை இலகுவாக, எல்லாவற்றையும் புரிந்துகொள்வது இயலாத காரியம். போதகர் பாலா மூலமாக சீர்திருத்த போதனைகளுடன் தொடர்பு ஏற்பட்ட ஆரம்ப காலங்களில் இந்த நூல் என் கரங்களில் கிடைத்தது. ஆனால் அதை முழுமையாக வாசித்து முடிப்பது என்பது எனக்கு மிகவும் சவாலாகவே இருந்தது. பலமுறை அதன் முதல் சில அதிகாரங்களை மட்டும் வாசித்துவிட்டு தொடர்ந்து வாசிக்கும் ஆர்வம் இல்லாமல் வேறு புத்தகங்களை நாடிச் சென்று விடுவேன். (ஆர்வம் இல்லாமைக்கு காரணம் அதன் இறையியல் போதனையைப் புரிந்து கொள்ளும் அளவுக்குப் போதிய அறிவும் பொறுமையும் இல்லாமையே! என்று பின் நாட்களில்அறிந்து கொண்டேன்). கடைசியில் ஒருமுறையாவது நூலை முழுமையாக வாசித்து முடிப்பது எனத் தீர்மானித்து, அதற்காக நேரம் கொடுத்து கவனத்துடன் வாசித்து முடித்தேன். முதல் வாசிப்பில் மேலோட்டமாக அதன் இறையியல் போதனைகளோடு ஏற்பட்ட பரிச்சயம் என்னை மறுபடியும் நூலை வாசிக்கத் தூண்டியது. அதன் பின்னர் இன்றுவரையிலும் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை என்று தொடர்ந்து அதை வாசித்து வருகிறேன்.
- 1689 விசுவாச அறிக்கையை எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் நம்பிக்கையுடன் வாசிப்பதற்கு அதன் அறிமுகப் பகுதி மிகவும் உதவி செய்கிறது. குறிப்பாக விசுவாச அறிக்கை உருவான வரலாற்றுச் சூழல், அதற்கான அவசியம் மற்றும் திருச்சபை அரசமைப்பிலும், திருநியமங்களைப் பயன்படுத்துவதிலும் அதன் பயன்பாடுகள் குறித்த பல போதனைகளைத் தருகின்றது. மேலும் இந்த விசுவாச அறிக்கை சில மனிதர்களின் அறிவுசார்ந்த சித்தாந்தப் போதனைகளால் உண்டானதோ அல்லது “வேதம் மட்டுமே” என்ற சீர்திருத்த கொள்கைக்கு எதிரானதோ அல்ல! மாறாக இது “வேதத்தின் அடிமை” என்ற அடிப்படை உறுதியை நமது மனசாட்சிக்கு அளித்து தொடர்ந்து நம்பிக்கையுடன் நூலை வாசிக்க இந்த அறிமுகப் பகுதி மிகவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் அடிக்குறிப்பாகத் தந்திருக்கும் வசனங்களையும் சேர்த்து வாசிக்கும்போது இந்த உண்மை நமக்கு நன்கு உறுதிப்படும்.
- நூலை வாசித்திருக்கும் அனைவரும் பொதுவாகவே ஆச்சரியப்படும் ஒரு விஷயம் அதன் முறையான அதிகார ஒருங்கிணைப்பு. நூலில் தொகுக்கப்பட்டிருக்கும் இறையியல் போதனைகளைச் சரியாகப் புரிந்துகொள்ள, ஒரு “நூலேணியில் கீழ் முனையில் இருந்து ஒவ்வொரு படியாக மேலே ஏறுவது போல, புத்தகத்தின் அதிகாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக முறையாக வாசித்து, அதன் இறையியல் போதனைகளை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளும்போது முழுமையாக அதன் பயனை அனுபவிக்க முடியும். எடுத்துக்காட்டாக, நூலின் முதல் அதிகாரம் குறிப்பிடும் வேதாகமத்தின் முழுமையான, தவறிழைக்கவியலாத அதன் தெய்வீக அதிகாரத்தை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளாதவரையில் அதன் அடுத்தடுத்த அதிகாரங்கள் குறிப்பிடும் திரியேகத் தேவனையும், அவரின் ஆணை, படைப்பு, பராமரிப்பு, வீழ்ச்சி, உடன்படிக்கை, இரட்சிப்பு, . . . ஆகியவை குறித்த அடிப்படை வேதசத்தியங்களை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்ளவே முடியாது. நூலின் ஒரு அதிகாரத்தை அடுத்துவரும் அதிகாரத்தில் இருந்து பிரிக்க முடியாது. அதனால் ஒன்றை மற்றும் விசுவாசித்து இன்னொன்றை ஒதுக்கிவைக்க முடியாது.
- விசுவாச அறிக்கையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, ஆழமான பொருள் பொதிந்து காணப்படுகின்றன. எனவே ஒவ்வொரு வார்த்தையையும் அதன் சரியான அர்த்தம், அவற்றின் இலக்கண அமைப்பு ஆகியவற்றைப் புரிந்து வாசிப்பது மிகவும் அவசியம். உதாரணமாக, 2ம் அதிகாரத்தில் திரியேக தேவனின் குணாதிசயமாக “அவர் மாறாதவர்; அளக்க முடியாதவர்; என்றுமுள்ளவர்; புரிந்துகொள்ள முடியாதவர் (மனிதனுடைய சிந்தனைகளுக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டவர்); எல்லாம் வல்லவர்; எல்லாவிதத்திலும் எல்லையற்றவர்; மிகப்பரிசுத்தர்; மிகுந்த ஞானமுள்ளவர்; பெருஞ் சுதந்திரம் உள்ளவர்; முழுமையானவர்; . . .” என்று அந்த பட்டியல் நீளுகிறது. அந்த வார்த்தைகளின் அர்த்தத்தைச் சரியாக அறிந்து விசுவாசிக்கும்போதுதான் கர்த்தரின் பிரசன்னத்தைத் தரிசித்த பரிசுத்தவான்கள் ஏன் செத்தவனைப்போல அவர் பாதத்தில் விழுந்தார்கள் என்பதன் அர்த்தம் புரியும்; என் தேவன் எத்தனை உயர்ந்தவர்! என்ற மரியாதை, அதிர்ச்சி, பயம், பிரமிப்பு, ஆச்சரியம், நம்பிக்கை என பலவகை உணர்வுகளைக் கடந்து அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் கர்த்தர் மேலுள்ள நமது விசுவாசமும் அன்பும் உறுதிப்படும்; சர்வ வல்லமையும் ஞானமும் நிறைந்த நல்லவராகிய தேவனுடைய பராமரிப்பில் உறுதியான நம்பிக்கையும், திருப்தியும், மெய்யான சந்தோஷமும் உண்டாகும்.
- 1689 விசுவாச அறிக்கையை நமது கிறிஸ்தவ வினாவிடைப் போதனைகளோடு சேர்த்து வாசிப்பது, வாசிப்பை இலகுவாக்கி நமது புரிந்து கொள்ளுதலை மேம்படுத்த உதவும். அத்தோடு அடிப்படை சத்தியங்களைக் குறித்த பிரசங்கங்கள் கேட்பது, அது குறித்த விளக்கவுரை புத்தகங்களை வாசிப்பது, கிறிஸ்தவ வரலாறு குறித்த பரவலான அறிவைக் கொண்டிருப்பது ஆகியவை இந்த விசுவாச அறிக்கையின் மூலம் மேலான பயனைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும். குறிப்பாக, மனித சித்தம் என்ற இறையியல் போதனையை விளக்கமாக அறிந்துகொள்ள போதகர் பாலா அவர்களின் “மனித சித்தம்” என்ற நூல் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது, “மனித சித்தம்” என்ற வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் கூடவே ஆர்மீனிய, பேலேஜியனிச போலிப் போதனைகளும் அவற்றிற்கு எதிராகப் போராடிச் சத்தியத்தை நிலைநாட்டிய ஆகஸ்தீனும் நினைவில் தோன்றாமல் போவதில்லை. அதுபோலவே தேவமனிதனாகிய கிறிஸ்து “மனித உருவெடுத்து, ஒரே ஆளில் கடவுள், மனிதன் ஆகிய இருவேறு தனித் தன்மைகளைக் கொண்டு அன்றும் இன்றும் என்றும் தொடர்ந்து நித்திய தேவகுமாரனாக இருக்கிறார்” என்ற வரிகளை மனனம் செய்து படித்திருந்தும், “நித்திய தேவகுமாரன்” என்பதன் முழுமையான அர்த்தம் அடிப்படைச் சத்தியம் தொடர்பான ஒரு பிரசங்கத்தைக் கேட்டபோதுதான் சட்டென்று எனக்குப் புரிந்தது.
- “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பது போல வெறுமனே சத்திய அறிவை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவர் கிறிஸ்தவ வாழ்வை வாழ்ந்து விடமுடியாது. அதற்கு பரிசுத்த ஆவியாகிய தேவனின் உயிரூட்டலும், விசுவாச நண்பர்களின் அனுபவ உதவியும் மிகவும் அவசியம். எனவே நூல் விளக்கும் இறையியல் போதனைகளை விசுவாசித்து அதன்படி வாழ ஆவியானவரின் உதவிக்காக தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படும்போது அவற்றை சபை மூப்பர்கள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு சக விசுவாச நண்பர்களோடு நல்ல நட்புறவை வளர்த்து அவர்கள் பெற்றிருக்கும் கிருபையின் வரம், கிறிஸ்தவ அனுபவம், இறையியல் அறிவு ஆகியவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ளும்போது இந்த விசுவாச அறிக்கையின் போதனைகளை நமது தனிப்பட்ட வாழ்க்கையிலும் செயல்படுத்தி ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வு வாழ முடியும்.
அடுத்தபடியாக 1689 விசுவாச அறிக்கையின் மூலம் அடைந்த நன்மைகள் சிலவற்றைச் சுருக்கமாக இங்கு குறிப்பிடுகிறேன்.
- Pelagianism, Arminianism, Pragmatism, Gap theory, Dispensationalism, Pre-Millennialism போன்ற பல தவறான போதனைகளின் பிடியிலிருந்து விடுபட இந்த விசுவாச அறிக்கையின் மூலமாக கர்த்தர் உதவி செய்தார்.
- பல வருடங்களுக்கு முன் பிரசங்கி, உன்னதப் பாடல் போன்ற புத்தகங்கள் தேவனால் அருளப்படாத மனித சித்தாந்தங்கள் எனும் எண்ணம் எனக்குள் வேரூன்றி இருந்தது. ஆனால் முழு வேதமும் தேவ ஆவியானவரால் ஊதி அருளப்பட்டது என்ற உண்மையையும், தவறிழைக்கவியலாத வேதத்தின் தெய்வீக அதிகாரத்தையும் அறிந்து விசுவாசத்தோடு அதற்குக் கீழ்ப்படிய இந்த விசுவாச அறிக்கை மிகவும் உதவியது.
- சில வருடங்களுக்கு முன்பு இரட்சிப்பின் ஆசீர்வாதங்கள் குறித்த இதன் இறையியல் போதனைகள் என் எண்ணத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும், உள்ளத்தில் உண்டாக்கிய சந்தோஷத்தையும் இன்றும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
- வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளால் பிரச்சனைகளும் குழப்பங்களும் சோர்வும் உண்டாகும் நேரங்களில் எல்லாம் விசுவாச அறிக்கையின் 17 மற்றும் 18ம் அதிகாரங்களான, பரிசுத்தவான்களின் விடாமுயற்சி மற்றும் கிருபையின் நிச்சயமும் இரட்சிப்பும் ஆகிய அதிகாரங்களை வாசித்து அதன் மூலம் மிகுந்த ஆறுதலும் தைரியமும் அடைவதோடு, பராமரிப்பில் கர்த்தர் அளித்திருக்கும் கிருபையின் சாதனங்களை வைராக்கியத்தோடு பயன்படுத்தி இன்றுவரையிலும் தொடர்ந்து கிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்க உதவி செய்திருக்கிறது.
- தனிப்பட்ட வேத வாசிப்பில் ஒரு வேதப் பகுதியின் மையக் கருத்தைக் கண்டுபிடித்து அதனடிப்படையில் அந்த இறையியல் போதனையைப் புரிந்துகொள்ள விசுவாச அறிக்கை மிகவும் உதவி செய்கிறது.
- தெய்வீக பராமரிப்பு, கிறிஸ்துவின் மத்தியஸ்த பணிகள், உடன்படிக்கை இறையியல், நீதிமானாக்குதல், கிறிஸ்தவ சுதந்திரமும் மனசாட்சியின் சுதந்திரமும் போன்ற இறையியல் போதனைகளால் நடைமுறை வாழ்வில் நான் அடைந்த நன்மைகள் மிகவும் அதிகம். அவற்றை எல்லாம் விவரமாக எழுதினால் இந்த ஆக்கம் இன்னும் பல பக்கங்கள் நீண்டு விடும், எனவே இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இளம் பிள்ளைவாதம் நோய் வராமலிருக்க, குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் “போலியோ” சொட்டு மருந்து கொடுப்பார்கள். அதுபோலவே இளம் ஆத்துமாக்களின் நரம்பு மண்டலத்தை எளிதாகத் தாக்கி அவர்களின் ஆவிக்குரிய வாழ்க்கையில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திவிடும் கொடிய “போலிப்போதனை வைரஸ்”களிடமிருந்து விசுவாசிகளைக் காப்பாற்ற இந்த விசுவாச அறிக்கையின் இறையியல் போதனைகள் குறிப்பிட்ட இடைவேளையில் புகட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம். அப்போதுதான் “போலியோ அட்டாக்” இல்லாத ஆத்துமாக்களைக் கொண்ட ஆரோக்கியமான சபைகள் உருவாகும்; “சீர்திருத்தம்” எனும் சொல் சபையின் பெயர் பலகையில் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு சபை அங்கத்தினர்களின் இதயத்திலிருந்து ஆரம்பித்துச் செயலில் வெளிப்படும். அத்தோடு ஒவ்வொரு விசுவாசியும் தான் எதை விசுவாசிக்கிறேன் என்று உறுதியாக அறிந்து தயக்கம் இன்றி தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடவும் இந்த விசுவாச அறிக்கை மிகவும் உதவி செய்கிறது.
தமிழ் கிறிஸ்தவத்தின் வரலாற்று ஏடுகளில் பொறிக்கப்படவேண்டிய ஒரு மிகப்பெரியச் சாதனை! என்று 1689 விசுவாச அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பைச் சொன்னால் அது மிகையாகாது. போதகர் பாலா அவர்களின் கடினமான உழைப்பையும், மொழிபெயர்ப்புத் திறனையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. எங்கள் பிள்ளைகள் விசுவாச அறிக்கையை ஆங்கிலத்தில் கற்று வருவதால் இதே விசுவாச அறிக்கையை ஆங்கிலத்திலும் வாசித்திருக்கிறேன். எனவே மிகச்சரியான தமிழ் வார்த்தைகளைக் கண்டுபிடித்து எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார்! என்று அவரின் மொழிபெயர்ப்பைப் பார்த்து பலமுறை வியந்து போயிருக்கிறேன். கண்டிப்பாக இது தேவனுடைய கிருபையின் ஈவு என்பதில் சந்தேகமே இல்லை. போதகர் பாலா அவர்களுக்கும், சீர்திருத்த வெளியீடுகளுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
– ஷேபா, ஓமான்